Home

Saturday, 16 July 2016

நெஞ்சிலிருந்து ஒரு சொல் - (கட்டுரை )


ரவி சுப்பிரமணியனின் ‘ஆளுமைகள் தருணங்கள்’ 

ஒரு குறிப்பிட்ட துறையில் காலம் முழுதும் அர்ப்பணிப்புணர்வோடு செயலாற்றுகிறவர்களும் அந்த ஈடுபாட்டுக்காக எல்லா விதமான இழப்புகளுக்கும் தயாரான மனநிலையில் இருப்பவர்களும் தம் இருப்பின் வழியாக மெல்ல மெல்ல திசைகாட்டிகளாக பேசப்படுபவர்களும் ஒரு சூழலில் பெரிய ஆளுமைகளாக அறியப்படுகிறார்கள். ஒரு பண்பாட்டுச்சூழலில் துறைதோறும் வாழும்  அனைத்து ஆளுமைகளுக்கும் முதல் மரியாதை கிடைத்தல் வேண்டும். ஆனால் எதார்த்த வாழ்க்கையில் அப்படி நிகழ்வதில்லை. எனினும் அந்த அமைதியை அல்லது புறக்கணிப்பை ஆளுமைகள் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. அவர்களுடைய கவனம் எல்லாத் தருணங்களிலும் தத்தம் துறைசார்ந்தே இயங்கும் தன்மையுடையதாகவே செயல்படுகிறது. நம் தமிழ்ச்சூழலில் இன்றுவரை இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம் போன்ற எல்லாத் துறைகளிலும் வாழ்ந்து மறைந்த ஆளுமைகளும் வாழும் ஆளுமைகளும் பலருண்டு. அவர்களைப்பற்றிய வாழ்க்கைப்பதிவுகளும் நினைவுக்குறிப்புகளும் மிகமிக முக்கியமானவை. ஒரு சூழலில் வரலாற்றை எழுதும் தருணத்தில் இத்தகு நினைவுக்குறிப்புகளுக்கு முக்கியமானதொரு இடம் உருவாகும்.

Friday, 1 July 2016

கண்காணிப்புக்கோபுரம் - புதிய சிறுகதைத்தொகுதிக்கான முன்னுரை






அதிகாலை நடைப்பயிற்சிக்கென வழக்கமாக நான் செல்லும் பூங்கா ஐந்து மணிக்கே திறந்துவிடும். நான் ஆறுமணிக்குச் செல்வேன். சரியாக அதே நேரத்தில் பயிற்சியை முடித்துவிட்டு வெளியேறுவார் ஒரு பெரியவர். தோற்றத்தை வைத்துத்தான் அவரை முதியவர் என்று சொல்லலாமே தவிர, அவருடைய நடைவேகம் ஆச்சரியமூட்டும் அளவுக்கு அதிகமாக இருக்கும். இந்திரா நகரில் உள்ள அபூர்வா கிளினிக்கில் பணிபுரியும் மருத்துவர் அவர். இரண்டுமூன்று முறை அவரிடம் உடல்நிலைப் பரிசோதனைக்காகச் சென்றிருந்ததால், அவரை எனக்குத் தெரியும். நல்ல உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசுவார். வணக்கம் சொன்னதும் புன்னகையோடு தலையை அசைத்தபடி கைகளை உயர்த்தி வணக்கம் சொல்லிக்கொண்டே வெளியேறுவார். அவருடைய வேகத்தை மனத்துக்குள் வியந்தபடி என் நடையைத் தொடங்குவேன். 

பிரயாணம் - தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்புக்கான முன்னுரை






இந்தத் தொகுப்பின் பத்தொன்பது சிறுகதைகளுக்கிடையே என்னுடைய முப்பத்துமூன்றாண்டு கால சிறுகதைவாழ்க்கை விரிந்திருக்கிறது. இது நான் ஒரு பறவையென பறந்து திரிந்த வானம். ஓர் ஆறென ஓடி உருவான தடம். காற்றென அலைந்து திரிந்த வெளி. உங்களுக்கும் எனக்கும் பொதுவான ஒருசில கணங்களாவது இத்தொகுப்பில் இருக்கக்கூடும்.

Monday, 27 June 2016

குழந்தையும் தெய்வமும் - (கட்டுரை)


     இந்திரா நகர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் அருகிலிருந்து புறப்பட்டு சாந்தி சாகர் உணவு விடுதியைக் கடந்து காவேரி பாடசாலையைநோக்கி அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி சீருடை அணிந்த பத்துப் பதினைந்து பிள்ளைகளை ஒரு பட்டாளமாக அழைத்துக்கொண்டு தினமும் வருவார்.  ரயில் விளையாட்டுபோல ஒரு சிறுவனின் இடுப்புப்பட்டையை அல்லது தோளை இன்னொரு சிறுவன் அல்லது சிறுமி பிடித்தபடி செல்வார்கள். சில சிறுவர்கள் குதித்துக்குதித்து உண்மையிலேயே சிக்குபுக்கு சிக்குபுக்கு என்று சொல்வது கேட்கும். மானசிகமாக அவர்களே ஒரு ரயிலாக மாறி அந்த சாலையைக் கடப்பார்கள்.  போக்குவரத்தை ஒழுங்குசெய்யும் காவலர் அந்த வரிசையைப் பார்த்ததுமே வாகனங்களை நிறுத்தி உதவி செய்வார்.

Saturday, 18 June 2016

பழங்களைத் தேடி - (கட்டுரை)


      புளியம்பழம், கொய்யாப்பழம், நாவற்பழத்துக்கெல்லாம் ஒரு பருவம் இருப்பதைப்போல வேப்பம்பழத்துக்கும் ஒரு காலம் உண்டு. கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் தொடங்கும் காலம் என்பது வேப்பம்பழங்கள் சேகரிக்கும் காலம். காற்று வேகமாக வீசும்போது சாலையின் இருபுறங்களிலும் உள்ள வேப்பமரங்களிலிருந்து பழங்களின் மணம் எங்கள் வீடுவரைக்கும் வரும். முதலில் நுகரும் கணத்தில் தித்திப்பாகப் படரத் தொடங்கும் மணம் நேரம் செல்லச்செல்ல கசப்பான குமட்டும் மணமாக மாறும். ஆரம்பத்தில் மட்டும்தான் அப்படிக் குமட்டும். பழகப்பழக அதை மனம் விரும்பி ஏற்றுக்கொள்ளும்.

Saturday, 11 June 2016

ஒட்டகம் கேட்ட இசை - (கட்டுரை)



     அரிசி, புளி, உப்பு, காய்கறி வாங்கிவர அம்மா கடைக்கு அனுப்பும்போது நடைஅலுப்பை மறப்பதற்காக, ஒரு மனப்பாடச் செய்யுளைப்போல "நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்.." பாட்டை உற்சாகமுடன் பாடிக்கொண்டே ஓடுவேன். அப்போது என் வயது பத்திருக்கலாம். ஏரியில் குளித்துவிட்டு, துவைத்த வேட்டியை உதறி முதுகுப்பக்கமாக இரண்டு கைகளாலும் விரித்துப் பிடித்து உலர்த்தியபடி "ஏரிக்கரைமேலே போறவளே பெண்மயிலே.." என்று பாடியபடி அப்பா நடப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தபடி கூடவே நடந்துவந்த காலம் அது. பின்கட்டில் துணிதுவைக்கும்போதும் புளிஉரிக்கும்போதும் மெல்லிய குரலில் "பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமோ.." என்று அம்மா பாடுவதையும் கேட்டிருக்கிறேன். ஞாயிறு மதியநேரத்திலும் புதன்கிழமை இரவிலும் ஒளிபரப்பப்படும் நேயர் விருப்பப்பாடல்களை வானொலியில் நாங்கள் எல்லாருமே கேட்போம். பாடல் என்பதை வரிகள் என்பதாகப் புரிந்துகொண்ட காலம் அது. வரிகளில் தொனிக்கும் மகிழ்ச்சியும் துயரமும் கசப்பும் மாறிமாறி மனத்திலும் சிறிதுநேரம் தேங்கிநின்றுவிட்டு, மறைந்துபோகும். மணலில் ஊற்றப்பட்ட தண்ணீர்போல. பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம் முழுக்க இப்படித்தான். பெரிதும் மாற்றமில்லை.

Wednesday, 1 June 2016

கே.ஜே.அசோக்குமாரின் கதையுலகம்


  
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் கணிப்பொறியில் நேரிடையாக தமிழில் எழுதும் முறை பரவலாக அறிமுகமானபோது, அப்போது எழுதிக்கொண்டிருந்த ஒருசிலர் உடனடியாக அந்தப் புதுமுறையைப் பயின்று தேர்ச்சி பெற்றுவிட்டார்கள். தினந்தோறும் கணிப்பொறியைக் கையாளக்கூடியவனாக இருந்தும்கூட, என்னால் அப்படி உடனடியாக  மாறமுடியவில்லை. ஒரு படைப்பை முழுமையாக கையெழுத்துப் பிரதியாக எழுதி வைத்துக்கொண்டு, அதற்குப் பிறகு ஓய்வாக அதைப் பார்த்து கணிப்பொறியில் எழுதும் வழிமுறைதான் எனக்கு வசதியாக இருந்தது. கணிப்பொறி என்பதை கிட்டத்தட்ட ஒரு தட்டச்சுப்பொறியாகவே நான் பயன்படுத்தி வந்தேன்.