கஸ்தூரிபாய் ஆதரவற்றோர் இல்லத்துடன் தொடர்பு
வைத்துக்கொள்ளத் தொடங்கி ஆறு ஆண்டுகள்
கழிந்துவிட்டன. எங்கள் ஐந்து திருமண நாள்களையும் ஐந்து
பிறந்த நாள்களையும் குழந்தை அபியின் மூன்று பிறந்த
நாள்களையும் இதே இல்லத்தில் தான் கழித்திருக்கிறோம். என்
மனத்தில் புதைந்து கிடக்கும் எண்ணற்ற சித்திரங்களுள் இந்த
இல்லத்தின் சித்திரம் மறக்கமுடியாத அனுபவம். சிறுவர்களும்
சிறுமிகளுமாக இருநூற்றுசொச்சம் பிள்ளைகள் தங்கியிருக்கும்
இல்லத்தில் சில பெயர்களை அடையாளங்களுடன்
சொல்லக்கூடிய அளவுக்குக்கூட எனக்கு இன்னும் ஞாபகம்
உள்ளது. பெயர் மறந்திருந்தாலும் சில முகங்கள் மட்டும்
நினைத்த கணத்தில் ஆழ்மனத்திலிருந்து மிதந்து தெரிகிற
அளவுக்குப் பதிந்திருக்கின்றன. என்றாலும் நித்யாவைப்பற்றி
நேரிடையாகத் தெரிந்து கொள்ளும் வரை அவள் பெயர்மட்டும்
எப்படியோ எங்கள் மனங்களில் பதியாமல் நழுவிப்போய்
விட்டது. அதை நினைக்கும்போது சற்றே கூச்சம் படர்வதைத்
தவிர்க்க முடியவில்லை.