இலக்கியத்தின் ஆர்வமுள்ள மலேசிய இளைஞர்கள் அதன் கலைநுட்பத்தை கூர்மையாக அறிந்துகொள்ளும் விதத்தில் பல்வேறு பயிற்சி முகாம்களையும் இலக்கியத்திருவிழாக்களையும் எழுத்தாளர் நவீன் ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவில் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். இந்த ஆண்டுக்குரிய வல்லினம் இலக்கியத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து நானும் நண்பர் ஜா.ராஜகோபாலும் விமானம் வழியாக கோலாலம்பூர் வந்து சேர்ந்தோம். என்னோடு என் மனைவி அமுதாவும் வந்திருந்தார். இந்திய நேரத்துக்கும் மலேசிய நேரத்துக்கும் இரண்டரை மணி நேர வித்தியாசம். இந்திய நேரப்படி 28.11.2024 அன்று நண்பகல் 11.45க்குப் புறப்பட்ட விமானம் மலேசிய நேரப்படி மாலை 6.45க்கு கோலாம்பூருக்கு வந்து சேர்ந்தது. முறைப்படியான சோதனைகள் முடிந்து நாங்கள் வெளியே வரும்போது ஏழரை ஆகிவிட்டது. அப்போதே வானில் இருள் சூழந்துவிட்டது.