விடுப்பு நாட்களில் புதுச்சேரிக்குச் செல்லும் நேரங்களில் நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான இளம்பாரதியைச் சந்திப்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்தேன். அவருடைய வீடு எங்கள் வீட்டிலிருந்து நடந்துசெல்லும் தொலைவில் இருந்தது ஒரு காரணம். அவர் தன் நினைவிலிருந்து பகிர்ந்துகொள்ளும் பழையகாலத்து அனுபவங்கள் கேட்பதற்குச் சுவாரசியமானவை என்பது இன்னொரு காரணம். அவருடைய அறையில் கண்ணாடிச்சட்டமிட்ட நிலைப்பேழைத் தட்டுகளில் அடுக்கியிருக்கும் பழைய, புதிய புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் ஆசை மற்றொரு காரணம்.