தொடக்கப்பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தில் நான் தணியாத ஆர்வம் கொண்டிருந்தேன். அதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் எனக்கு ஆசிரியர்களாக இருந்த நவநீதம் டீச்சர், கண்ணன் ஐயா, கிருஷ்ணன் ஐயா ஆகியோர். பாட்டு, கதை, பாடம் எதுவாக இருந்தாலும் அவற்றைச் சொல்லும் விதத்தாலேயே கேட்பவர்களை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் சொல்லச்சொல்ல பாடல்வரிகளும் கதைக்கூறுகளும் நினைவில் நிரந்தரமாகப் பதிந்துவிடும். எல்லா ஆசிரியர்களும் பாடம் படிப்பதை ஒரு விளையாட்டுக்குப் பயிற்சி கொடுப்பதைப்போல மாற்றிவிடும் திறமை கொண்டவர்கள்.