எறும்பின் சாகசம்
ஒரு ஊரில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அதனுடைய கரை உயர்ந்த மேடு போல காட்சியளித்தது. அந்தக் கரையை ஒட்டி ஏராளமான செடிகொடிகளும் புதர்களும் உயரமான மரங்களும் இருந்தன. ஒரு புதருக்கு அருகில் ஒரு சின்ன எறும்புப்புற்று இருந்தது. அந்தப் புற்றுக்குள் ஒரு அம்மா எறும்பும் ஒரு குட்டி எறும்பும் இருந்தன.
அந்தக் குட்டி எறும்பு
அம்மா எறும்பைவிட எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். ஒரு இடத்தில் ஒரு கணம் கூட
அமைதியாகத் தங்கியிருக்காது. ஒரு புதரிலிருந்து இன்னொரு புதருக்கும் பிறகு
அங்கிருந்து மற்றொரு புதருக்கும் ஊர்ந்து போய்க்கொண்டே இருக்கும். அதற்கு ஒரு
வேலையும் கிடையாது. ஆனால் ஊர்ந்துகொண்டே இருக்கும் சுகத்துக்காகவே
விழித்திருக்கும் நேரமெல்லாம் அப்படி தடதடவென ஓடிக்கொண்டே இருக்கும். அந்தக்
குட்டி எறும்புக்கு அது ஒரு பொழுதுபோக்கு.
ஒருநாள் அது வேகமாக ஊர்ந்துகொண்டிருந்தபோது
நிலம் வழுக்கி உருண்டு சென்று தண்ணீரில் விழுந்துவிட்டது. அதுவரை அச்சமென்றால்
என்னவென்றே அறியாமல் வளர்ந்துவிட்ட அந்தக் குட்டி எறும்புக்கு முதன்முதலாக அச்சம்
ஏற்பட்டது. ”அம்மா அம்மா, காப்பாத்துங்கம்மா” என்று அம்மா எறும்பின் காதில் விழும்
வகையில் அலறியது.
குட்டி எறும்பின் அலறலைக்
கேட்டு அம்மா எறும்பு துடித்தது. தண்ணீரில் விழுந்து தவிக்கும் தன் குட்டி
எறும்பின் நிலையைக் கண்டு அதன் உடல் நடுங்கியது. “சொன்ன பேச்சைக் கேக்காம இப்படி
விழுந்து தானா துன்பத்தை வரவழைச்சிகிச்சே, இப்ப என்ன செய்வது?” என்று நினைத்து
வேதனைப்பட்டது.
“ஐயோ, என் குட்டி எறும்பை
யாராவது காப்பாத்துங்களேன்” என்று அலறியது அம்மா எறும்பு. அதன் அலறலை ஒருவரும்
பொருட்படுத்தவில்லை. என்ன செய்வது என்று
புரியாமல் அந்த அம்மா எறும்பு தவித்தது. வேகவேகமாக ஊர்ந்து சென்று கரைக்குப்
பக்கத்தில் நின்று கதறித் துடிக்கும் குட்டி எறும்பைப் பார்த்து ஆறுதல் சொன்னது.
அடுத்த கணமே மேலேறி வந்து உதவிக்கு யாராவது கிடைக்கமாட்டார்களா என்று நான்கு
பக்கங்களிலும் பார்வையைச் சுழற்றித் தேடியது.
அப்போது கரையோரத்தில்
எங்கிருந்தோ ஒரு தவளை தத்தித்தத்தி குதித்தபடியே வந்து நின்றதை எறும்பு பார்த்தது.
உதவிக்கு ஆள் கிடைத்துவிட்டதை நினைத்து அதன் மனம் ஆறுதல் அடைந்தது. உடனே வேகவேகமாக
தவளைக்கு அருகில் சென்று வணக்கம் சொல்லிவிட்டு, “தவளையண்ணா, தவளையண்ணா, நீங்க
எனக்கு ஒரு உதவி செய்யணும்” என்று கேட்டுக்கொண்டது. “என்ன உதவி?” என்று திரும்பிப்
பார்த்துக் கேட்டது தவளை. ”என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி விழுந்திடிச்சி. எப்படியாவது
அதைக் காப்பாத்துங்க தவளை அண்ணா. உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்” என்று கெஞ்சியது.
அம்மா எறும்பின் குரல்
காதில் விழுந்தபோதும், எதுவுமே கேட்காதமாதிரி அந்தத் தவளை நீண்ட நேரம் ஒரே
இடத்தில் உட்கார்ந்திருந்தது. பிறகு அலட்சியமாக தன் முகத்தைத் திரும்பி அம்மா எறும்பைப்
பார்த்து “என்ன சொன்ன நீ? எனக்கு சரியா காதுல விழலை. இன்னொரு தரம் சொல்லு” என்று
கேட்டது. “என் குட்டி எறும்பு தெரியாத்தனமா மண்சரிவில சிக்கி தண்ணீருக்குள்ள
விழுந்து உயிருக்குப் போராடுது. தயவுசெஞ்சி காப்பாத்துங்க தவளை அண்ணா” என்று
மன்றாடியது அம்மா எறும்பு.
“உன் குட்டி எறும்பைப்
பத்தி நான் ஏன் கவலைப்படணும்? அதனால எனக்கு என்ன லாபம்? பேசாம போ. போ. யாரையும்
என்னால காப்பாத்த முடியாது” என்று அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டு மறுபக்கம்
முகத்தைத் திருப்பிக்கொண்டது தவளை.
“தவளையண்ணா, தவளையண்ணா.
நீயே இப்படி சொன்னா, நான் வேற யாருகிட்ட போய் உதவி கேட்பேன். தயவுசெஞ்சி வந்து
காப்பாத்து தவளை அண்ணா” என்று மறுபடியும் கெஞ்சியது அம்மா எறும்பு.
“ஐய, ஒருதரம் சொன்னா உன்
காதுல விழாதா? கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க உடு. சும்மா தொல்லை பண்ணாதே.
அந்தப் பக்கமா போ” என்று கடுமையான குரலில் எறும்பை விரட்டியது தவளை.
அதைத் தொடர்ந்து தவளையிடம் எதுவும் கேட்க
விருப்பமில்லாத அம்மா எறும்பு அடுத்து யாரிடம் உதவி கேட்கலாம் என நினைத்து
அக்கம்பக்கமாகப் பார்த்தது.
அப்போது கரையோரமாக ஒரு
பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்தது. உடனே ”பாம்பு அண்ணா, பாம்பு அண்ணா” என்று
அழைத்தபடி அதற்கு அருகில் வேகவேகமாக நகர்ந்து சென்றது. அதற்குள் அந்தப் பாம்பு தன்
புற்றுக்கு அருகில் சென்றுவிட்டது. ”பாம்பு அண்ணா, பாம்பு அண்ணா. கொஞ்சம்
நில்லுங்க” என்று கூவியபடி மூச்சு வாங்கியவண்ணம் பாம்பின் முன்னால் சென்று நின்றது
எறும்பு. பிறகு மூச்சு வாங்கியபடி “பாம்பு
அண்ணா, பாம்பு அண்ணா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்” என்று கெஞ்சியது.
“என்ன உதவி?” என்று
திரும்பிப் பார்த்துக் கேட்டது பாம்பு. ”என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி
விழுந்திடிச்சி. அதைக் காப்பாதுங்கன்னு அந்தத் தவளைகிட்ட கேட்டேன். அந்தத் திமிரு
புடிச்ச தவளை முடியவே முடியாதுன்னு மூஞ்சியில அடிச்சமாதிரி பதில் சொல்லி
விரட்டியடிச்சிடுச்சி. நீ வந்து அந்த தவளையப் புடிச்சி தின்னு புத்தி புகட்டணும்.
வாங்க. உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்” என்று மன்றாடியது.
பாம்பு ஒருகணம் அந்த
எறும்பை விசித்திரமாகப் பார்த்தது. பிறகு “எனக்கு பசியே இல்லாத நேரத்துல நான்
எப்படி யாரையாவது புடிச்சி சாப்பிடமுடியும். உனக்கு வேற வேலை இல்லையா? பேசாம போ.
போ” என்று அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டு மறுபக்கம் முகத்தைத்
திருப்பிக்கொண்டது.
“பாம்பு அண்ணா, பாம்பு
அண்ணா. நீயே இப்படி சொன்னா, நான் வேற யாருகிட்ட போய் நிப்பேன்?” என்று மறுபடியும்
கெஞ்சியது அம்மா எறும்பு.
“நான் சொல்றது உன் காதுல
விழலையா? கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க உடு. சும்மா தொல்லை பண்ணாதே. அந்தப்
பக்கமா போ” என்று கடுமையான குரலில் எறும்பை விரட்டியது பாம்பு.
அதைத் தொடர்ந்து பாம்பிடம்
எதுவும் கேட்க விருப்பமில்லாத அம்மா எறும்பு அடுத்து யாரிடம் உதவி கேட்கலாம் என
நினைத்து அக்கம்பக்கமாகப் பார்த்தது.
அப்போது கரையோரமாக வசித்த
ஒரு பாம்பாட்டியின் குடிசையைப் பார்த்தது.
அவன் வீட்டுக்கு வெளியே கயிற்றுக்கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான்.
அவனுக்கு அருகில் சென்ற அம்மா எறும்பு ”பாம்பாட்டி அண்ணா, பாம்பாட்டி அண்ணா” என்று
அழைத்தபடி கட்டிலுக்கு அருகில் வேகவேகமாக நகர்ந்து சென்றது. அதற்குள் பாம்பாட்டி
தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்தான்.
“பாம்பாட்டி அண்ணா,
பாம்பாட்டி அண்ணா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்” என்று கெஞ்சியது.
“என்ன உதவி?” என்று
திரும்பிப் பார்த்துக் கேட்டான் பாம்பாட்டி. ”என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள
தவறி விழுந்திடிச்சி. அதைக் காப்பாதுங்கன்னு அந்தத் தவளைகிட்ட கேட்டேன். அந்தத்
திமிரு புடிச்ச தவளை முடியவே முடியாதுன்னு மூஞ்சியில அடிச்சமாதிரி பதில் சொல்லி
விரட்டியடிச்சிடுச்சி. அந்த தவளையப் புடிச்சி தின்னுன்னு பாம்புகிட்ட
கேட்டேன். எனக்கு இப்ப பசிக்கலை. நான்
சாப்பிடமாட்டேனு பாம்பு சொல்லிடுச்சி. நீ இப்பவே வந்து அந்தப் பாம்பை மயக்கிப்
புடிச்சி அடக்கி உன் தொழிலுக்கு எடுத்துக்கோ” என்று சொன்னது.
எறும்பினுடைய திட்டத்துக்கு
பாம்பாட்டி உடன்படவில்லை. “என்கிட்ட ஏற்கனவே ஒரு பாம்பு இருக்குது. புதுசா எனக்கு எந்தப் பாம்பும் தேவையில்லை. என்னைத் தொல்லை
பண்ணாத. தூங்க விடு. போ” என்று விரட்டியடித்துவிட்டு மறுபக்கம் முகத்தைத்
திருப்பிக்கொண்டான்.
“பாம்பாட்டி அண்ணா,
பாம்பாட்டி அண்ணா. நீயே இப்படி சொன்னா, நான் வேற யாருகிட்ட போய் நிப்பேன்?” என்று
மறுபடியும் கெஞ்சியது அம்மா எறும்பு.
“நான் சொல்றது உன் காதுல
விழலையா? கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க உடு. சும்மா தொல்லை பண்ணாதே. அந்தப்
பக்கமா போ” என்று கடுமையான குரலில் எறும்பை விரட்டினான் பாம்பாட்டி.
தன் திட்டம் தோல்வியடைந்ததைக்
குறித்து எறும்பு வருந்தியது. ஆயினும் அடுத்து என்ன செய்யலாம் என அதன் மனம் யோசனையில்
மூழ்கியபடி அக்கம்பக்கம் பார்த்தது.
அப்போது ஒரு மரத்தடியில்
நீண்டு செல்லும் வேர்களுக்கிடையில் ஒரு எலிவளையைப் பார்த்தது. உடனே அந்த வளைக்குப்
பக்கத்தில் சென்று “எலி அண்ணா எலி அண்ணா” என்று அவசரமாக அழைத்தது. நாலைந்து முறை
குரல் கொடுத்த பிறகு வளையிலிருந்து எலி வெளியே வந்தது. அங்கே நின்றுகொண்டிருந்த
எறும்பைப் பார்த்து “நீயா என்னைக் கூப்பிட்டாய்? என்ன விஷயம்? சொல்” என்று
கேட்டது.
“எலி அண்ணா, எலி அண்ணா,
நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்” என்று கெஞ்சியது.
“என்ன உதவி?” என்று
திரும்பிப் பார்த்துக் கேட்டது எலி. ”என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி
விழுந்திடிச்சி. அதைக் காப்பாதுங்கன்னு அந்தத் தவளைகிட்ட கேட்டேன். அந்தத் திமிரு
புடிச்ச தவளை முடியவே முடியாதுன்னு சொல்லிடுச்சி.
அந்த தவளையப் புடிச்சி தின்னுன்னு பாம்புகிட்ட கேட்டேன். அந்தப் பாம்பும் முடியாதுன்னு
சொல்லிடுச்சி. அந்தப் பாம்பை மயக்கிப்
புடிச்சி எடுத்துக்கோன்னு பாம்பாட்டிகிட்ட சொன்னேன். அவனும் முடியாதுன்னு என்னை
விரட்டி அடிச்சிட்டான். நீ அந்தப் பாம்பாட்டி வச்சிருக்கிற பாம்புக்கூடையைக்
கடிச்சி பெரிசா ஒரு ஓட்டை போடணும். அந்தப் பாம்பு தப்பிச்சி ஓடிடும். அப்பதான்
அந்தப் பாம்பாட்டிக்கு புத்தி வரும்” என்று சொன்னது.
எறும்பினுடைய திட்டத்துக்கு
எலி உடன்படவில்லை. “அவசியமே இல்லாம பாம்பாட்டி கூடையைக் கடிச்சி நான் ஏன் ஓட்டை
போடணும். போ. போ. போய் வேற ஏதாச்சிம் வேலையைப் பாரு” என்று விரட்டியது. பிறகு “நான் ஓய்வெடுக்கணும்” என்று முணுமுணுத்துக்கொண்டே
வளைக்குள் புகுந்துகொண்டது.
“எலி அண்ணா, எலி அண்ணா.
நீயே இப்படி சொன்னா, நான் வேற யாருகிட்ட போய் நிப்பேன்?” என்று மறுபடியும்
கெஞ்சியது அம்மா எறும்பு.
“நான் சொல்றது உன் காதுல விழலையா? கொஞ்ச நேரம்
என்னை நிம்மதியா இருக்க உடு. சும்மா தொல்லை பண்ணாதே. அந்தப் பக்கமா போ” என்று
கடுமையான குரலில் எறும்பை விரட்டியது எலி.
தன் திட்டம் தொடர்ந்து தோல்வியடைவதைக்
குறித்து எறும்பு வருந்தியது. ஆயினும் அடுத்து என்ன செய்யலாம் என அதன் மனம்
யோசனையில் சிறிது தொலைவு சென்றது.
ஒரு செடிக்குப் பக்கத்தில்
ஒரு பூனை உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு நம்பிக்கையோடு, அந்தப் பூனைக்குப்
பக்கத்தில் சென்று வணக்கம் சொன்னது. “என்ன விஷயம்?” என்று கேட்டது பூனை.
“பூனை அண்ணா, பூனை அண்ணா,
நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்” என்று கெஞ்சியது.
“என்ன உதவி?” என்று
திரும்பிப் பார்த்துக் கேட்டது பூனை. ”என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி
விழுந்திடிச்சி. அதைக் காப்பாதுங்கன்னு அந்தத் தவளைகிட்ட கேட்டேன். அந்தத் திமிரு
புடிச்ச தவளை முடியவே முடியாதுன்னு சொல்லிடுச்சி.
அந்த தவளையப் புடிச்சி தின்னுன்னு பாம்புகிட்ட கேட்டேன். அந்தப் பாம்பும் முடியாதுன்னு
சொல்லிடுச்சி. அந்தப் பாம்பை மயக்கிப்
புடிச்சி எடுத்துக்கோன்னு பாம்பாட்டிகிட்ட சொன்னேன். அவனும் முடியாதுன்னு என்னை
விரட்டி அடிச்சிட்டான். அந்தப் பாம்பாட்டி வச்சிருக்கிற பாம்புக்கூடையைக் கடிச்சி
ஓட்டை போட்டு அவனுக்குப் புத்தி புகட்டுன்னு எலிகிட்ட சொன்னேன். அந்த எலியும்
எதுவும் செய்யமுடியாதுனு சொல்லி விரட்டியடிச்சிட்டுது. நீ அந்த எலியைப் புடிச்சி
கரகரனு கடிச்சி சாப்பிடணும்” என்று சொன்னது.
எறும்பினுடைய திட்டத்துக்கு
பூனை உடன்படவில்லை. “எந்தக் காரணமும் இல்லாம ஒரு எலியை நான் ஏன் கடிச்சிக்
கொல்லணும்? போ. போ. போய் வேற ஏதாச்சிம் வேலையைப் பாரு” என்று விரட்டியடித்தது
பூனை.
தன் திட்டம் பூனையிடமும் தோல்வியடைந்ததைக்
குறித்து எறும்பு வருந்தியது. ஆயினும் அடுத்து என்ன செய்யலாம் என திட்டமிட்டபடி
தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. அப்போது எங்கிருந்தோ ஓடிவந்த ஒரு நாய் கரையில்
ஏறி நிற்பதைப் பார்த்தது.
உடனே நம்பிக்கையோடு, அந்த
நாய்க்குப் பக்கத்தில் சென்று வணக்கம் சொன்னது. “என்ன விஷயம்?” என்று கேட்டது
நாய்.
குட்டி எறும்பு தண்ணீரில்
விழுந்த செய்தியில் தொடங்கி பூனை பாம்புக்கூடையில் ஓட்டை போட மறுத்த செய்தி
வரைக்கும் எல்லா விஷயங்களையும் சுருக்கமாக அந்த நாயிடம் எடுத்துச் சொன்னது
எறும்பு. பிறகு அந்த நாய்க்கு வேகமூட்டும் வகையில் “நாய் அண்ணா, நாய் அண்ணா, நீ
அந்தப் பூனையை இந்த வட்டாரத்தைவிட்டே துரத்திடிக்கணும். அப்பதான் அதனுடைய திமுரு
அடங்கும்” என்று கேட்டுக்கொண்டது.
அந்த நாய் எறும்பைப்
பார்த்து விசித்திரமாகச் சிரித்தது. “ஒரு
பூனை உனக்கு உதவி செய்யலைன்னா, அது உனக்கும் பூனைக்கும் உள்ள பிரச்சினை. அந்தப்
பிரச்சினைக்குள்ள நான் எப்படி நடுவுல வரமுடியும்? போ. போ. உன் பிரச்சினையை நீயே
தீத்துக்கோ. நடுவுல என்னை இழுத்துவிடாதே“ என்று சொல்லிவிட்டு உட்கார்ந்துகொண்டது.
தன் திட்டம்
தோல்வியடைந்ததைக் குறித்து எறும்பு வருந்தியது. ஆயினும் அடுத்து என்ன செய்யலாம் என
யோசித்தபடியே சிறிது தொலைவு சென்றது.
ஒரு மரத்தடியில் யாரோ
எப்போதோ உடைத்துப் போட்ட ஒரு கிளை உலர்ந்து கிடந்தது. பார்ப்பதற்கு உருட்டுக்கட்டை
போல இருந்தது. யாருமே தனக்கு உதவவில்லை என்கிற ஆற்றாமையோடு அந்தக் கட்டையிடம்
சென்று “கட்டை அண்ணா, கட்டை அண்ணா. யாருமே எனக்கு உதவி செய்யலை. நீயாவது எனக்கு
உதவி செய்வியா?” என்று சொல்லிப் புலம்பியது. அதன் குரல் கட்டையின் காதில்
விழுந்தது. “என்ன உதவி வேணும், சொல்” என்று பரிவோடு கேட்டது கட்டை.
குட்டி எறும்பு தண்ணீரில்
விழுந்த செய்தியில் தொடங்கி பூனையை விரட்டியடிக்க நாய் மறுத்த செய்தி வரைக்கும்
எல்லா விஷயங்களையும் சுருக்கமாக அந்தக் கட்டையிடம் எடுத்துச் சொன்னது எறும்பு.
பிறகு அந்தக் கட்டைக்கு வேகமூட்டும் வகையில் “கட்டை அண்ணா, கட்டை அண்ணா. எனக்கு
உதவி செய்ய மறுத்த அந்த நாயை நீதான் ஓட ஓட அடிச்சி விரட்டணும். இந்த உலகத்துல யாருமே எனக்கு உதவி செய்யலை.
நீயாவது எனக்கு இந்த உதவியைச் செய்யணும்” என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டது.
எறும்பின் மனத்தில் இருந்த
சீற்றத்தை கட்டை புரிந்துகொண்டது. “உனக்கு நான் கட்டாயமா உதவி செய்றேன்.
கவலைப்படாதே” என்று நம்பிக்கையூட்டும் குரலில் ஆறுதல் சொன்னது. தொடர்ந்து “ஒரு
விஷயத்தை நீ புரிஞ்சிக்கணும். நானா பறந்துபோய் யார்மேலயும் விழுந்து அடிக்கமுடியாது.
யாராவது என்னைப் புடிச்சி அவுங்கள நோக்கி வீசணும். முதல்ல நீ என்னை எடுத்து அந்த
நாயைப் பார்த்து வீசு. நான் போய் அடிக்கறேன்” என்று சொன்னது. அதைக் கேட்டு அதிர்ச்சியில் மூழ்கியது அம்மா
எறும்பு. “நான் இருக்கற அளவுக்கு உன்
உருவத்தை என்னால தூக்கமுடியுமா? அதெல்லாம் நடக்கற காரியமா, சொல்” என்று தளர்ந்த
குரலில் பதில் சொன்னது. அதே சமயத்தில் அடுத்த என்ன செய்யலாம் அடுத்து என்ன
செய்யலாம் என அதன் ஆழ்மனம் யோசனையில் மூழ்கியது.
சிறிது தொலைவில் ஆலமரத்தின்
நிழலில் உட்கார்ந்து ஒரு சிறுவன் பாடம் படித்துக்கொண்டிருந்தான். அவனுடைய உரத்த
குரலைக் கேட்டபிறகுதான் அவன் அங்கே இருப்பதை அம்மா எறும்பு உணர்ந்தது. உடனே அதன்
மனத்தில் ஒரு திட்டம் உதித்தது. வேகவேகமாக அந்தச் சிறுவனை நோக்கி ஊர்ந்து சென்றது.
பாடத்தில் மூழ்கியிருந்த சிறுவன் தன்னை நோக்கி ஒரு எறும்பு ஊர்ந்துவருவதைக்
கவனிக்கவில்லை. அவனை நெருங்கி வந்த அம்மா எறும்பு ”தம்பி, தம்பி, எனக்கு ஒரு உதவி
செய்வியா?” என்று கேட்டது.
பேசும் எறும்பைப் பார்த்து
படிப்பதை நிறுத்திய சிறுவன் “உதவியா? என்ன உதவி?” என்று கேட்டான். “அதோ, அங்க இருக்கற கட்டையை எடுத்து அந்த நாயை
அடிக்கணும்” என்று சுட்டிக் காட்டியது.
“நான் எதுக்கு அந்த நாயை அடிக்கணும். போ. போ. எனக்கு படிக்கிற வேலை
இருக்குது” என்று சலித்துக்கொண்டான் சிறுவன்.
அவன் பதிலைக் கேட்டு அம்மா எறும்புக்கு துயரம் பொங்கியது. ”உயிரே இல்லாத
அந்தக் கட்டை என் துக்கத்தைப் புரிஞ்சிகிட்டு எனக்கு உதவி செய்ய தயாரா இருக்குது.
ஆனா உயிரு இருக்கற நீங்க எல்லாருமே இரக்கமே இல்லாதவங்களா இருக்கறீங்க. உங்களைவிட
அந்தக் கட்டை ரொம்ப மேல்” என்று புலம்பியது.
“நீ என்ன வேணும்ன்னாலும்
சொல்லிக்கோ. எனக்கு பாடம் படிக்கிற வேலை இருக்குது” என்று திரும்பி உட்கார்ந்து படிக்கத்
தொடங்கினான் சிறுவன்.
“இரு இரு. உனக்கு நான் சரியான
பாடம் கத்துக் குடுக்கறேன்” என்று சொன்ன அம்மா எறும்பு மனத்துக்குள் கறுவிக்கொண்டே
மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று அவன் தொடையின் மேல் ஏறி நறுக்கென்று கடித்தது.
“ஐயோ, இது என்ன? ஏன் இப்படி
கடிக்கிற?” என்று அலறினான் சிறுவன்.
“எனக்கு உதவி செய்றேன்னு
சொல்லு. அப்பதான் கடிக்கிறத நிறுத்துவேன்” என்றபடி மீண்டும் அழுத்தமாக அவன்
தொடையைக் கடித்தது அம்மா எறும்பு.
“சரி சரி. உதவி செய்றேன்.
முதல்ல கடிக்கிறத நிறுத்து” என்று அலறிக்கொண்டே எழுந்து நின்றான். அம்மா எறும்பு
அவனைப் பார்த்தது.
“என்ன செய்யணும், சொல்லு”
என்று கேட்டான் சிறுவன்.
“எடு. அந்தக் கட்டையை எடு.
எடுத்து அந்த நாயை அடி” என்றது அம்மா எறும்பு.
அந்தச் சிறுவன் வேகமாகச்
சென்று அருகிலிருந்த அந்தக் கட்டையை எடுத்து நாயை நோக்கி குறிபார்த்து வேகமாக
வீசினான். நாயின் வயிற்றில் அந்தக் கட்டை
சரியாகத் தாக்கியது. ”ஐயோ” என்று வலியால் அலறிக்கொண்டு எழுந்தது நாய். தனக்கு
எதிரில் அம்மா எறும்பையும் அதற்கு உதவியாக ஒரு சிறுவனும் நின்றிருப்பதைப் பார்த்து
அச்சம் கொண்டது. “ஐயோ, அடிக்காத. நான் என்ன செய்யணும், சொல்” என்று வலியோடு
கேட்டது.
“போ. போய் அந்தப் பூனையை
விரட்டிப் புடி” என்று கட்டளையிட்டது அம்மா எறும்பு. அடுத்த கணமே நாய் அந்தப்
பூனையை நோக்கிப் பாய்ந்து சென்றது.
நாய் விரட்டிவருவதைப்
பார்த்ததுமே தப்பிப்பதற்காக அங்குமிங்கும் வளைந்து வளைந்து ஓடியது பூனை. எந்தப்
பக்கம் சென்றாலும் பின்னாலேயே விரட்டிவரும் நாயைப் பார்த்து அச்சத்தில் மூழ்கியது.
இறைக்க இறைக்க ஓடியபடியே அம்மா எறும்பைப் பார்த்து “ஐயோ, என்னை விரட்டவேணாம்னு
சொல்லு. நான் என்ன செய்யணும். சொல்லு. அதைச் செய்யறேன்” என்று அலறியது.
“போ. போய் அந்த எலியை
விரட்டிப் புடி” என்று கட்டளையிட்டது அம்மா எறும்பு. அடுத்த கணமே அந்தப் பூனை
எலியை நோக்கி ஓடியது. பூனை தன்னை விரட்டி வருவதை உணர்ந்ததும் எலி நடுங்கியது.
அங்குமிங்கும் ஓடி மறைந்துகொள்ள முயற்சி செய்தது. பூனையின் வேகத்தின் முன்னால்
அதன் முயற்சி பலனின்றி தோல்வியில்தான் முடிந்தது. மூச்சிறைக்க ஓடி களைத்துப்போன
எலி ”ஐயோ. என்னை விரட்ட வேணாம்னு பூனைகிட்ட சொல்லு. நான் என்ன செய்யணும், அதைச் சொல்லு.
நீ சொல்றபடி செய்றேன்” என்று அம்மா எறும்பிடம் கேட்டது. ”போ. அந்தப்
பாம்பாட்டியுடைய கூடையில கடிச்சி ஓட்டை போடு” என்று கட்டளையிட்டது அம்மா எறும்பு.
அடுத்த கணமே தூக்கத்தில் மூழ்கியிருந்த பாம்பாட்டியின் பக்கத்தில்
வைக்கப்பட்டிருந்த பாம்புக்கூடையில் ஒருபக்கமாக கடித்துக் கடித்து ஓட்டை
போட்டுவிட்டுச் சென்றது.
பாம்பாட்டி அப்போதும் நல்ல
உறக்கத்தில் மூழ்கியிருந்தான். பாம்புக்கூடையில் சுருண்டிருந்த பாம்பு ஓட்டை
வழியாக மெல்ல வெளியே வந்தது. முற்றிலுமாக வெளியே வந்ததும் விடுதலை கிடைத்ததாக
நினைத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிக்க நினைத்தது.
தன் முன்னால் நின்றிருந்த
அம்மா எறும்பைப் பார்த்து பாம்பு ஒரு கணம் திகைத்து நின்றது. அம்மா எறும்பு தன்
கதையை எல்லாம் அந்தப் பாம்பிடம் விளக்கமாகச் சொன்னது. அதைத் தொடர்ந்து “பாம்பு
அண்ணா, பாம்பு அண்ணா, நீ விடுதலையாவறதுக்கு நான்தான் காரணம். நீ எனக்கு ஒரு உதவி
செய்யணும்” என்று கேட்டுக்கொண்டது.
“என்ன செய்யணும், சொல்”
என்று இரக்கத்தோடு கேட்டது பாம்பு.
“அங்க கரையோரமா ஒரு தவளை உக்காந்திட்டிருக்குது
பாரு. அதை நீ ஒரே விழுங்கா விழுங்கணும்” என்றது அம்மா எறும்பு.
“ஆகா. நானும் ரொம்ப பசியோடு
இருக்கேன். எங்கே இருக்குது அந்தத் தவளை. அதைக் காட்டு” என்று தலையைத் திருப்பி
உற்றுப் பார்த்தது பாம்பு. அம்மா எறும்பு அது உட்கார்ந்திருக்கும் இடத்தைச்
சுட்டிக் காட்டியது. உடனே பாம்பு அதை நோக்கி வேகமாகச் சென்றது.
தன்னை நோக்கி வேகமாக ஒரு
பாம்பு வருவதையும் அதற்குப் பின்னால் அம்மா எறும்பு நின்றிருப்பதையும் பார்த்த
தவளை அச்சத்தில் உடல் நடுங்கியது. அங்கிருந்தபடியே தப்பிக்க இடம் தேடி
தத்தளித்தபடி “ஐயோ எறும்பே. நான் என்ன செய்யணும் சொல். என்னைக் கொல்ல வேணாம்”
என்று கதறியது. “சீக்கிரமா தண்ணியில
குதிச்சி, உயிருக்குத் தவிச்சிட்டிருக்கிற என் குட்டி எறும்பைக் காப்பாத்தி
கரைக்கு அழைச்சிட்டு வா” என்று கட்டளையிட்டது அம்மா எறும்பு.
உடனே தவளை ஒரே பாய்ச்சலில்
தண்ணீருக்குள் தாவியது. அங்கே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த குட்டி எறும்பை
நெருங்கி தன் முதுகில் ஏறி உட்கார்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டது. அதுவரை
மூச்சுவிட தடுமாறிக்கொண்டிருந்த குட்டி எறும்பு வேகமாகச் செயல்பட்டு சட்டென அந்தத்
தவளையின் முதுகில் ஏறி அமர்ந்தது. அப்போதுதான் அதற்கு போன உயிர் திரும்பிவந்த
மாதிரி இருந்தது. நிம்மதியாக மூச்சு விட்டது.
தவளை மெதுவாக கரைக்கு வந்து சேர்ந்தது. குட்டி எறும்பும் அதன்
முதுகிலிருந்து இறங்கி வந்து அம்மா
எறும்போடு சேர்ந்துகொண்டது.
பாம்புக்கும் தவளைக்கும் அம்மா எறும்பு நன்றி
சொல்லிவிட்டு தன் புற்றை நோக்கி ஊர்ந்து சென்றது. குட்டி எறும்பை பாதுகாப்பாக
புற்றுவரை அழைத்துச் சென்று தங்கவைத்தது. பிறகு தொடக்கத்தில் நின்றிருந்த
இடத்துக்கு மீண்டும் தனிமையில் திரும்பி வந்தது. ஆபத்து சமயத்தில் தனக்கு உதவ
மறுத்த பாம்புக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று அதன் மனம் திட்டமிட்டது.
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த பாம்பாட்டி
தனக்குப் பக்கத்திலேயே வைத்திருந்த பாம்புக்கூடையில் ஓட்டை இருப்பதைப் பார்த்து
ஒன்றும் புரியாமல் விழித்தான். கூடைக்குள் இருந்த பாம்பு தப்பித்துச்
சென்றிருப்பதை உணர்ந்து திகைப்பில் மூழ்கினான். இது யார் செய்த வேலையாக இருக்கும்
என்று தெரியாமல் அவன் குழப்பத்தோடு அமர்ந்திருந்தான். அந்த நேரத்தில் அவனுக்கு முன்னால் சென்று
நின்றது அம்மா எறும்பு.
”கூடைக்குள்ள
இருந்த பாம்பு தப்பிச்சிடுச்சின்னு நினைச்சி கவலைப்படாதே பாம்பாட்டி அண்ணா.
நான்தான் என்னுடைய சொந்தக் காரணத்துக்காக அதைத் தப்பிக்க வைச்சேன். அதுக்கு ஒரு
காரணம் இருக்குது. உனக்கு வேற ஒரு பாம்பு கிடைக்க ஏற்பாடு செய்றேன். அந்தப் பாம்பு
இருக்கற இடம் எனக்குத் தெரியும். நீ என் கூட வந்தா, நான் அந்த இடத்தைக்
காட்டுவேன். நீ மகுடி ஊதி அதைப் புடிச்சி எடுத்துக்கலாம்”
அம்மா எறும்பு சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறு
வழியில்லை என்பது பாம்பாட்டிக்குப் புரிந்தது. மறுபேச்சில்லாமல் மகுடியோடும் புதிய
கூடையோடும் அம்மா எறும்புக்குப் பின்னாலேயே சென்றான். சிறிது தொலைவு சென்றதும் அம்மா எறும்பு தனக்கு
உதவிக்கு வராமல் ஏளனம் செய்த பாம்பு வசிக்கும் புற்றை அந்தப் பாம்பாட்டிக்கு அடையாளம் காட்டியது.
பாம்பாட்டி
அந்தப் புற்றுக்கு அருகில் சென்று மகுடியை எடுத்து ஊதினான். புற்றிலிருந்து பாம்பு
வெளியே வந்து படமெடுத்தபடி நின்றது. பாம்பாட்டி அதை லாவகமாகப் பிடித்து தன்
கூடைக்குள் சுருட்டி வைத்தான். தொலைவிலிருந்து எல்லாவற்றையும் வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்த அம்மா எறும்பைப் பார்த்து நன்றி சொல்லிவிட்டு புன்னகைத்தபடி
தன் குடிசையை நோக்கி நடந்து சென்றான்.
(கிழக்கு டுடே - இணைய இதழ் - 09.05.2025)