1980 ஆம் ஆண்டில் புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் டெலிபோன் ஆபரேட்டராக நான் பணியில் சேர்ந்தேன். இருபத்துநான்கு மணி நேரமும் இயங்கும் அந்த நிலையத்தில் பல்வேறு நேரப் பிரிவுகளில் வந்து பணியாற்றுகிறவர்களாக நூறு பேருக்கும் மேல் வேலை செய்துவந்தனர். தொலைபேசி நிலைய வளாகத்திலேயே, இரவு நேரப் பிரிவில் வேலை செய்ய வந்தவர்கள் படுத்துறங்கி ஓய்வெடுத்துவிட்டுச் செல்வதற்கும் தொலைவான இடங்களிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே வருபவர்கள் இளைப்பாறுவதற்கும் வசதியாக ஒரு பெரிய ஓய்வறையும் அதற்கு அருகிலேயே ஒரு படிப்பறையுடன் கூடிய பொழுதுபோக்கு அறையும் இருந்தன.