Home

Sunday, 11 May 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக் கதைகள் - 5 (பகுதி 2)


“என்ன, சீக்கிரம் சொல்லு” என்று அவசரப்படுத்தினார் ராஜா.

“எந்த வீடா இருந்தாலும் கட்டற வேலை மட்டும்தான் என்னை மாதிரியான ஆட்களுடையது. கட்டறதுக்கு முக்கியத் தேவையான செங்கல் எல்லாம் வேற ஒரு ஆளு சூளையில சுட்டு கொண்டுவரக்கூடிய பொருட்கள்தான். அந்தச் செங்கல்லுலதான் ஏதோ ஒரு தப்பு நடந்திருக்கணும் ராஜா” என்று சொல்லிவிட்டு நிறுத்தினான் கட்டடவேலை செய்பவன்.

அவன் கூற்றில் ஒரு நுட்பமான பொருள் இருப்பதாக ராஜாவுக்குத் தோன்றியது. “ஆமாம், ஆமாம், நீ சொல்றது உண்மைதான்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். உடனே ஆட்களை அழைத்து ”உடனே போய் அந்தச் செங்கல் சூளைக்காரனை அழைச்சிட்டு வாங்க” என்று அனுப்பினார்.

வேலைக்காரர்கள் பல இடங்களில் தேடி அலைந்து கடைசியில் ஒரு வழியாக செங்கல் சூளை வைத்திருப்பவனைக் கண்டுபிடித்து விஷயத்தையெல்லாம் சொல்லி அழைத்துவந்து ராஜாவின் முன்னால் நிறுத்தினர்.

“நீதான் இந்த வியாபாரி கட்டின வீட்டுக்கு செங்கல் கொடுத்தியா?” என்று நேரிடையாக விஷயத்துக்கு வந்தார் ராஜா. அவன் “ஆமாம் ராஜா” என்று பணிவோடு தலையசைத்தான்.

“அப்ப வியாபாரியுடைய வீடு இடிஞ்சி விழறதுக்கு நீதான் மூலப்பொறுப்பு. உனக்குத்தான் தண்டனை கொடுக்கணும்” என்று அவசரமாகச் சொன்னார் ராஜா.

“நீங்க தண்டனை கொடுத்தா தாராளமா ஏத்துக்கறேன் ராஜா. அதுக்கு முன்னால நான் சொல்ற வார்த்தையை கேக்கணும்.” என்று ராஜாவின் முகத்தைப் பார்த்தான் சூளைக்காரன்.

“என்ன சொல்லப் போற நீ?” என்று அதட்டலாகக் கேட்டார் ராஜா.

“வியாபாரியுடைய வீட்டுக்கு செங்கல் கொடுக்கறதுக்குத்தான் புதுசா ஒரு சூளையை போட்டேன். அதுக்குத் தேவையான செங்கல்லுக்காக,  களிமண்ணை கொழைச்சி கல் அறுத்துட்டிருந்த சமயத்துல பக்கத்து வீட்டுல நாட்டியக்கச்சேரிக்கு ஒரு இளவயசுப்பொண்ணு சலங்கைகட்டி ஆடி பயிற்சி எடுத்துட்டிருந்தா. ராஜா, அந்தச் சலங்கைச்சத்தம் எல்லாரையும் ஒரு மாதிரி பைத்தியம் புடிக்கிறமாதிரி வைச்சிடுச்சி. அடிக்கடி ஆளுங்க அந்தப் பொண்ணு மூஞ்சிய பாக்கறதுக்காக திரும்பித்திரும்பி பார்த்துகிட்டே வேலை செஞ்சாங்க. அதனால செங்கல் தயாரிப்புல முறைதவறி ஏதோ கோளாறு ஏற்பட்டுச்சி. எல்லாத்துக்கும் காரணம் அந்த நாட்டியக்காரிதான் ராஜா” என்றான் சூளைக்காரன்.

அவனுடைய விவரிப்பில் ஒரு உண்மை இருப்பதாக ராஜாவுக்குத் தோன்றியது. உடனே ஆட்களை அழைத்து ”சீக்கிரமா போய் அந்த நாட்டியக்காரியை அழைச்சிட்டு வாங்க” என்று அனுப்பினார்.

உடனே வேலைக்காரர்கள் வெளியேறி நாட்டியக்காரி இருக்கும் இடத்தைத் தேடி அலைந்தனர். பலரிடம் விசாரித்து அவளுடைய வசிப்பிடத்தைக் கண்டுபிடித்து, தேடிவந்ததன் காரணத்தையும் சுருக்கமாக விவரித்துவிட்டு, தம்மோடு அழைத்துவந்தனர். 

“இந்த சூளைக்காரங்க செங்கல் அறுத்திட்டிருந்த சமயத்துல  நீ சலங்கை கட்டி நாட்டியப்பயிற்சி செஞ்சிட்டிருந்தியா?”  என்று நேரிடையாகக் கேள்வி கேட்டார் ராஜா. நாட்டியக்காரி உடனே “ஆமாம் ராஜா” என்று பணிவோடு சொன்னாள்.

“உன்னுடைய சலங்கைச்சத்தத்தால என்னென்ன விபரீதம்லாம் நடந்திருக்குது தெரியுமா?” என்று கேட்டுவிட்டு ஒவ்வொன்றாக அவளிடம் நிறுத்தி நிதானமாக அடுக்கினார்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்பதுபோல தலைவணங்கி நின்றிருந்தாள் நாட்டியக்காரி. ஆனால் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து எப்படி தப்பிப்பது என்று அவளுடைய ஆழ்மனம் திட்டமிட்டபடி இருந்தது. சட்டென மின்னல்போல ஓர் எண்ணம் அவள் நெஞ்சில் உதித்தது. அடுத்து “ராஜா, நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?” என்று பணிவோடு கேட்டாள்.

“என்ன? சீக்கிரம் சொல்” என்றார் ராஜா.

“அன்னைக்கு நான் சலங்கை கட்டி ஆடினது உண்மைதான் ராஜா. அதை நான் மறுக்கலை. ஆனா, அதுக்கு ஒரு காரணம் இருக்குது ராஜா”

“என்ன காரணம்?”

“கால்ல போடற சலங்கைக்குப் பொருத்தமா கையிலயும் வளையல் போட்டு ஆடறதுதான் ஒரு நாட்டியக்காரிக்கு அழகு ராஜா. அப்படித்தான் எல்லா நாட்டியக்காரிகளும் ஆசைப்படுவாங்க. நானும் அப்படித்தான் ஆசைப்பட்டேன். என் சலங்கைக்கு பொருத்தமா ஒரு டஜன் வளையல் வேணும்னு அந்த நகைவியாபாரிகிட்ட ரொம்ப நாள் முன்னாலயே சொல்லி வச்சிருந்தேன். கை அளவு கூட கொடுத்து முன்பணம் கூட கொடுத்து வச்சிருந்தேன். சொல்லிவச்சி நாளுங்கதான் ஓடிச்சே தவிர, அவரு வளையலைச் செஞ்சி குடுக்கிற வழியாவே தெரியலை. எப்ப போய் கேட்டாலும் நாளைக்கு நாளைக்குன்னு சாக்குப்போக்கு சொல்லி அனுப்பிவச்சிடுவாரு. அவர் மட்டும் சொன்ன நேரத்துக்கு ஒழுங்கா  வளையல்களை செஞ்சி குடுத்திருந்தாருன்னா, நான் வளையலை மட்டும் போட்டுகிட்டு பயிற்சி செஞ்சி பார்த்திருப்பேன். அப்ப சத்தம் பெரிசா கேட்டிருக்காது. ஆனா அவரு வளையலைக் கொடுக்காததால வேற வழியில்லாம சலங்கையை மட்டும் போட்டுகிட்டு பயிற்சி செஞ்சேன். அந்த சத்தம் இவ்வளவு விபரீதத்தை ஏற்படுத்தும்னு நான் கனவுல கூட நினைச்சிப் பார்த்ததில்லை. இதுல என் தப்பு எதுவும் இல்லை ராஜா. எல்லாமே இந்த வியாபாரியுடைய தப்பு”

நாட்டியக்காரி சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்ட ராஜாவுக்கு அந்தப் பெண்ணின்மீது கருணை பிறந்தது. எல்லாக் குற்றங்களுக்கும் மூல காரணம் அந்த வியாபாரியே என்று அவர் முடிவு கட்டினார். தண்டனையை அறிவிக்கும் எண்ணத்துடன் அந்த வியாபாரியின் பக்கம் திரும்பினார். “உன் தப்பை மறைப்பதற்காக மத்தவங்க மீது பழி சுமத்திடலாம்னு நெனைச்சிட்டியா?” என்று கேட்டார்.

“அப்படியெல்லாம் நெனைக்காதீங்க ராஜா. என் மேல ஒரு தப்பும் இல்லை. நாட்டியக்காரி செஞ்சி கொடுக்கச் சொன்ன வளையல்களை எங்க தச்சாசாரிங்க எப்பவோ செஞ்சி முடிச்சிட்டாங்க. தங்கம் சம்பந்தமான பொருள்ங்கறதால, அதை நல்ல சகுனத்துலதான் எடுக்கணும், கொடுக்கணும்ங்கறது ஒரு சம்பிரதாயம் உண்டு ராஜா. காலையில விழிப்பு வர்ர வேளைதான் ஒரு நாள்ல நல்ல முகூர்த்தம் ராஜா. ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்ததும் குளிச்சிட்டு அந்த நேரத்துல அந்த வளையல்ங்களை வாங்கிட்டு வரதுக்காக தச்சாசாரிங்க வீட்டுக்கு கெளம்புவேன்.  ஆனா, வீட்டு வாசலைத் தாண்டி நடக்கற சமயத்துல மொட்டை அடிச்சிகிட்டு, உடம்பு பூரா சாம்பலால பட்டையை போட்டுகிட்டு யானை மாதிரி தடியா ஒரு ஆளு எதுத்தாப்புல வந்துடுவான். அவன் இந்த ஊரே இல்லை. ஏதோ வெளியூருகாரன். இங்க வந்து மண்டபத்துல படுத்துங்கெடக்கறான். அவனைப் பார்த்தாவே வெளங்காமூஞ்சியா இருக்கும். அப்படி ஒரு மூஞ்சிய பார்த்துட்டு போனா, போற காரியம் விளங்குமான்னு எனக்கு மனசுக்குள்ள தோணும். சரி, விடு, நாளைக்குப் போயிக்கலாம்னு வீட்டுக்கே திரும்பிடுவேன். ஒரு நாள் இல்ல, ரெண்டு நாள் இல்ல, ஆறேழு மாசமா இதே கதைதான் நடக்குது. நாட்டியக்காரிக்கு சொன்ன தேதியில வளையலை கொடுக்கமுடியாததுக்கு இதுதான் காரணம் ராஜா”

இரக்கத்தைத் தூண்டும் விதமாக வியாபாரி விவரித்த கதையைக் கேட்டு ராஜாவுக்கும் சங்கடமாக இருந்தது. ஆயினும் குரலில் கடுமையை வரவழைத்துக்கொண்டு ”நீ சொல்ற விஷயம் மட்டும் பொய்யா இருந்தா, உனக்குத் தூக்குதண்டனை நிச்சயம்” என்று எச்சரித்தார். பிறகு வேலையாட்களை அழைத்து முதலில் தச்சாசாரிகள் வசிக்கும் குடியிருப்புக்கு அனுப்பி, வியாபாரி சொன்ன விஷயம் உண்மைதானா என்று அறிந்துகொண்டு வருமாறு அனுப்பிவைத்தார்.

சிறிது நேரத்தில் வேலையாட்கள் திரும்பிவந்து ஆசாரிமார்களிடம் விசாரித்ததாகவும் வளையல்கள் தொடர்பான விஷயம் உண்மைதான் என்றும் தெரிவித்தனர். அதைக் கேட்டதும் ராஜா மெளனமாக வியாபாரியின் பக்கம் பார்த்தார். தான் தெரிவித்த உண்மையை ராஜா உணர்ந்துகொண்டார் என்ற நிம்மதி உணர்வு வியாபாரியின் முகத்தில் படிந்திருந்தது.

ஒருகணம் யோசனையில் மூழ்கிய ராஜா ஒவ்வொரு நாள் காலையிலும் அவலட்சணமான முகத்துடன் மண்டபத்தில் ஒதுங்கியிருக்கும் ஆண்டியைக் கண்டுபிடித்து அழைத்து வருமாறு சொன்னார்.  உடனே ஆட்கள் புறப்பட்டுச் சென்றனர். ஊரில் புதிதாக நடமாடுகிறவர்கள் யார் என்கிற கேள்விக்கு எல்லோருமே குரு-சீடன் தங்கியிருக்கும் மண்டபத்தின் பக்கம் கையைக் காட்டினர். உடனே ஆட்கள் குளத்தங்கரைக்குச் சென்றனர். அங்கே குரு ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்து கண்மூடி தியானத்தில் மூழ்கியிருக்க, சீடன் மட்டும் பரபரப்போடு அங்குமிங்கும் பார்த்தபடி நடமாடிக்கொண்டிருந்தான்.  அவன் முகத்தைப் பார்த்ததுமே தான் தேடிவந்த ஆள் அவனே என்று வேலையாட்கள் உறுதியாக நம்பினர். உடனே அவனை ”வா. உன்னை ராஜா கூப்பிடுறார்” என்று சொல்லி அழைத்துச் சென்றனர்.  அவர்கள் எழுப்பிய சத்தத்தைக் கேட்ட பிறகு மெல்ல கண்விழித்த குரு என்ன நடக்கிறது என்பது புரியாமல் ஒருகணம் குழப்பமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். பிறகு அவர்களுக்குப் பின்னாலேயே  சென்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என்னும் எண்ணத்தோடு நடக்கத் தொடங்கினார்.

ராஜாவின் முன்னால் சீடன் நிறுத்தப்பட்டதுமே, ராஜா வியாபாரியின் பக்கம் திரும்பி “நீ சொன்ன ஆள் இவன்தானா?” என்று கேட்டார். மொட்டைத்தலையுடன் உடல்பருத்து காணப்பட்ட அவனைப் பார்த்ததுமே வியாபாரி “இவனேதான் ராஜா, இவனேதான்” என்று குதித்தார். தொடர்ந்து “நீங்களே ஒருமுறை இவனை உற்றுப் பாருங்க ராஜா. இந்த அவலட்சணமான மூஞ்சியைப் பார்த்துட்டுப் போனா, போகிற காரியம் உருப்படுமா? நீங்களே ஒருமுறை பார்த்துட்டு சொல்லுங்க ராஜா” என்றார்.

சீடனை ஒருமுறை ஏற இறங்க கவனமுடன் பார்த்தார் ராஜா. தான் எதற்காக அவைக்கு அழைத்துவரப் பட்டிருக்கிறோம் என்பதைப் பற்றி எதுவும் தெரியாத சீடன் குழப்பத்தோடு ”ராஜா,  நான் ஒரு தப்பும் செய்யலையே. என்னை எதுக்காக இங்க இழுத்து வந்திருக்காங்க?” என்று கேட்டான்.

“நீ நேரிடையா ஒரு தப்பும் செய்யலை. ஆனா மறைமுகமா பல தப்புகள் இந்த ஊருல நடக்கறதுக்கு நீ காரணமா இருந்திருக்க” என்றார் ராஜா.

சீடன் குழப்பத்துடன் ராஜாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். ராஜா ஒவ்வொன்றாக விஷயத்தை அடுக்கடுக்காகத் தெரிவித்தார். இறுதியாக, அவன் செய்த குற்றத்துக்காக அவனுக்குத் தூக்குத்தண்டனை விதிப்பதாக அறிவித்தார். அடுத்தநாள் காலையில் ஊரெல்லையில் உள்ள தூக்குமேடையில் அவன் தூக்கிலிடப்படுவான் என்று தண்டனையையும் அறிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

தண்டனையின் அறிவிப்பைக் கேட்டு சீடன் துயரத்தில் மூழ்கினான்.  எதற்காக இந்த ஊரில் தங்கினோம் என்று தன்னையே நொந்துகொண்டான். இந்த ஊரைவிட்டுச் சென்றுவிடலாம் என ஏதோ உள்ளுணர்வின் தூண்டுதலால் தன்னை எச்சரித்த குருவின் பேச்சைக் கேட்காதது குறித்தும் அவரைத் தன் சாமர்த்தியத்தால் அமைதிப்படுத்தி அதே ஊரில் தங்கியிருக்கும் முடிவை எடுத்தது குறித்தும் வருந்தினான்.

சீடனின் பின்னாலேயே சென்ற குரு அந்தச் சபையின் ஓரமாக ஒதுங்கி நின்று, அங்கு நடைபெற்ற விசாரணையையெல்லாம் பார்த்தார். தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவனை வேலையாட்கள் அழைத்துச் சென்றதையும் பார்த்தார். எங்கும் குறுக்கிட்டுத் தடுக்கமுடியாத தன் நிலையை எண்ணி வருத்தமடைந்தார்.  தன் சீடனை எப்படி காப்பாற்றுவது என அன்று முழுநாளும் யோசித்தபடி இருந்தார்.

அடுத்தநாள் பொழுது விடிந்ததும் அவர் சீடன் அடைக்கப்பட்டிருக்கும் இடத்தைப்பற்றி விசாரித்துக்கொண்டு சென்றார். யாரோ ஒன்றிரண்டு பேர் வழியைச் சொல்ல, அதே வழியில் சென்று அந்தப் பெரிய கட்டடத்தின் முன் நின்றார்.

வெளியே நின்றிருந்த காவல்காரனிடம் ஒரு நிமிடம் தன் சீடனிடம் பேசுவதற்கு அனுமதி கேட்டார். “நாளைக்கு காலையில தூக்குல போடவேண்டிய ஆளு. பத்திரமா வச்சிருக்கறோம். பக்கத்துல போவாதீங்க. எட்டி நின்னு சீக்கிரமா பேசிட்டு வந்துடுங்க” என்று எச்சரித்துவிட்டு, அவரை உள்ளே அனுப்பிவைத்தான் காவல்காரன்.

உள்ளே சென்ற குரு சீடன் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே நின்று சீடனை அழைத்தார். சுவரோடு ஒட்டியவனாக உள்ளே அமர்ந்திருந்த அவன் ஒரே பாய்ச்சலில் கதவுக்கு அருகில் வந்துவிட்டான்.

“என்னை மன்னிச்சிக்குங்க குருவே. அன்னைக்கு நீங்க சொன்னபடி நான் கேட்டிருந்தா நாம ஏதாவது ஒரு இடத்துல ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கலாம். இப்படி ஒரு சிக்கல்ல சிக்கியிருக்கமாட்டேன். நான் செஞ்ச ஒரு தப்பால இப்படி முட்டாளுங்க நடுவுல சிக்கி என்னுடைய உயிரே போவப்போவுது” என்று அழுதான் சீடன்.

சீடனின் கண்ணீரைப் பார்த்ததும் குருவின் மனம் உருகியது. “கவலைப்படாதே, உனக்கு உதவி செய்யறதுக்காகத்தான் நான் வந்திருக்கேன். நாளைக்கு காலையில ஊரு எல்லையில உன்னை தூக்குமரத்துல ஏத்தற சமயத்துக்கு சரியா நான் அங்க வந்து சேருவேன். இப்ப நான் ஒரு விஷயம் சொல்றேன். நல்லா கேட்டுக்கோ. அதுமாதிரி  செஞ்சா நீ பிழைச்சிக்கலாம். நாம ரெண்டு பேரும் இந்த ஊருலேர்ந்து தப்பிச்சிடலாம்” என்றார் குரு.

“என்ன குருவே?” என்று கேட்டான் சீடன்.

சீடனின் அருகில் சென்ற குரு, அவன் காதோடு ஒரு ரகசியத்தைச் சொன்னார். சீடன் அதைக் கேட்டு தலையசைத்துக்கொண்டான். அவன் அதுவரையில் உணராத ஒரு நிம்மதியை அக்கணத்தில் உணர்ந்தான். அவன் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. பிறகு குரு அவனிடமிருந்து விடைபெற்று அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்.

அடுத்தநாள் காலையில் ஊர் எல்லையில் மக்கள் அனைவரும் கூடியிருந்தனர். ராஜாவும் வந்திருந்தார். அவர் அமர்ந்து பார்ப்பதற்காக ஒரு பெரிய ஆசனம் போடப்பட்டிருந்தது. அதில் உட்கார்ந்துகொண்டு ராஜா “ம், தண்டனைக்கைதியை கொண்டுவாங்க. சீக்கிரம் தண்டனை முடியட்டும்” என்று அவசரப்படுத்தினார்.

சீடனை அழைத்துவந்த ஆட்கள் அவனை தூக்குமேடையில்  நிற்கவைத்தனர். அவன் முகத்தில் எவ்விதமான கலக்கமும் இல்லை. பதற்றமில்லாமல் அமைதியாக இருந்தான். அவன் முகத்தை மூடுவதற்காக ஒரு பெரிய கருப்புத்துணியோடு அவனுக்கு அருகில் ஒரு வேலைக்காரன் சென்றான்.

அந்த நேரத்துக்குச் சரியாக, கூட்டத்துக்கு நடுவில் நின்றிருந்த குரு “மன்னிக்கவும் ராஜா. உங்ககூட ஒரே ஒரு நிமிடம் பேசணும்” என்று அனைவரையும் விலக்கிக்கொண்டு ராஜாவின் இருக்கைக்கு முன்னால் வந்து நின்றார்.

“எதுவா இருந்தாலும் தண்டனை முடியட்டும். அதுக்கப்புறம் பேசிக்கலாம்” என்றார் ராஜா.

“தண்டனையைப்பற்றித்தான் உங்ககூட பேசணும் ராஜா. ஒரே ஒரு நிமிடம் போதும்” என்று கெஞ்சினார் குரு.

ராஜா குருவை ஒருகணம் உற்றுப் பார்த்தார்  “முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க. அதுக்கப்புறமா நீங்க என்ன நினைக்கறீங்களோ அதைச் சொல்லுங்க” என்றார்.

“இதோ, தூக்குமேடையில நிக்கிறானே, இவனுடைய குரு நான். இவன் என்னுடைய சீடன்”

“ஓஹோ”

“இவ்வளவு காலமும் என்கூட இருந்தும் கூட, இவனை நல்லபடியா ஆளாக்கமுடியாம போயிடுச்சி. அதுவே எனக்குப் பெரிய குற்ற உணர்வா இருக்குது. இவனை நல்லவிதமா ஆளாக்காம இருந்தது என்னுடைய முதல் குற்றம். நான் இவனை ஒழுங்கா கவனிச்சிருந்தா, இவன் இந்த நிலைமைக்கு வந்திருக்கமாட்டான். அதனால இவனுக்குத் தரவேண்டிய தூக்குத்தண்டனையை எனக்குக் கொடுங்க. நான் முழுமனசோட அந்தத் தண்டனையை ஏத்துக்கறேன்” என்று சொல்லிக்கொண்டே தூக்குமேடையில் ஏறி சீடனுக்குப் பக்கத்தில் சென்று நின்றுவிட்டார்.

ராஜா அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இது என்ன புது குழப்பம் என்று சிந்தனையில் மூழ்கினார்.

“எங்க குரு சொல்றத கேக்காதீங்க ராஜா. வாய்ப்பிருந்தும் நல்ல விஷயங்களைக் கத்துக்காம இருந்தது என் தப்புத்தான். இதுல குருவுடைய தப்பு எதுவும் இல்லை. தூக்குத்தண்டனை எனக்குரியதாவே இருக்கட்டும்” என்றான் சீடன்.

“ராஜா, வயசுல நான் பெரியவன். நான் சொல்றத தயவுசெஞ்சி கேளுங்க. தூக்குத்தண்டனை எனக்குரியதாவே இருக்கட்டும்” என்று வாதாடினார் குரு.

”இல்லை இல்லை. எனக்கு அளிக்கப்பட்ட தண்டனை எனக்கு உரியதாவே இருக்கட்டும். அதை மாத்தவேணாம்” என்றான் சீடன்.

குரு, சீடன் இருவருக்குமிடையில் நடைபெற்ற விவாதத்தைக் கேட்டு சுற்றி நின்றிருந்தவர்கள் குழப்பத்தில் மூழ்கினர். முடிவு என்னவாக இருக்கப் போகிறது என்று தெரிந்துகொள்வதில் ஒவ்வொருவருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது.

ராஜாவுக்கு என்ன முடிவெடுப்பது என்பதைப்பற்றி ஒரு தெளிவும் பிறக்கவில்லை. ”இது என்ன புது குழப்பமா இருக்குது? இதுவரைக்கும் இப்படி நடந்ததில்லை” என்று முணுமுணுத்தார்.

“நான் ஒரு முன்மாதிரியா இருக்கணும்னு நினைக்கறேன் ராஜா” என்றார் குரு.

அப்போது சீடன் குறுக்கிட்டு, “ராஜா, வேணும்ன்னா குருவையும் நீங்க தூக்குல போடுங்க. ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனா, என்னை முதல்ல தூக்குல போட்டுட்டு, அதுக்கப்புறம் அவரை போடுங்க” என்றான்.

“இல்லை. இல்லை. என்னைத்தான் முதல்ல போடணும். அதுக்கப்புறம் அவனுக்கு தண்டனை கொடுத்தாலும் சரி, கொடுக்காட்டாலும் சரி, உங்க விருப்பம்” என்றார் குரு.

ராஜாவுக்கு மனம் குழம்பியது. “சாகறதுக்கு ஏன் நீங்க ரெண்டு பேரும் நான் நான்னு முன்னால வரீங்க, எனக்கு ஒன்னுமே புரியலையே” என்றார்.

“ராஜா, என்னை முதல்ல தூக்குல போடச் சொல்லுங்க” என்றார் சீடன்.

“நான் இவனுடைய குரு. நான் சொல்றதை கேளுங்க. என்னை முதல்ல தூக்குல போடச் சொல்லுங்க” என்றார் குரு.

“இங்க பாருங்க. விசாரணைப்படி அவன்தான் குற்றவாளின்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கோம். அதை மாத்தமுடியாது. அதனால அவனைத்தான் முதல்ல தூக்குல போடணும்” என்று முடிவாக அறிவித்தார் ராஜா.

அதைக் கேட்டு சீடனின் முகம் மலர்ந்தது. குருவின் முகம் வாட்டமடைந்தது. அதைப் பார்த்த ராஜாவுக்கும் சற்றே வருத்தமாக இருந்தது. “என்ன விஷயம், ரெண்டு பேரும் உண்மையைச் சொல்லுங்க. தூக்குல தொங்கறதுக்கு ஆளாளுக்கு ஏன் முந்திக்கறீங்க?” என்று குருவிடம் கேட்டார். குரு ஒருகணம் அமைதியாக நின்றிருந்தார். பிறகு ராஜாவை நோக்கி இரண்டடி தொலைவு நெருங்கிச் சென்று நின்றார். அடங்கிய குரலில் “அதுல ஒரு சின்ன ரகசியம் இருக்குது ராஜா” என்று சொன்னார்.

“ரகசியமா, என்ன ரகசியம்?” என்று கேட்டார் ராஜா. குரு ஒருகணம் தன்னையே கவனித்தபடி நின்றிருக்கும் கூட்டத்தைப் பார்த்தார். பிறகு ”என்னுடைய ஞானக்கண்ணால நான் ஒரு காட்சியைப் பார்த்தேன் ராஜா. அதுதான் முக்கியமான காரணம்” என்று ராஜாவுக்கு மட்டும் கேட்கிறவகையில் ரகசியமான குரலில் சொன்னார். அது என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் ராஜாவும் குரலை மட்டுப்படுத்தி “அது என்ன ரகசியம், கிட்ட வந்து சொல்லுங்க” என்றார்.

குரு இன்னும் சில அடிகள் நடந்து ராஜாவுக்கு அருகில் சென்றார். அவர் காதருகில் குனிந்து “இன்னைய முகூர்த்தத்துல யார் முதல்ல தூக்குல தொங்கி உயிர் விடறாங்களோ, அவுங்களுக்கு அடுத்தடுத்த ஏழு பிறப்புகள்லயும் ஏதோ ஒரு ராஜ்ஜியத்துக்கு ராஜாவா இருக்கக்கூடிய அதிர்ஷ்டம் கிடைக்கப்போவுது. அதுதான் நான் பார்த்த காட்சி” என்று முணுமுணுத்தார்.

அதைக் கேட்டு ராஜா தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று துள்ளிக் குதித்தார். “உண்மையாகவா சொல்றீங்க?” என்று கண்கள் மின்ன கேட்டார்.

“ஆமாம் ராஜா. சத்தியமா நான் அந்தக் காட்சியைப் பார்த்தேன்” என்றார் குரு.

”ஏழு பிறவியிலயும் ராஜாவா?” என்று மீண்டும் கேட்டார் ராஜா.

”ஆமாம் ராஜா. இது ஒரு அபூர்வமான முகூர்த்தம்” என்றார் குரு.

அதைக் கேட்டு ராஜா தண்டனையை நிறைவேற்ற தூக்கு மேடையில் காத்திருக்கும் ஊழியர்களை அழைத்தார். சீடனை விடுவிக்கும்படி ஆணையிட்டார். “இந்தக் கணமே என்னைத் தூக்கிலிடுங்கள். இது என் கட்டளை” என்று சொன்னபடி தூக்கு மேடையில் ஏறி நின்றார். சீடனும் குருவும் திகைத்த முகத்துடன் ஒதுங்கி நின்றனர். மேடையைச் சுற்றி வேடிக்கை பார்க்க நின்றிருந்த பொதுமக்கள் எதுவும் புரியாமல்  குழப்பத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

ராஜா என்ன சொல்கிறார் என்பதை முற்றிலும் புரிந்துகொள்ள இயலாமல் தடுமாற்றத்தோடு நின்றிருந்தனர் ஊழியர்கள்.

“முட்டாள்களே, நான் சொல்வது புரியலையா? உங்க ராஜாவுடைய கட்டளை இது. என்னைத் தூக்கிலிடுங்க” என்று சத்தம் போட்டு சொன்னார் ராஜா.

வேறு வழியில்லாத ஊழியர்கள் அக்கணமே கருப்புத்துணியால் அவருடைய முகத்தை மூடி கயிற்றில் சுருக்கிட்ட கயிற்றை மாட்டிவிட்டு தூக்குமேடையில் நிறுத்தினர். அடுத்த கணமே இன்னொரு ஊழியர் காலுக்குக் கீழே இருந்த பலகையை இழுத்துவிட்டார். சிறிது நேரத்தில் ராஜாவின் உயிர் பிரிந்துவிட்டது.

“என்ன இது?” ”ஏன் இப்படி?” என்று குழப்பத்துடன் ஆளாளுக்கு ஒரு கேள்வியைக் கேட்டபடி அங்கேயே கூட்டமாக நின்று அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். குருவையும் சீடனையும் ஒருவரும் கவனிக்கவில்லை. அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு அந்தக் கூட்டத்தைவிட்டு வேகவேகமாக வெளியேறினர். பிறகு அந்த ஊரைவிட்டே வெளியேறினர்.

 

(கிழக்கு டுடே – இணைய இதழ் – 25.04.2025)