எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு விஷ்ணுபுரம்
விருது அறிவிக்கப்பட்டு எங்கெங்கும் அவரைப்பற்றிய உரையாடல்கள் பெருகிப் பரவிக்கொண்டிருக்கும்
இத்தருணத்தில் சாகித்ய அகாதெமி விருதும் அவரைத் தேடி வந்திருக்கிறது. அவருடைய ஒரு சிறு இசை என்னும் சிறுகதைத்தொகுதிக்காக
அவர் இவ்விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவருடைய பன்னிரண்டாவது
சிறுகதைத்தொகுதி. இதையடுத்து நாபிக்கமலம்
என்னும் தலைப்பில் ஒரு தொகுதியும் வந்துள்ளது. கலைக்கமுடியாத ஒப்பனைகள் தொடங்கி நாபிக்கமலம்
வரைக்கும் அனைத்துத் தொகுதிகளுமே தமிழுக்குப் பெருமை சேர்ப்பவை.
Saturday, 31 December 2016
Sunday, 18 December 2016
இன்குலாபுக்கு அஞ்சலிகள்
1980-ல் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை
கிடைத்தது. புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் தொலைபேசி ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன்.
அங்கு இடதுசாரித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். தொழிற்சங்க நூலகத்தில் ஏராளமான
புத்தகங்கள் இருந்தன. என் ஓய்வுப்பொழுதுகளை அந்த நூலகத்திலேயே கழித்தேன். அங்கிருந்த
எல்லாப் புத்தகங்களையும் படித்துமுடித்தேன். என் வாசிப்பைப் பார்த்த தொழிற்சங்க நண்பர்கள்
எனக்காகவே புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார்கள். தம் வீட்டில் இருக்கும் புத்தகங்களையும்
கொண்டு வந்து கொடுத்தார்கள். அவர்கள் நம்பிய கொள்கைகளுக்கு வெளியே உள்ள விஷயங்களிலும்
நான் ஆர்வமுள்ளவன் என்று தெரிந்தபோதும்கூட, அவர்கள் என் மீது எப்போதும் போலவே நட்புணர்வுடன் இருந்தார்கள். எனக்குப் புத்தகங்களைக்
கொண்டு வந்து கொடுப்பதை அவர்கள் ஒருபோதும் நிறுத்தியதே இல்லை. நான் புதுச்சேரியில்
இருந்தவரைக்கும் எனக்குத் தேவையான புதிய புத்தகங்களை அவர்கள் வழியாகவே பெற்றுப் படித்தேன்.
இடதுசாரிச் சார்புள்ள அஸ்வகோஷ் என்னும் ராஜேந்திர சோழன், தணிகைச்செல்வன், பா.ஜெயப்பிரகாசம்,
பூமணி என ஏராளமான படைப்பாளிகளின் புத்தகங்களை நான் அப்போது விரும்பிப் படித்தேன். அந்த
வரிசையில்தான் இன்குலாப் எழுதிய சூரியனைச் சுமப்பவர்கள்
என்னும் கவிதைத்தொகுதியைப் படித்தேன்.
Saturday, 10 December 2016
மானுடச் சித்திரங்கள் - (புத்தக அறிமுகம்)
நீலகண்டனின் “உறங்கா நகரம்”
ஒரு நகரம் வளரும் விதம் ஆச்சரியமானது. வாய்ப்புகளைத் தேடி
நகரத்தைநோக்கி மனிதர்கள் வந்தபடி இருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பு
நகரத்துக்குத் தேவைப்படுகிறது. பிறகு, உழைக்கும் மக்களுக்கான சிறுசிறு
குடியிருப்புகள் உருவாகின்றன. அப்புறம், அவர்களுடைய தேவையை ஒட்டி வணிகநிலையங்கள்
அமைக்கப்படுகின்றன. பொழுதுபோக்கு நிலையங்கள் உருப்பெறுகின்றன. கோயில், குளங்கள்
தோன்றுகின்றன. கல்விநிலையங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. சாலைகள் போடப்படுகின்றன.
மின்சாரம் வருகிறது. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி புதியபுதிய தொழில்கள்
முளைக்கின்றன. நகரத்தின் எல்லாத் தமனிகளிலும் சிரைகளிலும் ரத்தம்
பாய்ந்தோடிக்கொண்டே இருக்கின்றது.
கலைநயமும் சொல்நயமும் - (புத்தக அறிமுகம்)
விட்டல்ராவின் ”நவீன கன்னட சினிமா”
எழுபதுகளில் வெளியான ‘சம்ஸ்காரா’ திரைப்படத்தோடு
புதிய அலைவீச்சைக் கொண்ட கன்னட மொழித் திரைப்படங்கள்
வெளிவரத் தொடங்கின என்பது ஒரு வரலாற்று உண்மை. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.
பல முக்கியமான ஆளுமைகளை நவீன கன்னடத் திரைப்பட உலகம் இந்தியாவுக்கு அளித்துள்ளது. கிரீஷ்
கார்னாட், எம்.எஸ்.சத்யு, ஜி.வி.ஐயர், நாக் சகோதரர்கள், பி.வி.காரந்த், பட்டாபி ராம
ரெட்டி, புட்டண்ண கனகல், கிரீஷ் காசரவள்ளி என சுருக்கமான ஒரு பட்டியலை நமக்கு வழங்குகிறார்
விட்டல்ராவ்.
Friday, 2 December 2016
தெப்பத்தை கரைசேர்க்கும் கலைஞன் - வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’
வண்ணதாசனின் சிறுகதைகளின்
மையங்கள் ஏறக்குறைய இளந்தூறலைப் போன்றவை. இளந்தூறலோடு இணைந்து வருகின்றன மண்ணின் மணமும்
மழையின் மணமும். மழை வலுக்கக்கூடும் என்ற எண்ணத்தால் பொங்குகிறது கிளர்ச்சி. வானெங்கும்
இருண்டு அடர்ந்த மேகத்திரள் அந்தக் கிளர்ச்சிக்கு நம்பிக்கையூட்டுகிறது. நனைந்தபடி
நடக்கவும் நடனமிடவும் தூண்டும் ஆசைக்கு அளவே இல்லை. வயலின் இசையென தூறலோடு சேர்ந்தொலிக்கிறது
ஒரு சிறு இசைக்கோர்வை. இசையின் காந்த இழுப்பில் தளைகளை விலக்கி மனிதர்கள் வாசலை விட்டிறங்கி
தூறலில் நனைகிறார்கள். எதிர்பாராத விதமாக திசைதெரியாமல் குழம்பி வீசும் காற்றின் வேகத்தில்
தூறல் சட்டென நிற்கிறது. இசையும் நிற்கிறது. கணநேர இன்பத்தை அல்லது இன்பம் போன்ற கனவை
மட்டுமே மனத்தில் நிரப்பிக்கொண்டு வாசலுக்குத் திரும்பி வந்து சேர்கிறார்கள். இளந்தூறல்
ஒரே நேரத்தில் இன்பத்தின் படிமமாகவும் இழப்பின் அல்லது வலியின் குறியீடாகவும் அமைந்துவிடுகிறது.
Monday, 28 November 2016
கனவு நனவான கதை - (புத்தக அறிமுகம்)
ஆறாம் வகுப்பில் எங்களுக்கு ஆசிரியராக இருந்த
ராமசாமி சாரை நினைத்தால் எனக்கு இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. எங்களுக்கு அவர்
எடுக்காத பாடமே இல்லை. தமிழ் நடத்துவார். கணக்கும் சொல்லித்தருவார். ஆங்கில எழுத்துகளை கூட்டி உச்சரிக்கும் விதங்களில்
இருக்கும் வேறுபாட்டை, மரங்களில் கொத்துக்கொத்தாகத் தொங்கும் புளியம்பழங்களைக் குறிபார்த்து
அடிக்கச் சொல்லித் தருகிற லாவகத்தோடும் சுவாரஸ்யத்தோடும் சொல்லித்தந்ததை மறக்கவே முடியாது.
ஒவ்வொரு நாளும் எங்கள் முன்னால் விலைமதிப்பற்ற புதையல்களை அவர் அள்ளிப்போட்டார் என்றுதான்
சொல்லவேண்டும். இந்தப் பாடங்களையெல்லாம் நடத்துகிற சமயத்தில் கொஞ்ச நேரம் புத்தகத்தைப்
புரட்டிப் பார்க்கவேண்டிய அவசியம் இருந்தது அவருக்கு. ஆனால், சரித்திரம், பூகோளம் நடத்துவதற்கு
எந்தப் புத்தகத்தையும் புரட்டிப் பார்க்கிற அவசியமே இருந்ததில்லை. அப்படியே நேரிடையாக
நினைவிலிருந்து அருவிபோலப் பொழியத் தொடங்கிவிடுவார்.
Wednesday, 23 November 2016
தமிழுக்குக் கிடைத்துள்ள புதையல் - வசனம்
எண்பதுகளின் தொடக்கத்தில் நான் கர்நாடகத்துக்கு
வந்தேன். பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் என்னும் இடத்தில்
இயங்கிக்கொண்டிருந்த முகாமுக்குச் செல்லும்படி சொன்னது எங்கள் நிர்வாகம். அங்கே
முகாம் பொறுப்பாளர் ஹோஸ்பெட்டிலிருந்து கொப்பள் என்னும் ஊர் வரைக்கும் முப்பத்திரண்டு
கிலோமீட்டர் தொலைவுக்கு தொலைபேசிக் கேபிள் புதைக்கும் அணியில் சேர்ந்துகொள்ளும்படி
சொன்னார். அபோது எங்கள் முகாமுக்கு அருகில் வாழ்ந்துவந்த பசவராஜ் என்பவர் எனக்கு
நண்பரானார். வீட்டையொட்டி ஒரு சின்ன பகுதியில் தேநீர்க்கடை நடத்திவந்தார். தேனீ
போலச் சுறுசுறுப்பானவர் அவர். எல்லா நேரங்களிலும் ஏதாவது ஒரு வேலையைச்
செய்துகொண்டே இருப்பார். கடைவேலைகள் எல்லாவற்றையும் அவரே செய்வார். பிறகு விறகு
வெட்டுவார். அருகில் ஓடும்
துங்கபத்திரை கால்வாயிலிருந்து குடங்களில் தண்ணீர் கொண்டுவருவார். துணிதுவைக்கும்
வேலையில் மனைவிக்கு உதவியாக இருப்பார். அடிக்கடி அவர் சொல்லும் ‘காயகவே கைலாச’
என்னும் தொடருக்கு, ஒருநாள் அவரிடமே பொருள்சொல்லும்படி கேட்டேன். உழைப்புதான்
கைலாசம் என்று சொன்னார் அவர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று தமிழிலும் ஒரு
தொடர் உண்டு என்றேன். அவர் புன்னகைத்துக்கொண்டார்.
Subscribe to:
Posts (Atom)