தமிழ்ச்சூழலில் இலக்கிய மதிப்பீடுகளுக்கு வித்திட்டவர் க.நா.சு. இலக்கிய விமர்சகராக மட்டுமின்றி, மிகமுக்கியமான படைப்பாளியாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். அவர் எழுதிய பொய்த்தேவு தமிழின் முதன்மை நாவல்களில் ஒன்று. க.நா.சு.வின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய நாவல்களும் சிறுகதைத்தொகுதிகளும் மொழிபெயர்ப்புகளும் ஒவ்வொன்றாக வெளிவந்துள்ளன. புதிய தலைமுறை வாசகர்கள் அவற்றை விரும்பிப் படிக்கிறார்கள். இச்சூழலில் க.நா.சு. எழுதி, எத்தொகுதியிலும் சேர்க்கப்படாத சிறுகதைகளைத் தேடியெடுத்து விசிறி என்னும் தலைப்பில் ஒரு தொகுதியாகக் கொண்டுவந்திருக்கிறார் ராணிதிலக். அவருடைய தேடலுக்கு தமிழ்வாசக உலகம் கடமைப்பட்டுள்ளது.