மொட்டைமாடியிலிருந்து
ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு பூந்தொட்டியை விளிம்பைப் பிடித்தபடி எடுத்துக்கொண்டு
படியிறங்கி வந்தவனைப் பார்த்து “ஒனக்கு எதுக்குடா சுப்பையா இந்த வீண்வேல?” என்று
கேட்டார் கந்தசாமி.
”தண்ணி ஊத்தி வளத்தவனே செடியும் வேணாம் கொடியும் வேணாம்னு உட்டுட்டு
போயிட்டான். அத காப்பாத்தணும்னு ஒனக்கு என்ன தலயெழுத்தா?
ஒனக்கு என்ன மனசுல பெரிய பாரிவள்ளல்னு நெனப்பா?”
வாசலில்
இருந்த இரும்புக்கதவு இடித்துக் கழற்றப்பட்டு ஏற்கனவே ஓரமாக அடுக்கப்பட்டிருந்த
ஜன்னல் சட்டகங்களோடு சேர்த்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அகலமாகத் திறந்திருந்த வாசல் சுவரை
ஒட்டியபடி வெளியே தொட்டிகளை வைத்தான்
சுப்பையா. பிறகு அசட்டுச் சிரிப்போடு ”அப்டிலாம்
ஒன்னுமில்லண்ணே. போறவங்க வரவங்க கண்ணுல படட்டுமேனுதான் கீழ
எறக்கி வச்சேன். காயற
வெயில்ல மேலயே கெடந்து தண்ணியில்லாம வாடி செத்துப் போவறதவிட வேணும்கறவங்க
எடுத்துட்டு போய் பொழைக்கவச்சா நல்லதுதானண்ணே” என்றான்.