காற்று குளிர்ச்சியாக இருந்தது. எனினும் உடல்முழுக்க கசகசவென்று வியர்வை துளிர்ப்பதை உணர்ந்தாள் மாலதி. அலங்கரிக்கப்பட்ட விளக்குகளுடன் மரங்கள் நிற்கும் கோலம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அங்கங்கே ஏற்பாடு செய்யப்பட்ட மேசைகளில் அருந்திமுடித்த மதுக்கோப்பைகளும் பாட்டில்களும் உண்டு முடித்த இறைச்சித் துண்டுகளும் கலைந்துகிடந்தன. நாற்காலிகளிலும் சோபாக்களிலும் நண்பர்கள் அடங்கிய குரலில் பேசியபடியும் சிரித்தபடியும் இருந்தார்கள். ஒரு கையில் அருந்தி முடிக்காத மதுக்கோப்பையும் மறுகையில் சிகரெட்டுமாக ஒருசிலர் மட்டும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். சிரித்த முகத்துடன் எல்லாரோடும் சில நிமிடங்கள் பேசியவண்ணம் வலம்வந்து கொண்டிருந்தான் ராகவன். அவனுடைய சகஜநிலையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தோழிகளிடமிருந்து விலகி ஒரு மரத்தடிக்கு வந்து நின்றாள் மாலதி.