புதுக்கவிதையே நவீன கவிதையின் வடிவமென உருவாகி நிலைபெற்ற அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கவிதை எழுதிக்கொண்டிருந்த பிரமிள், சி.மணி, பசுவய்யா, வைத்தீஸ்வரன் போன்ற கவிஞர்களின் வரிசையில் எழுதிக்கொண்டிருந்தவர் நகுலன். அந்தப் பிரதான கவிஞர்கள் கட்டமைத்த உலகங்களிலிருந்து விலகி வேறொரு உலகை வேறொரு மொழியில் எழுத அவர் முயற்சி செய்தார். வேறொன்றாகக் காட்சியளிக்கும் இந்த அம்சமே மற்ற படைப்பாளிகளிடமிருந்து அவரைத் தனித்துவம் நிறைந்தவராக நிலைநிறுத்தியது. நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மனம் மிக இயல்பாக உருவாக்கும் படிமங்களும் சொற்சேர்க்கைகளும் தமிழ்க்கவிதை உலகத்தின் அடையாளங்களாக திரண்டுவந்த வேளையில் வாழ்க்கையைப்பற்றிய ஒரு விமர்சனக்குறிப்பைப்போலவும் கசப்பையோ சலிப்பையோ முன்வைக்கும் ஒருசில கையறுநிலைச் சொற்களைப்போலவும் சொல்விளையாட்டு போலவும் தோற்றமளிக்கும் இன்னொரு வகையான அடையாளத்தை உருவாக்கியவர் நகுலன்.