2009ஆம் ஆண்டின் இறுதியில் விட்டல்ராவ் பெங்களூருக்கு வந்தார். அவருடைய வீடு தம்புசெட்டிபாள்ய சாலையில் ராகவேந்திர நகரில் இருந்தது. அப்போது நான் அல்சூரில் குடியிருந்தேன். இடைப்பட்ட தொலைவு பன்னிரண்டு கிலோமீட்டர்தான் என்றாலும் இரு இடங்களையும் இணைக்கும் நேரடிச் சாலையோ, நேரடிப் போக்குவரத்தோ இல்லை. இரு பேருந்துகள் மாறிச் சென்று இறங்கி, இரண்டு கிலோமீட்டர் தொலைவு நடக்கவேண்டும். சில சமயங்களில் நண்பர் திருஞானசம்பந்தத்துடன் இணைந்து அவருடைய இரண்டுசக்கர வாகனத்தில் செல்வதும் உண்டு. எப்படியோ, மாதத்துக்கு ஒருமுறையாவது அவரைச் சந்திக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.