Home

Showing posts with label அற்புதராஜ். Show all posts
Showing posts with label அற்புதராஜ். Show all posts

Monday, 12 September 2016

ஆல்பர்ட் என்னும் ஆசான் - புத்தக அறிமுகம்



கடந்த ஆண்டு அக்டோபர் மாத காலச்சுவடு இதழில் சுந்தர ராமசாமியின் நட்பு தனக்களித்த அனுபவங்களைப்பற்றி முகம்மது அலி எழுதிய கட்டுரை (இதயத்தால் கேட்டவர்) வெளிவந்துள்ளது. கட்டுரையுடன் முகம்மது அலிக்கு சுந்தர ராமசாமி எழுதிய நான்கு கடிதங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 1985 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் கொடைக்கானலில் நடைபெற்ற சிறுகதைப்பட்டறையில் கலந்துகொண்ட நினைவுகளின் பதிவை சு.ரா. எழுதியிருக்கிறார். பட்டறையில் கலந்துகொள்ளும்படி அழைத்தவர் ஆல்பர்ட் என்பதால் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகத் தெரியப்படுத்துகிறார். சு.ரா. போன்ற ஆளுமை மதித்த ஆளுமையாக ஆல்பர்ட் விளங்கியிருக்கிறார். நாகர்கோவில் பகுதியில் இயங்கிய சிந்தனை மையமாக சுந்தர ராமசாமி விளங்கிய சமயத்தில் திருச்சி பகுதியில் சிந்தனை மையமாக விளங்கியவர் ஆல்பர்ட். அவர் படைப்பாளி அல்ல. ஆனால் நல்ல படைப்புகளைக் கண்டுபிடித்துச் சொல்லக்கூடிய நுண்ணுணர்வு கொண்டவர். நல்ல சிறுகதை, நல்ல நாவல், நல்ல கவிதை, நல்ல திரைப்படம், நல்ல நாடகம் என ஒவ்வொன்றைப்பற்றியும் மீண்டும்மீண்டும் பேசி தன்னைச் சூழ இருந்தவர்கள்மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர்.