Home

Sunday, 18 May 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 6 (பகுதி -2)

 (தொடர்ச்சி....)

“இது ஒன்னும் வாங்கன பூ கிடையாது. எங்க வீட்டு தோட்டத்துல பூத்த பூ” என்று பெருமையாகச் சொன்னாள் புஷ்பா.

பூவே இல்லாத தோட்டத்தைப் பார்த்ததை அவன் மனத்துக்குள் நினைத்துக்கொண்டான். இந்தப் பெண் எதையோ மறைக்கிறாள் என்பதுமட்டும் அவனுக்குப் புரிந்துவிட்டது. மேன்மேலும் அவளைப் பொய் சொல்லவைக்க வேண்டாம் என நினைத்து அமைதியாக இருந்தான்.

“தினமும் இவ்வளவு பூ பூக்கற அளவுக்கு உங்க தோட்டம் பெரிய தோட்டமா?”

“ஆமாம். பெரிய தோட்டம். அதுதான் எங்க வாழ்க்கைக்கு ஆதாரம்”

“காலையில எழுந்ததும் பூவுடைய முகத்தைத்தான் முதல்ல பார்ப்பீங்களா?”

“ஆமாம். அது எங்களுக்கு வெறும் பூ கிடையாது. எங்க தெய்வமே அதுதான்”

அதற்குமேல் அவன் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. விற்றதுபோக எஞ்சியிருந்த பூக்களை அவளே ஒரு தாளில் பொட்டலமாகக் கட்டி அவனிடம் கொடுத்தாள். அவன் உடனே பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்பட்டான்.

மறுநாள் அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பாகவே எழுந்த சிக்கண்ணா தன் ஊரிலிருந்து வேகவேகமாக நடந்து அந்தப் பெண்களின் குடிசை இருந்த பகுதிக்குச் சென்று ஒரு தோப்புக்குள் ஒளிந்து நின்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தான்.

குடிசையின் கதவு திறந்தது. முதலில் அப்பெண்களின் அம்மா வெளியே வந்து குடத்தில் இருந்த தண்ணீரை எடுத்து முகம் கழுவினாள். அதற்குப் பிறகு இரண்டு பெண்களும் எழுந்துவந்து முகம் கழுவினர். ஒரு கூடையை எடுத்துக்கொண்டு அம்மா தோட்டத்துக்குள் செல்ல, இன்னொரு கூடையை எடுத்துக்கொண்டு பெண்கள் இருவரும் தோட்டத்துக்கு அப்பால் நீண்டு செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினர். அந்த அதிகாலை வேளையில் அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத சிக்கண்ணா சிறிது தொலைவு இடைவெளியில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான். 

நீண்ட நேர நடைக்குப் பிறகு பெண்கள் காட்டில் நுழைந்தார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இளைஞனும் காட்டுக்குள் நுழைந்தான்.

அவர்கள் ஒரு தோட்டத்தின் முன் நின்றார்கள்.  வீட்டுத்தோட்டத்தில் காணப்பட்டதுபோல அங்கும் ஏராளமான பூச்செடிகள் இருந்தன. ஆனால் பூக்கள் மிகமிகக் குறைவாகவே இருந்தன.  சந்தையில் அவர்கள் கூடையில் வைத்திருந்த பூக்களுக்கும் அங்கு பூத்திருந்த பூக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

என்னதான் நடக்கிறது என்பதை பொறுமையாகக் காத்திருந்து பார்த்துவிடுவோம் என்று முடிவெடுத்த சிக்கண்ணா மறைவிடத்திலேயே ஒதுங்கி நின்றான். ஒரு பெண் இரு குடங்களை எடுத்துக்கொண்டு குளத்தங்கரைக்குச் சென்று திரும்பியதையும் ஒரு குடத்தின் நீரை இன்னொருத்தியின் மீது ஊற்றியதையும் மறுகணமே அவள் பூக்கள் கொத்துக்கொத்தாக தொங்கும் மரமாக மாறியதையும் பார்த்தான். ஒவ்வொரு பூவாக நிதானமாகப் பறித்து கூடையை நிரப்பிக்கொண்டாள் பெரியவள். கூடை நிறைந்ததும் மற்றொரு குடத்தில் இருந்த நீரை எடுத்துவந்து மரத்தின் வேரடியில் ஊற்றியதையும் அடுத்த கணமே அவள் பெண்ணாக மாறியதையும் பார்த்தான்.

கண் முன்னால் நிகழ்ந்த அந்த மாற்றத்தைக் கண்டு அவன் பரவசத்தில் மூழ்கினான். எவ்வளவு அற்புதமான பெண் என்று அவளைப்பற்றி நினைத்துக்கொண்டான். இந்த அளவுக்கு உயர்வான ஆற்றல் உள்ளவளாக இருந்தபோதும் சந்தையில் மற்ற பெண்களைப்போல சாதாரணமாக பழகும் அளவுக்கு மனப்பக்குவத்தோடு அவள் நடந்துகொண்ட விதத்தை எண்ணி ஆச்சரியமடைந்தான். அக்கணமே அவள் மீது அவனுக்கு காதல் பிறந்துவிட்டது. எளிமையும் மகத்துவமும் கொண்ட அவளோடுதான் தன் வாழ்க்கை அமையவேண்டும் என மனத்துக்குள் முடிவெடுத்தான். சகோதரிகள் இருவரும் புறப்பட்டுச் செல்லும்வரை காத்திருந்து, அதற்குப் பிறகு தன் மறைவிடத்தைவிட்டு வெளியேறி தன் வீட்டுக்குச் சென்றான்.

அன்றும் சிக்கண்ணா சந்தைக்குச் சென்றான்.  அவர்கள் பூ விற்பனை செய்வதை தொலைவிலிருந்தே அவனால் பார்க்கமுடிந்தது. மறைவான ஓரிடத்தில் கூட்டத்தோடு ஒருவனாக நின்று, புஷ்பாவையே வைத்தகண் எடுக்காமல் பார்த்து மகிழ்ந்தான். அவளைப் பார்க்கப்பார்க்க அவன் மனத்தில் இதுவரை அனுபவித்திராத மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் பெருகுவதை உணர்ந்தான்.

பூக்கள் வேகவேகமாக விற்று, இன்னும் கொஞ்சம் பூக்களே எஞ்சியிருக்கும் சமயத்தில் அவன் புஷ்பாவை நோக்கி வந்தான். அருகில் வந்ததும் புன்னகைத்தபடி தலைகுனிந்து “வணக்கம்” என்று சொன்னான். அவன் வணங்கிய விதத்தைப் பார்த்து அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. “இங்க என்ன கோயிலா கட்டி வச்சிருக்குது? இப்படி கும்பிடறீங்க” என்றாள். “என் கண்ணுக்குத் தெரியற கோயில் உங்களுக்குத் தெரியலைபோல” என்று சொல்லிவிட்டு மீண்டும் புன்னகைத்தான். அதைக் கேட்டதும் அவள் முகம் சிவந்தது. அவனை ஒருமுறை முறைத்துப் பார்த்துவிட்டு அமைதியானாள்.

“இந்த ஊருலயே இப்படி ஒரு அழகான பூ பூத்ததை நான் பார்த்ததில்லை. எங்கேருந்து இதையெல்லாம் கொண்டு வரீங்க?” என்று அப்பாவியைப்போல அவன் கேட்டான்.

புஷ்பா பதில் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள். அப்போது புனிதா குறுக்கிட்டு “அதான் அன்னைக்கே சொன்னமே, மறந்துடிச்சா? எல்லாமே எங்க வீட்டுத் தோட்டத்துல பூத்த பூதான்” என்றாள். “அப்படியா, சரி சரி” என்று தலையசைத்துக்கொண்டான் சிக்கண்ணா. அவன் பூவையெல்லாம் எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றதும் “எங்க எங்கன்னு கேட்டு இவன் எதுக்கு உயிரை எடுக்கறானோ” என்று சத்தமில்லாமல் முணுமுணுத்துக்கொண்டாள் புஷ்பா.

அன்று இரவு சிக்கண்ணாவுக்கு தூக்கமே இல்லை. புஷ்பா பற்றிய கனவாகவே இருந்தது. கண்ணை மூடினால் மலர்குலுங்கும் மரமாக அவள் மாறி நின்ற கோலம்தான் தோன்றியது. அந்த அற்புதக்கணத்தை அவனால் மறக்கவே முடியவில்லை. மீண்டும் ஒருமுறை சென்று அந்தக் காட்டில் அவள் மரமாக மாறி நிற்கும் காட்சியைப் பார்க்கவேண்டும் என அவன் மனம் துடித்தது. அக்கணமே விடிந்ததும் முதல் வேலையாக காட்டுக்குச் சென்று அக்காட்சியைப் பார்த்துவிட வேண்டும் என முடிவெடுத்தான். அதற்குப் பிறகுதான் அவன் மனம் அமைதியடைந்தது.

திட்டமிட்டபடியே அதிகாலையில் எழுந்து காட்டுக்குச் சென்று ஒரு பெரிய மரத்தின் மீது ஏறி கிளைகளுக்கு நடுவில் மறைந்து உட்கார்ந்துகொண்டு சகோதரிகளின் வரவுக்காகக் காத்திருந்தான். அவன் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுபோல சகோதரிகள் வந்தார்கள். வழக்கம்போல மூத்தவள் ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துவந்து இளையவள் மீது ஊற்ற, அடுத்த கணமே அவள் வண்ண வண்ண மலர்குலுங்கும் மரமென நின்றாள். கூடை நிறைய பூக்களைப் பறித்துக்கொண்ட மூத்தவள் இன்னொரு குடம் தண்ணீரை எடுத்துவந்து அம்மரத்தின் வேரடியில் ஊற்றினாள். அக்கணமே மரம் மறைந்துவிட அந்த இடத்தில் புஷ்பா நின்றாள். சகோதரிகள் இருவரும் புறப்பட்டுச் சென்றதும் சிக்கண்ணா தன் வீட்டுக்குத் திரும்பினான்.

மலர்குலுங்கும் மரமென புஷ்பா நின்ற காட்சி அவன் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவள் மீது அவன் கொண்ட காதல் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகியது. ஒவ்வொரு நாளும் அவளைப் பார்ப்பதற்காகவே சந்தைக்குச் செல்வதும் அவளிடம் பேசுவதற்காகவே பூ வாங்குவதுமாக இருந்தான். காதல் பித்து அவனைப் பாடாய்ப் படுத்தியது. மணந்தால் அவளைத்தான் மணக்கவேண்டும் என அவன் முடிவு கட்டிக்கொண்டான்.

அன்று இரவு உணவுண்ணும் வேளையில் தன் பெற்றோரிடம் தன் காதலைத் தெரிவித்தான் சிக்கண்ணா. அதைக் கேட்டு அவர்கள் முதலில் திகைத்துவிட்டனர். “பூக்காரியையா? சந்தையில் பூ விற்பவளையா? ஊர்க்கோடியில் குடிசையில் இருப்பவளையா?” என்றெல்லாம் கேள்வி கேட்டனர். ஆயினும் மகனுடைய மன உறுதியையும் விருப்பத்தையும் புரிந்துகொண்ட பிறகு அவன் காதலை ஏற்றுக்கொண்டனர்.

ஒருநாள் மாலை வேளையில் தம் பெற்றோரை அழைத்துக்கொண்டு புஷ்பா வசிக்கும் குடிசைக்குச் சென்றான். ஊரிலேயே பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தம் குடிசையைத் தேடி வந்திருப்பதை நினைத்து புஷ்பாவின் அம்மா தடுமாறினாள். ஏதோ தப்பு நடந்துவிட்டதோ என நினைத்துக் குழம்பினாள். இளைஞனின் அம்மா எல்லா விவரங்களையும் அவளிடம் பொறுமையாக எடுத்துச் சொன்னாள். அதற்குப் பிறகுதான் அவள் மனம் நிதானமடைந்தது.

“புஷ்பா சின்ன பொண்ணு. அவளைவிட பெரிய பொண்ணு ஒருத்தி இருக்கா. பெரிய பொண்ண வச்சிகிட்டு சின்ன பொண்ணுக்கு எப்படிங்க கல்யாணம் செய்யமுடியும்? அதான் யோசனையா இருக்குது” என்றாள் அம்மா.

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா, நாங்களே அந்தப் பொறுப்பை எடுத்துக்கறோம். என் கணவருடைய அண்ணன் பக்கத்து ஊருலதான் இருக்காரு. அந்தக் குடும்பத்துல ஒரு பையன் இருக்கான். உங்க பெரிய பொண்ண அவனுக்கு முடிச்சிடலாம்”

தன் பிரச்சினைக்கு இப்படி ஒரு தீர்வு கிடைக்கும் என அம்மா எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு முடிவு காலம் நெருங்கிவிட்டது என்று அவளுக்குத் தோன்றியது. தான் கும்பிட்ட கடவுள் தன்னைக் கைவிடவில்லை என நினைத்து மனமுருகினாள்.

“ஒரு வார்த்தை என் பொண்ணுங்ககிட்ட கலந்து பேசிட்டு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றாள் அம்மா. கதவுக்குப் பின்னால் நின்றபடி எல்லாவற்றையும் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த சகோதரிகள் இருவரும் தன் அம்மாவைத் தழுவிக்கொண்டனர். அந்த அணைப்பே அவர்களுடைய சம்மதத்தை அவளுக்கு உணர்த்திவிட்டது. சிறிது நேரம் அவர்களோடு உரையாடிய பிறகு வெளியே வந்து “உங்க விருப்பம்போலயே நடக்கட்டும்மா. ரெண்டு பேருமே சம்மதம்னு சொல்லிட்டாங்க” என்றாள்.

அதற்குப் பிறகு எல்லா வேலைகளும் வேகவேகமாக நடந்தன. ஒரு நல்ல முகூர்த்த நாளில் இரண்டு திருமணங்களும் நடந்தன. அம்மா தன் மகள்களை அணைத்து ஆசி வழங்கி புகுந்த வீட்டுக்கு அனுப்பிவைத்தாள். புனிதாவும் புஷ்பாவும் தத்தம் கணவன் வீட்டுக்குச் சென்றனர். புகுந்த வீட்டில் இரண்டு பேருமே மிகமிக மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

ஒருநாள் இரவு புஷ்பாவும் சிக்கண்ணாவும் அவர்களுடைய வீட்டுத் தோட்டத்தில் ஊஞ்சலில் அமர்ந்து வானத்தில் நகரும் நிலவைப் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தனர். நிலவின் வெளிச்சமும் இனிய குளிரும் அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தன.

அப்போது சிக்கண்ணா புஷ்பாவைப் பார்த்து “நான் உன்னிடம் ஒன்னே ஒன்னு கேப்பேன். எனக்காக நீ செய்வியா?” என்று கேட்டான்.

“என்னால முடிஞ்சா கட்டாயம் செய்வேன். உங்களுக்குச் செய்யாம நான் யாருக்கு செய்யப்போறேன்?” என்றாள் புஷ்பா.

அவன் புஷ்பாவை முதன்முதல் பார்த்ததில் தொடங்கி அவள் மரமாகி மலர்குலுங்க நின்றதையும் மீண்டும் பெண்ணாக மாறியதையும் பார்த்தது வரைக்கும் விவரித்தான். “மலர்குலுங்கற மரமா நீ நிக்கிற கோலத்தைப் பார்க்க ஆசையா இருக்குது. எனக்காக அந்த ஆசையை நிறைவேத்துவியா?” என்று ஏக்கத்துடன் கேட்டான்.

ஏக்கமும் எதிர்பார்ப்பும் கொண்ட அவன் கண்களை ஏறிட்டுப் பார்த்தாள் புஷ்பா. அவளால் அவன் கோரிக்கையை மறுக்கமுடியவில்லை. “ஐயோ, அதெல்லாம் பழைய கதை. இப்ப எதுக்கு?” என்று கொஞ்சிப் பேசி தப்பிக்க முயற்சி செய்தாள். ஆனால் அவன் தொடர்ந்து அவளிடம் ஒரு குழந்தையைப்போல கெஞ்சிக்கொண்டே இருந்தான். அதை மறுக்க அவளுக்கு மனம் வரவில்லை.

“சரி, போய் ரெண்டு குடம் தண்ணி எடுத்து வாங்க” என்றாள். அவன் உடனே ஓடோடிச் சென்று இரு குடங்களில் தண்ணீருடன் திரும்பி வந்தான். எல்லா வழிமுறைகளையும் எச்சரிக்கைகளையும் அவனிடம் சொன்னான்.

“தேவையில்லாம பூவைக் கிள்ளக்கூடாது. இலையைக் கிள்ளக்கூடாது. கிளையை ஒடிக்கக்கூடாது. கவனமா இருக்கணும்” என்று மீண்டும் மீண்டும் எச்சரித்தாள். அவன் எல்லாவற்றுக்கும் “சரி புஷ்பா” “சரி புஷ்பா” என்று புன்னகையோடு தலையாட்டினான்.

ஊஞ்சலைவிட்டு இறங்கி சில அடிகள் நடந்து ஓரிடத்தில் அமர்ந்தாள் புஷ்பா. உதடுகள் மட்டும் அசைய சில சொற்களை முணுமுணுத்தாள். பிறகு அவனைப் பார்த்து தண்ணீரை எடுத்து தன் தலைமீது ஊற்றும்படி கண்ணாலேயே அவனுக்கு சைகை செய்தாள். அவனும் பயபக்தியோடு அதைப்போலவே செய்தான். குடத்திலிருந்து கடைசிச்சொட்டு தண்ணீர் அவள் தலையில் விழுந்த மறுகணமே அவள் மறைந்துவிட, அந்த இடத்தில் அழகான மலர்மரம் நின்றிருந்தது.

அவன் விழிவிரிய அந்த மரத்தைப் பார்த்தபடி நின்றான். நிலவின் வெளிச்சத்தில் அந்த மலர்களின் நிறமும் அழகும் நெஞ்சைக் கவர்ந்தன. அந்த மலர்களின் நறுமணத்தில் அவன் மனம் நிறைந்தது. பரவசத்தில் “சொர்க்கம் சொர்க்கம்” என்று அவன் கூவினான். அவனை அறியாமல் அவன் கண்களிலிருந்து ஆனந்தக்கண்ணீர் வழிந்தது.

சில கணங்களுக்குப் பிறகு நிறைவுற்ற மனத்துடன் மற்றொரு குடத்தில் இருந்த தண்ணீரை அடிமரத்தைச் சுற்றி ஊற்றினான். கடைசிச்சொட்டு தண்ணீர் விழுந்ததும் அந்த மரம் இருந்த தடம் மறைந்தது. அந்த இடத்தில் புஷ்பா உட்கார்ந்திருந்தாள். “இப்ப சந்தோஷம்தானே?” என்று புன்னகையோடு கேட்டபடி அவள் எழுந்து அவனை நோக்கி வந்தாள். ”ரொம்ப ரொம்ப சந்தோஷம் கண்ணே” என்றபடி அவன் அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டான்.

தோட்டத்திலிருந்து ஒரு புதுவிதமான மணம் வருவதை உணர்ந்ததும் அதே வீட்டின் வேறொரு அறையில் படுத்திருந்த அந்த இளைஞனின் தங்கை த்ரிஷா சட்டென விழித்தெழுந்தாள். முதலில் அது கனவு என அவள் நினைத்திருந்தாள். ஆனால் அப்போதும் அந்த மணம் ஜன்னல் வழியாக தன் அறைக்குள் வருவதை உணர்ந்த பிறகு அதை கனவு என நினைக்க அவள் மனம் மறுத்தது. எங்கிருந்து இந்தப்  புதிய மணம் வருகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக படுக்கையிலிருந்து எழுந்து சத்தமில்லாமல் கதவைத் திறந்துகொண்டு தோட்டத்தின் பக்கம் நடந்தாள்.

தோட்டத்தை நெருங்கிய கணத்தில் சிக்கண்ணா நின்றிருப்பதையும் அவனுக்கு அருகில் ஒரு மலர்மரம் நின்றிருப்பதையும் அதன் முன்னால் கைவிரித்து மயங்கிய கோலத்தில் அவன் காணப்படுவதையும் அவள் பார்த்தாள். சட்டென ஒருகணம் அங்கேயே ஒரு மறைவிடத்தில் ஒதுங்கி நின்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தாள். தம் வீட்டுத் தோட்டத்தில் இந்தப் புதிய மரம் எப்படி ஒரே இரவில் வந்து முளைத்தது என்று புரியாமல் குழப்பத்தோடு நின்றிருந்தாள். அம்மரத்தின் பூக்களின் மணமே தன் அறை வரைக்கும் பரவியிருக்கிறது என்பதை அக்கணமே அவள் புரிந்துகொண்டாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் ஒரு குடம் தண்ணீரைக் கொண்டுவந்து அடிமரத்தைச் சுற்றி ஊற்றியதையும் அந்த இடத்தில் புஷ்பா எழுந்து நிற்பதையும் அவர்கள் இருவரும் கட்டித் தழுவிக்கொண்டதையும் பார்த்தாள். அந்த மாயமாற்றத்தைக் கண்டு த்ரிஷா மிகவும் பரவசம் கொண்டாள். இருவரில் ஒருவரும் தன்னைப் பார்த்துவிடாதபடி மெல்ல மெல்ல பின்வாங்கி நடந்து தன் அறைக்குள் சென்று படுத்துவிட்டாள் த்ரிஷா. என்றைக்காவது ஒருநாள் இதைப்பற்றி தன் அண்ணியிடம் பேசவேண்டும் என நினைத்து, அந்த விஷயத்தை ரகசியமாகவே தன் மனத்துக்குள் வைத்துக்கொண்டாள்.

சில வாரங்களுக்குப் பிறகு ஒரு வேலை தொடர்பாக சிக்கண்ணா வெளியூருக்குச் செல்லவேண்டியிருந்தது. நாலைந்து நாட்களில் திரும்பி விடுவதாக புஷ்பாவிடம் தெரிவித்துவிட்டு  விடைபெற்றுக்கொண்டு அவன் ஊரைவிட்டுப் புறப்பட்டுச் சென்றான்.

திருமணத்துக்குப் பிறகு தொடர்ச்சியாக தன்னோடு இருந்தவன் திடீரென பிரிந்துபோனதும் அப்பிரிவு புஷ்பாவை வாட்டியது. அவள் நெஞ்சில் வழக்கத்தைவிட அவனைப்பற்றிய நினைவுகள் அதிக அளவில் எழுந்தன.  வீட்டிலும் சரி, தோட்டத்திலும் சரி, எங்கு சென்று உட்கார்ந்தாலும் அவன் நினைவு எழுந்து ஆக்கிரமித்தது.

ஒருநாள் மாலை வேளையில் புஷ்பா தன் அறையில் தனியாக உட்கார்ந்திருந்தாள். அப்போது த்ரிஷா “என்ன அண்ணி இது? ஏன் எப்ப பார்த்தாலும் ஒரே சோகமா இருக்கீங்க? நானும் என் சிநேகிதிகளும் காத்துவாங்க ஆத்தங்கரை வரைக்கும் போறோம். நீங்களும் வாங்க. உங்களுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்” என்று ஆசையோடு அழைத்தாள்.  புஷ்பாவுக்கும் ஒரே இடத்தில் அடைந்து கிடக்காமல் எங்காவது வெளியே போய்வந்தால் நல்லது என்று தோன்றியது. அதனால் த்ரிஷா அழைத்ததும் தலைவாரி பூச்சூடிக்கொண்டு புறப்பட்டாள்.

த்ரிஷாவின் ஆறு தோழிகள் ஏற்கனவே வீட்டுக்கு வெளியே காத்திருந்தனர். அவர்களோடு புஷ்பாவும் சேர்ந்துகொண்டாள். எல்லோரும் கதைபேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சென்றார்கள். மாலைப்பொழுதில் ஆற்றங்கரை மணற்பரப்பில் ஓடிப் பிடித்து விளையாடினர். பக்கத்தில் இருந்த காட்டுப்பகுதிக்குச் சென்று மரங்களுக்கு நடுவில் கண்ணாமூச்சி விளையாடினர். அங்கிருக்கும் மரங்களில் பழுத்துத் தொங்கும் பழங்களைப் பறித்துத் தின்றனர். அவ்வப்போது தென்படும் குரங்குகளைக் கண்டு கைதட்டி ஆரவாரம் எழுப்பினர்.

மாலையில் சூரியன் மறையும் நேரம் வந்தது. ஆற்றின் மறுகரை விளிம்பை ஒட்டி சூரியன் முழுகுவதைப் பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது. அப்போது திடீரென அவளுக்கு சிக்கண்ணாவின் நினைவு வந்தது. அந்த அஸ்தமனக்காட்சியை அவனோடு சேர்ந்து பார்த்தால் அவன் என்னென்னவெல்லாம் சொல்வான் என அசைபோட்டு மகிழ்ந்தாள். அவளை அறியமால் அவள் முகத்தில் ஒரு புன்னகை வெளிப்பட்டது.

எல்லோரும் புறப்படுவதற்குத் தயாரான போது “அண்ணி, உங்ககிட்ட நான் ஒன்னே ஒன்னு கேப்பேன். எனக்காக செய்வீங்களா?” என்று கேட்டாள்.

அவள் கேள்வியின் உள்ளர்த்தம் புரியாமல் “என்ன த்ரிஷா? என்ன வேணும்? என்னால முடிஞ்சா உனக்காக கண்டிப்பா செய்வேன்” என்றாள் புஷ்பா.

உடனே த்ரிஷா ஒருநாள் இரவில் தோட்டத்தில் சிக்கண்ணாவும் அவளும் தனித்திருந்த நேரத்தில் அப்போது அவனுக்காக அவள் மலர் சொரியும் மரமாக நின்றதையும் பிறகு பெண்ணாக மாறியதையும் தான் பார்த்ததையும் தனக்கு எல்லாம் தெரியும் என்றும் தெரிவித்தாள்.

“எனக்காக ஒரே ஒருமுறை நீங்க மலர்மரமா மாறி நிக்கணும் அண்ணி. எனக்கு பார்க்கணும்போல ஆசையா இருக்குது. உங்களுக்கு அந்த சக்தி இருக்குதுங்கறத காட்டறதுக்காகத்தான் இவுங்க எல்லாரையும் நான் இங்க கூட்டி வந்திருக்கேன்” என்று மன்றாடினாள்.

“வேணாம் த்ரிஷா. அது ஒன்னும் நீ நினைக்கிறமாதிரி விளையாட்டுக் காரியமில்லை. ஏதாவது தப்பு நடந்தா விபரீதமா போயிடும்.  நான் சொன்னா கேளு. புறப்படலாம் வா” என்றாள் புஷ்பா.

த்ரிஷா விடவில்லை. தொடர்ந்து மன்றாடினாள். “எனக்காக ஒரே ஒருமுறை செய்யக்கூடாதா? என் மேல உங்களுக்கு கருணையே கிடையாதா?” என்று கண்ணீர் விட்டாள்.

ஒரு காலத்தில் தன் குடும்பத்தையே தாங்கிய தன் வரம் தன்னை இப்படி ஒரு இக்கட்டில் சிக்கவைத்திருப்பதை நினைத்து புஷ்பா வருத்தத்தில் மூழ்கினாள். அதே சமயத்தில் தன் கண் முன்னால் ஒரு பெண் கண்ணீர் விடுவதைப் பார்க்கவும் அவளுக்கு சங்கடமாக இருந்தது.

“சரி, உன் விருப்பப்படியே செய்யறேன். கண்ணீரைத் துடைச்சிக்கோ. நான் சொல்வதைக் கவனமாகக் கேள்” என்று த்ரிஷாவிடம் செய்யவேண்டிய ஒவ்வொரு செய்முறையையும் விளக்கமாகச் சொல். த்ரிஷா எல்லாவற்றுக்கும் சரி சரி என்று உற்சாகமாகத் தலையாட்டினாள்.

“நல்லா ஞாபகம் வச்சிக்கோ த்ரிஷா. தேவையில்லாம ஒரு பூவைக் கூட பறிக்கக்கூடாது. ஒரு இலையைக் கூட கிள்ளக்கூடாது. எந்தக் கிளையையும் புடிச்சி உலுக்கக்கூடாது. ஒடிக்கக்கூடாது”

த்ரிஷா மீண்டும் எல்லாவற்றுக்கும் சரி சரி என்று தலையாட்டினாள்.

புஷ்பா தரையில் உட்கார்ந்து கண்மூடி மந்திரச்சொற்களைச் சொல்லிமுடித்ததும் அவளுடைய கண் சைகைக்காகக் காத்திருந்த த்ரிஷா குடத்திலிருந்த தண்ணீரை அவள்மீது ஊற்றினாள். கடைசிச்சொட்டு தண்ணீர் விழுந்த மறுகணமே அவள் மலர்மரமாக மாறி நின்றாள். ஒரு மாயவித்தைபோல வண்ணவண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் மரம் திடீரென தன் கண் முன்னால் நிற்பதைப் பார்த்து த்ரிஷாவும் அவள் தோழிகளும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். ஒவ்வொரு மலரையும் தொட்டுத்தொட்டுப் பார்த்து ஆரவாரம் செய்தனர். உற்சாகத்தில் புஷ்பா சொன்ன நிபந்தனைகளை அனைவரும் மறந்தனர். ஒவ்வொரு பூவையும் கிள்ளி ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடத் தொடங்கினர். கைக்கு எட்டும் தொலைவில் இருந்த பூக்களையெல்லாம் பறித்து முடித்ததும் சற்றே தொலைவில் இருந்த பூக்களைப் பறிப்பதற்காக கிளையை எட்டி இழுத்தனர். அது மெல்லிய சத்தமுடன் முரிந்து விழுந்ததைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

ஆசை தீர ஆடி முடித்ததும்தான் அவர்களுக்கு வீட்டுக்குத் திரும்பும் நினைவு வந்தது. “சரி சரி போதும் விளையாட்டு. இருட்டற நேரமாயிடுச்சி. இதோடு நிறுத்திக்கலாம்” என்றாள் த்ரிஷா. அவள் குரல் எழுந்ததும் அனைவரும் விளையாடுவதை நிறுத்திவிட்டனர். அவள் ஓரமாக வைத்திருந்த இரண்டாவது குடத்தை எடுத்துவந்து மலர்மரத்தைச் சுற்றி தண்ணீரை ஊற்றினாள். ஒரு பெண் வேதனையில் முனகும் குரல் கேட்டதே தவிர, மலர்மரம் பெண்ணாக மாறவில்லை.

த்ரிஷா முதன்முறையாக அச்சத்தில் மூழ்கினாள். மரத்தை ஊன்றிக் கவனித்தாள். ஒரு கிளையின் விளிம்பில் புஷ்பாவின் முகம் மட்டும் தெரிந்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. வேதனை நிறைந்த அம்முகத்தை அவளால் நேருக்கு நேர் பார்க்கமுடியவில்லை. பயமாக இருந்தது. ஏதோ விபரீதமாக நடந்துவிட்டது என்பதை உணர்ந்ததும் அவள் உடல் நடுங்கியது. அவளுடைய தோழிகளும் அச்சத்தில் மூழ்கினர். மேலும் அங்கே நின்றிருந்தால் ஆபத்து என நினைத்து “வா வா த்ரிஷா. போயிடலாம்” என த்ரிஷாவை அழைத்தனர். த்ரிஷாவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. குற்ற உணர்ச்சி அவளை வாட்டியது.

“எங்க அண்ணன் வந்து கேட்டா நான் என்னன்னு பதில் சொல்றது?”

”எல்லாரும் ஒன்னா சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடிட்டிருந்தோம். மறைஞ்சிக்கிறதுக்காக காட்டுக்குள்ள போனா, திரும்பிவரலைன்னு சொல்லிடலாம். கவலைப்படாதே”

தோழிகள் சொல்லுக்குக் கட்டுப்படுவதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் தன் முட்டாள்தனமே காரணம் என அவளுக்குத் தோன்றினாலும் அந்தப் பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது அவளுக்குப் புரியவில்லை. அமைதியாக எதுவும் நடக்காததுபோல அனைவரோடும் சேர்ந்து அவள் வீட்டுக்குத் திரும்பிவிட்டாள்.

சில நாட்கள் கழித்து சிக்கண்ணா வீட்டுக்குத் திரும்பி வந்தான். வாசலைத் தாண்டும்போதே “புஷ்பா புஷ்பா” என்று அழைத்துக்கொண்டே வந்தான். பதில் இல்லை என்றதும் ஒவ்வொரு அறையாகச் சென்று தேடினான். கடைசியாக த்ரிஷா இருக்கும் அறைக்கு வந்து “புஷ்பா எங்க போனா?” என்று கேட்டான். த்ரிஷா நடந்த விஷயத்தை அவனிடம் விளக்கமாகச் சொன்னாள். அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டு அவனுக்கு நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது.  ஐயோ என்று இடிந்துபோய் ஒரு தூணுக்கடியில் சரிந்து உட்கார்ந்தான். அவனை அறியாமல் அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

அப்போதே சிக்கண்ணா ஆற்றங்கரைக்குச் சென்றான். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரைக்கும் காட்டுக்குள் சென்று தேடினான். இரவு கவிந்த பிறகுதான் நம்பிக்கையை இழந்து வீட்டுக்குத் திரும்பினான். அவனைப் பார்க்கப்பார்க்க த்ரிஷாவுக்கு பாவமாக இருந்தது. உண்மையைச் சொல்லிவிடலாமா என பல நேரங்களில் நினைத்தாள். ஆயினும் ஏதோ அச்சத்தில் மூழ்கி அமைதியாக இருந்தாள். அவளுடைய குற்ற உணர்வு அவளை வாட்டியது.

தன் தேடல் வேட்டையில் மனம் தளராமல் தொடர்ந்து ஈடுபட்ட சிக்கண்ணா ஒருநாள் சோர்ந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். அவனை அறியாமல் அவன் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது. புஷ்பா புஷ்பா என்று சொல்லிச்சொல்லிப் புலம்பினான்.

அப்போது எங்கிருந்தோ யாரோ வேதனையில் முனகும் சத்தம் கேட்டது. முதலில் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஏதோ ஒரு பறவையின் முனகல் என்றே நினைத்தான். ஆனால் தொடர்ச்சியாக எழுந்த அக்குரல் அவனை உருகவைத்தது. அது ஏதோ ஒரு மானுடக்குரல்தான் என்ற எண்ணம் எழுந்ததும் வேகமாக எழுந்து நின்று அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தான். அப்போதுதான் தான் அமர்ந்திருக்கும் மரத்தின் கிளையில் புஷ்பாவின் முகத்தைப் பார்த்தான். வேதனை படிந்த அவள் கண்களைப் பார்த்ததும் “புஷ்பா புஷ்பா” என்று கூவினான். அக்குரலைக் கேட்டதும் அவள் கண்கள் விரிந்தன. தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தது. ஆனால் அவளால் ஒரு சொல் கூட பேசமுடியவில்லை.

“ஐயோ. இது என்ன புஷ்பா? ஏன் இப்படி ஆச்சி?”

அப்போதுதான் மரத்தைச் சுற்றி விழுந்திருந்த பூக்களையும் கிளைகளையும் இலைகளையும் பார்த்தான். ஓரமாக உருண்டோடி கவிழ்ந்திருக்கும் குடத்தையும் பார்த்தான். என்ன நடந்திருக்கும் என்பதை அவனால் எளிதாக ஊகிக்க முடிந்தது.

கண்ணீர் பெருக “புஷ்பா புஷ்பா” என்று முணுமுணுத்தான். “தெய்வமே, என் புஷ்பாவை எனக்குத் திருப்பிக்கொடு” என்று மனமுருக வேண்டினான். பிறகு தரையில் கிடந்த ஒவ்வொரு பூவையும் எடுத்து அது பறித்தெடுக்கப்பட்ட இடத்தில் வைத்தான். ஆச்சரியமூட்டும் விதமாக, பூ உடனே அந்தக் கிளையுடன் ஒட்டிக்கொண்டது.

பூக்களைத் தொடர்ந்து இலைகளையும் கிளைகளையும் எடுத்துப் பொருத்தினான். மரம் பழைய நிலைக்குத் திரும்பியது. குடத்தை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த ஆற்றுக்குச் சென்று தண்ணீர் கொண்டுவந்து மரத்தைச் சுற்றி தெய்வத்தை நினைத்தபடி ஊற்றிவிட்டு கைகுவித்தபடி கண்களை மூடினான்.

ஒரு கணத்துக்குப் பிறகு கண் விழித்தபோது அந்த மரம் மறைந்துவிட்டதையும் புஷ்பா நிலைகுலைந்து சோர்வோடு சுருண்டு படுத்திருப்பதையும் பார்த்தான். உடனே ஓடோடிச் சென்று அவளை எடுத்து மடியில் சாய்த்துக்கொண்டு புஷ்பா புஷ்பா என்று பெயர் சொல்லி அழைத்தான். அவள் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்து ”வந்துட்டீங்களா?” என்றபடி சோர்வோடு புன்னகைத்தாள்.

“புஷ்பா, என் புஷ்பா” என்று சொன்னபடி அவளை நெஞ்சாரத் தழுவிக்கொண்டான் சிக்கண்ணா.

 

(கிழக்கு டுடே – இணைய இதழ் – 03.05.2025)