கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டுவரும் இளம் வாசகர் வட்டம், கடந்த சில ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு நல்ல இலக்கிய நூல்களை அறிமுகப்படுத்தி, அவர்களிடம் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவருகிறது. அப்பயிற்சியின் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஒருசில மாணவமாணவிகள் இலக்கிய நூல்களைத் தேடிப் படிக்கத் தொடங்குகிறார்கள். இன்னும் ஒருசிலர் சொந்தமாக எழுதும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். கற்பனைத்திறனும் எழுத்தாற்றலும் கைவரப்பெற்ற மாணவமாணவிகளின் சிறப்பான படைப்புகள் நூல்வடிவில் வெளியாகி பிறர் கவனத்தை ஈர்க்கின்றன.