சங்க காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில் கவிஞர்கள் அனைவரும் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்கு வகையான வடிவங்களில் எழுதினார்கள். திருத்தக்கதேவர் விருத்தப்பாக்களை எழுதி உயிரூட்டினார். மரபான வடிவங்களை மீறி மக்களைக் கவர்வதற்காக புதிய வடிவங்களில் பாடல்களை எழுதுவது இலக்கிய உலகத்தின் தேவையாக இருந்தது. அருணகிரிநாதர் சந்தப்பாடல்களை எழுதி அவ்வடிவத்துக்கு ஒரு தொடக்கத்தை உருவாக்கினார். அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்துப் பாடல்களை எழுதி மற்றொரு பாதையை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து கண்ணி, கும்மி என பல புதிய வடிவங்கள் உருவாகின. பாரதியாரும் பாரதிதாசனும் இருவகை வடிவங்களிலும் எழுச்சியோடு பாடல்களை எழுதி மக்கள் மனத்தில் இடம்பிடித்தனர்.