புஷ்பா
ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் ஏழ்மையான நிலையில் வசித்துவந்தது. நடுவயதைக் கடந்த ஒரு அம்மாதான் அக்குடும்பத்தின் தலைவி. அவளுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். மூத்தவள் பெயர் புனிதா. இளையவள் பெயர் புஷ்பா.
அவர்களுடைய
வீட்டின் பின்பக்கம் ஒரு பெரிய பூந்தோட்டம் இருந்தது. அத்தோட்டத்தில் பலவிதமான
பூக்கள் பூத்துக் குலுங்கின. தினந்தோறும் காலையில் தூங்கி எழுந்ததும் அந்த அம்மா
தோட்டத்துக்குச் சென்று ஒரு சிறிய கூடை நிறைய பூக்களைப் பறித்து எடுத்துவருவாள்.
அவர்கள்
வசித்துவந்த குடிசையிலிருந்து நடந்து செல்கிற தொலைவில் ஒரு காடு இருந்தது. அந்தக்
காட்டுக்குள்ளேயும் ஒரு பூந்தோட்டம் இருந்தது. அந்தப் பூக்களில் இருந்து எழும்
நறுமணம் இனிய மயக்கத்தைக் கொடுப்பதுபோல இருக்கும். தோட்டத்தில் அம்மா பூக்களைப்
பறிக்கும் சமயத்தில் இரு மகள்களும் காட்டில் உள்ள பூந்தோட்டத்துக்குச் செல்வார்கள்.
நடக்கும்போது சிரிக்கச்சிரிக்க கதை பேசிக்கொண்டே சென்று வருவதால் அவர்களுக்கு
களைப்பே தெரியாது. அங்கிருக்கும் பூந்தோட்டத்தில் ஏராளமான பூக்கள் பூத்துக்
குலுங்கும். இருவரும் சேர்ந்து கூடை
நிறைய பூக்களைப் பறித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி வருவார்கள்.
காலையில்
கஞ்சி குடித்தபிறகு இரு மகள்களும் ஆளுக்கு ஒரு கூடையை எடுத்துக்கொண்டு பூக்களை
விற்று வருவதற்காக சந்தைக்குச் செல்வார்கள். சந்தைக்குச் செல்லும் வழியில் உள்ள
தெருக்களில் ”பூ வாங்கலையோ பூ” என்று கூவியபடி செல்வார்கள். சிலர் தம்
வீடுகளிலிருந்து வெளியே வந்து பூ வாங்கிக்கொண்டு செல்வார்கள். கூடைகளில் நிரப்பி
எடுத்துவந்த பூக்களில் பெரும்பகுதியை தெருவில் வசிப்பவர்களே வாங்கிவிடுவார்கள்.
எஞ்சியிருக்கும் பூக்கள் சந்தையில் உச்சி வேளைக்குள் விற்பனை ஆகிவிடும்.
விற்பனையில்
கிடைத்த பணத்தில் சாப்பாட்டுக்குத் தேவையான அரிசி, காய்கறிகள், உப்பு, புளி முதலிய
பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள்.
அவர்கள்
வந்ததும் சமையல் வேலையைத் தொடங்குவாள் அம்மா. சமைத்து முடித்ததும் அனைவரும் ஒன்றாக
உட்கார்ந்து கதை பேசிக்கொண்டு சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுடைய பொழுது
அப்படித்தான் கழிந்துவந்தது.
புனிதாவும்
புஷ்பாவும் சகோதரிகள் என்றபோதும், அதையும் கடந்து இருவரும் நல்ல தோழிகளாக
இருந்தார்கள். ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள்.
எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வார்கள். ஒன்றாகவே வருவார்கள்.
செடிகளில்
பூக்கும் பருவம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. தோட்டத்தில் வழக்கமாக ஒரு
கூடை நிறைய பூக்களைப் பறிக்கும் அம்மா
அரைக்கூடை கூட பூ கிடைக்கவில்லையே என்று நினைத்து வருத்தப்படத் தொடங்கினாள்.
காட்டில் இருக்கும் தோட்டத்திலும் பூக்கள் குறைவாகவே கிடைத்துவந்தன. பூக்கள்
குறைந்ததால் விற்பனை குறைந்தது. விற்பனை குறைந்ததால் வருமானமும் குறைந்தது. அரைவயிறும்
கால்வயிறுமாகச் சாப்பிடவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டது.
ஒருநாள்
நள்ளிரவில் ஏதோ கெட்ட கனவின் விளைவாக புஷ்பாவுக்கு விழிப்பு வந்துவிட்டது. கண்ணைத்
திறந்து பார்த்தாள். எங்கெங்கும் இருளே சூழ்ந்திருந்தது. திறந்திருந்த ஜன்னல்
வழியாக இருண்ட வானமும் மேகங்களைக் கடந்துசெல்லும் அரைநிலாவும் தெரிந்தன.
அப்போதுதான் யாரோ விம்மி விம்மி அழும் சத்தம் கேட்டு படுத்த நிலையிலேயே தலையை
மட்டும் திருப்பிப் பார்த்தாள்.
நடுவீட்டில்
மாடக்குழியில் இருந்த சாமி விளக்கின் முன்னால் உட்கார்ந்திருக்கும் அம்மாவின்
உருவம் தெரிந்தது. யாரோ ஒரு முகம் தெரியாத மனிதரிடம் பேசுவதுபோல அந்த விளக்கிடம்
எதையோ சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தாள் அம்மா. அழுதுகொண்டே அவள்
பேசிக்கொண்டிருந்ததால் அவளுடைய சொற்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
அம்மாவின்
முகத்தில் வழிந்தோடும் கண்ணீரைப் பார்க்கப் பார்க்க புஷ்பாவுக்கு நெஞ்சே
வெடித்துவிடும்போல இருந்தது. உடனடியாக புனிதாவை எழுப்பவேண்டும் என்று அவளுக்குத்
தோன்றியது. ஆயினும் அந்த எண்ணத்தை அப்படியே அடக்கிக்கொண்டு என்னதான் நடக்கிறது
பார்ப்போம் என அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“கடவுளே,
இது உனக்கே அடுக்குமா? பெத்தெடுத்த புள்ளைங்களுக்கு வயிறு நிறைய சோறு போடக்கூட
முடியாத நிலையில என்னை வச்சிருக்கியே, இது நியாயமா? இந்த உலகத்துக்கே
வழிகாட்டறியே, என் ஒருத்திக்கு நீ நல்ல வழி காட்டக்கூடாதா? உனக்கு ஏன் இந்த
ஓரவஞ்சனை?”
அம்மாவின் சொற்களைக்
கேட்கக்கேட்க புஷ்பாவுக்கு நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது. வருமானத்துக்கான
வழி குறைவதை ஒட்டி அம்மாவின் நெஞ்சில் எவ்வளவு பெரிய துக்கம் குடியேறிவிட்டது என
நினைத்து வருந்தினாள். இந்தத் துக்கத்திலிருந்து எப்படியாவது அம்மாவை மீட்கவேண்டும்
என அவள் மனம் திட்டமிட்டது.
நீண்ட
நேர யோசனைக்குப் பிறகு அவள் நெஞ்சில் ஒரு எண்ணம் உருவானது. அக்கணமே அவள் கவலைகள்
எல்லாம் விலகிவிட்டன. குடும்பத்தில்
கவிந்த வறுமைச்சூழலில் இருந்து மீண்டுவிடலாம் என்றும் துக்கத்தில்
மூழ்கியிருக்கும் அம்மாவையும் மீட்டெடுத்துவிடலாம் என்றும் அவள் மனம் நம்பியது.
அம்மாவைப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு, மெதுவாக விழிமூடி உறங்கத்
தொடங்கினாள்.
அடுத்தநாள்
காலையில் எழுந்ததும் குளித்துமுடித்த பிறகு வழக்கம்போல பூப்பறிப்பதற்காக அம்மா
தோட்டத்துக்குச் சென்றுவிட்டாள். புனிதாவும் புஷ்பாவும் கூடையை எடுத்துக்கொண்டு
காட்டின் திசையில் பேசிக்கொண்டே நடக்கத் தொடங்கினார்கள். நடைக்களைப்பு தெரியாமல்
இருப்பதற்காக புனிதா ஒரு காட்டில் சிங்கத்தை ஏமாற்றிய தந்திரக்கார நரியின் கதையைச்
சொல்லிக்கொண்டே வந்தாள். கதை முடிவதற்கும் காட்டை அடைவதற்கும் சரியாக இருந்தது.
தோட்டத்தில்
நிறைய பூச்செடிகள் இருந்தபோதும் பல செடிகளில் பூக்களே இல்லை. ஒருசில செடிகளில்
ஒன்றிரண்டு பூக்கள் மட்டுமே காணப்பட்டன. அதுவரை அவர்களுக்கு அரைக்கூடை நிறையும்
அளவுக்காவது பூக்கள் கிடைத்துவந்தன. அன்று அவர்களுக்கு எண்ணிக்கையில் அடங்கும்
அளவுக்கு மட்டுமே பூக்கள் கிடைத்தன.
“இத
கொண்டுபோய் வித்தா என்னடி கிடைக்கும்? யாராவது ஒரு ஆள் வந்து வாங்கினாலே
முடிஞ்சிபோயிடும். நிச்சயமா நாம எல்லாரும் இன்னைக்கு பட்டினியாதான் இருக்கணும்”
புனிதாவின்
முகம் வாடியது. அவள் பெருமூச்சு விடுவதைப் பார்க்க புஷ்பாவுக்கு வருத்தமாக
இருந்தது. நேற்று இரவு அம்மா கண்ணீர் விட்டு அழுத காட்சியும் அப்போது நினைவுக்கு
வந்தது.
“அக்கா,
நான் ஒரு முக்கியமான செய்தி சொல்றேன். அதை நீ யாருகிட்டயும் சொல்லக்கூடாது.
சரியா?” என்று புனிதாவிடம் சொன்னாள்.
”அப்படி
என்னடி முக்கியமான செய்தி? அதை ஏன் யாருகிட்டயும் சொல்லக்கூடாது?” என்று
புஷ்பாவைக் குழப்பத்தோடு பார்த்தாள் புனிதா.
“அது
அப்படித்தான். முதல்ல நீ யார்கிட்டயும் சொல்லமாட்டேன்னு சொல்லு. அதுக்கப்புறம் என்ன
செய்திங்கறத நான் சொல்றேன்.”
புஷ்பாவை
ஒருகணம் விசித்திரமாகப் பார்த்தாள் புனிதா. பிறகு “சரிடி அம்மா. நான்
யார்கிட்டயும் சொல்லமாட்டேன். அது என்ன செய்தியோ, அதைச் சொல்லு” என்றாள்.
”சத்தியமா”
“ஏன்
சத்தியம் செய்தாதான் சொல்வியா?”
“ஆமாம்”
”சரி,
சத்தியமா, சத்தியமா, சத்தியமா. போதுமா?”
“பூ
கிடைக்கலைங்கறதுதான இப்ப நம்ம குறை? கூடை நிறைய பூ கிடைக்கறதுக்கு என்கிட்ட ஒரு
வழி இருக்குது. அதும்படி நாம செஞ்சா, தினந்தினமும் கூடை நிறைய பூ கிடைக்கும்.
நமக்கும் நிறைய பணமும் கிடைக்கும்”
கண்கள்
மின்ன விவரித்துக்கொண்டே போகும் புஷ்பாவை ஒருமுறை தலையிலிருந்து கால்வரைக்கும்
மெளனமாகப் பார்த்தாள் புனிதா.
“என்னடி உன் வழி? ஏதேதோ
உளறாம, புரியறமாதிரி அதை முதல்ல சொல்லுடி”
“நல்லா
கேட்டுக்கோ. நான் நினைச்சா, என்னால பூ பூக்கிற மரமா மாறமுடியும். அந்த சக்தி
என்கிட்ட இருக்குது.”
“ஏன்டி
இப்படி திடீர்னு உளற ஆரம்பிச்சிட்ட?”
“உளறலை.
உண்மையைத்தான் சொல்றேன். பொறுமையா கேளு. நான் மரமா நிக்கிற சமயத்துல நீ இந்தக்
கூடை நிறைய பூக்களை பறிச்சிக்கோ. அந்த அளவுக்கு அதிகமா ஒரு பூவைக்கூட
பறிக்கக்கூடாது. பூவைக் கிள்ளி எடுக்கும்போது அளவா கிள்ளி எடுக்கணும். எந்தக்
கிளையையும் உலுக்கக்கூடாது. ஒவ்வொரு பூவா தொட்டுத் தொட்டுத்தான் எடுக்கணும். தேவை
இல்லாம கிளைகளை வளைக்கிறதோ, இலைகளைக் கிள்ளறதோ கூடாது. புரியுதா?”
புஷ்பா
சொல்லச்சொல்ல நம்பமுடியாதவள் போல உறைந்து நின்றாள் புனிதா. புஷ்பா அவளைத் தொட்டு
அசைத்தாள். “என்ன அக்கா, நான் சொல்றது புரியுதா?” என்று கேட்டாள்.
“புரியுது.
ஆனா, இது எவ்வளவு தூரத்துக்கு சாத்தியமாவும்னுதான் தெரியலை. அதான் யோசிக்கிறேன்”
என்று நம்பிக்கையற்றவளைப்போல பதில் சொன்னாள் புனிதா.
“இங்க
பாருக்கா. முதல்ல நம்பக் கத்துக்கோ.
நம்பிக்கைதான் வாழ்க்கை.
புரியுதா?”
“சரி,
முதல்ல நீ பூ பூக்கிற மரமா மாறு. பார்க்கலாம்”
“அதுக்கு
முன்னால நீ ஒரு முக்கியமான வேலை செய்யணும்”
“அது
என்ன வேலை?”
“அதோ
அங்க ரெண்டு குடம் இருக்குது பாரு. அதை அந்தக் குளத்தங்கரைக்கு எடுத்தும் போயி
சுத்தமா கழுவு. ரெண்டு குடம் நிறைய தண்ணியை நிரப்பி எடுத்து வா. குடத்துக்குள்ள
தண்ணிய நிரப்பிய பிறகு உன் விரல் நகம் கூட அந்த தண்ணியில படக்கூடாது. தீட்டு
பட்டுடும். கவனமா சிந்தாம சிதறாம எடுத்துட்டு வரணும்”
“அப்புறம்?”
“நான்
இங்கயே உக்காந்துட்டிருப்பேன். ஒரு குடம் தண்ணியை எடுத்து குளிக்கவைக்க தலையில
ஊத்தறமாதிரி என் தலையில ஊத்து. உடனே நான் மரமா மாறிடுவேன். ஒவ்வொரு கிளையிலும்
ஏராளமான பூ பூத்திருக்கும். கூடை நிறைய தேவைப்படற அளவுக்கு நீ பூக்களை
பறிச்சிக்கலாம். எல்லா வேலையையும் முடிச்சிட்ட பிறகு தண்ணி வச்சிருக்கிற இன்னொரு குடத்த எடுத்து மரத்தை
சுத்தி ஊத்தணும். உடனே நான் மறுபடியும் பொண்ணா மாறிடுவேன்”
புஷ்பாவின்
சொற்களில் புனிதாவுக்கு அப்போதும் நம்பிக்கை பிறக்கவில்லை. “நீ சொல்றதெல்லாம்
உண்மையா நடக்குமாடி?” என்று சந்தேகத்தோடு கேட்டாள்.
“முதல்ல
உன் அவநம்பிக்கையை நிறுத்துக்கா. நடக்கும்னு நம்பிக்கையோடு நினைச்சிக்கோ அக்கா.
எல்லாம் நல்லபடியாவே நடக்கும்”
“சரி” என்றபடி
அரைமனத்தோடு அங்கே ஒரு மரத்தடியில் காணப்பட்ட இரண்டு குடங்களை எடுத்துக்கொண்டு
குளத்துக்குச் சென்றாள். திரும்பித்திரும்பி புஷ்பாவைப் பார்த்தபடியே
நடந்துபோனாள். புஷ்பா சொன்னபடி இரு குடங்களையும் முதலில் நன்றாகக் கழுவி
தூய்மைப்படுத்தினாள். பிறகு தண்ணீரை நிரப்பிக்கொண்டாள். அந்தத் தண்ணீரில் விரல்
படாமல் லாவகமாக எடுத்துக்கொண்டு திரும்பினாள்.
புஷ்பா ஏற்கனவே
நின்றிருந்த இடத்திலேயே நின்றிருந்தாள். புனிதா குடங்களுடன் திரும்பி வருவதைப்
பார்த்ததும் அதே இடத்தில் கால்களை மடக்கி தரையில் உட்கார்ந்தாள்.
ஒரு
குடத்தை அருகிலிருந்த மரத்தடியில் வைத்துவிட்டு இன்னொரு குடத்தோடு புஷ்பாவின்
அருகில் வந்து நின்றாள் புனிதா. புஷ்பா அவளைப் பார்த்து தண்ணீரை தன் தலைமீது ஊற்றுமாறு
கண்ணாலேயே சைகை செய்தாள். அவள் உதடுகள் எதையோ முணுமுணுத்தபடி இருந்தன. குடத்தை
உயரே தூக்கி தன் கைவிரல் பட்டுவிடாதபடி
மெதுவாக குடத்தைச் சாய்த்து கொஞ்சம் கொஞ்சமாக புஷ்பாவின் தலையில் தண்ணீரை
ஊற்றினாள் புனிதா.
பானையிலிருந்த
கடைசிச்சொட்டு தண்ணீர் புஷ்பாவின் மீது விழும்வரை, அங்கு ஒரு மாற்றமும்
நிகழவில்லை. ஆனால் மறுகணமே புஷ்பா மாயமாக மறைந்துபோனாள். அந்த இடத்தில் உண்மையாகவே
பூக்கள் நிறைந்த ஒரு மரம் நின்றது.
ஒவ்வொரு கிளையிலும் கொத்துக்கொத்தாக பூக்கள் தொங்கின. புனிதா ஒரு கிளையை
நெருங்கிச் சென்று ஒரு பூவைத் தொட்டுப் பார்த்தாள். உண்மையான பூ. கமகமவென அதன்
நறுமணம் வீசியது.
புஷ்பா
சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவளுக்கு அப்போது நினைவுக்கு வந்தது. வேகவேகமாக தம்
பூக்கூடையை எடுத்துவந்து ஒவ்வொரு பூவாக எச்சரிக்கையோடு பறித்து கூடைக்குள்
போட்டாள். வெகுவிரைவில் அந்தக் கூடை நிறைந்துவிட்டது.
இன்னும்
பத்து கூடைகளை நிரப்பலாம் என்கிற அளவுக்கு கிளைகளில் பூக்கள் நிறைந்திருந்தன.
அவற்றை என்ன செய்வது என வாய்பிளந்து பார்த்தாள் புனிதா. அப்போது ஏற்கனவே புஷ்பா எச்சரிக்கையாகச்
சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன. உடனே மனநிறைவோடு கூடையை எடுத்துவந்து வேறொரு
மரத்தடியில் வைத்துவிட்டு, அங்கிருந்த இரண்டாவது தண்ணீர்க்குடத்தை எடுத்துச்
சென்று பூமரத்தின் வேரில் ஊற்றினாள். கடைசிச்சொட்டு தண்ணீர் தரையில் விழுந்த
கணத்தில் மரம் மறைந்துவிட, அந்த இடத்தில் புஷ்பா அமர்ந்திருந்தாள். அந்த இடத்தில்
ஒரு மரம் இருந்ததற்காக எவ்விதமான அடையாளமும் தெரியவில்லை.
புன்னகைத்தபடியே
எழுந்து நின்று புனிதாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள் புஷ்பா. தன் சகோதரியின்
சாமர்த்தியத்தையும் தியாகத்தையும் நினைத்து பெருமையோடு அவளைத் தழுவிக்கொண்டாள்
புனிதா.
“அக்கா,
நாம கெளம்பலாம். இப்ப புறப்பட்டாதான் சந்தைக்கு நேரத்தோடு போய் சேரமுடியும்.”
“ஆமாமாம்
கெளம்பு”
புனிதா
கூடையைச் சுமந்துகொள்ள இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.
“மரமா
மாறக்கூடிய சக்தி உனக்கு எப்ப வந்தது? எப்படி வந்தது?” என்று ஆர்வத்தோடு கேட்டாள்
புனிதா.
“சின்ன
வயசுல இங்கதான அடிக்கடி வந்து விளையாடிட்டிருப்பேன். அப்ப ஒருநாள் ஒரு சாமியாரு
இந்த வழியா நடந்து போனாரு. அவருக்கு ஒரு
கால் இல்ல. குச்சி வச்சிட்டு ஒத்தக் காலால நடந்து போனாரு. பார்க்கறதுக்கே பரிதாபமா
இருந்தது. அவருக்கு ரொம்ப தண்ணி தாகம்போல. அந்த வழியா போன என்னைப் பார்த்து இங்க
குடிக்கறதுக்கு தண்ணி எங்க கிடைக்கும்னு கேட்டாரு. நான் தண்ணி இருக்கற இடத்தை
சொல்லி, அவரு அந்த இடத்துக்கு நொண்டி நொண்டி போய் சேர்றதுக்குள்ள பொழுதே
போயிடும்னு நினைச்சி, இங்கயே இரு தாத்தா, நான் போய் எடுத்துட்டு வரேன்னு
சொல்லிட்டு ஓட்டமா ஓடி ஒரு தேக்கு இலையை பொட்டலம்மாதிரி மடிச்சி, அதுக்குள்ள
தண்ணியை நிரப்பி எடுத்துட்டு வந்து கொடுத்தேன்.”
“சரி”
“அதை
குடிச்ச பிறகுதான் அவருக்குத் தெம்பு வந்தது. அதுக்கப்புறம்தான் அவரு என்னைப்
பத்தி விசாரிச்சாரு. நான் சொன்னதையெல்லாம் கேட்டுட்டு சிரிச்சிகிட்டே என்னை
ஆசீர்வாதம் செஞ்சாரு. அதுக்கப்புறம்தான் மரமா மாறக்கூடிய ஒரு மந்திரத்தைச் சொல்லி
செய்முறையையும் கத்துக் குடுத்தாரு. இதெல்லாம் எதுக்குங்க தாத்தான்னு அவர்கிட்ட
கேட்டேன். என்னைக்காவது உனக்கு உதவியா இருக்கும்மான்னு சிரிச்சிகிட்டே சொல்லிட்டு
போயிட்டாரு. அப்பவே நான் அதை மறந்துட்டேன். நேத்து ராத்திரி நடுராத்திரியில
எழுந்து உக்காந்துகினு சாமியப் பார்த்து அம்மா அழுது புலம்பனதைப் பார்த்தேன். பூ
கிடைக்கலைங்கறதுக்காக மனக்கஷ்டத்தோடு அம்மா பேசிட்டிருந்தாங்க. அப்பதான் நம்மால முடிஞ்ச
அளவுக்கு அம்மாவுக்கு ஏதாவது செய்யணும்ங்கற எண்ணம் உண்டாச்சி. பூ இருந்தா
பொழைச்சிக்கலாம்ங்கற எண்ணம் வந்ததுமே சின்ன வயசுல சாமியார் சொல்லிக்கொடுத்த
மந்திரமும் ஞாபகம் வந்திட்டுது. அதான் சங்கதி”
“தினமும்
இப்படி கிடைக்குமா?”
“அதுதான்
நம்ம திட்டம். ஒவ்வொரு நாளும் இதேபோல நாம காட்டுக்கு வருவோம். நான் மரமா மாறி
நின்னதும் கூடை நிறைய பூவை எடுத்துக்கோ. அதுக்கப்புறம் மறுபடியும் நீ என்னை பொண்ணா
மாத்திடு. அது போதும்”
“எப்படியோ
நம்ம சாப்பாட்டுக்கவலை தீர்ந்தது. அம்மா நிம்மதியா இருப்பாங்க. எதையும் நினைச்சி
அழமாட்டாங்க. அது போதும்.”
இருவரும்
வீட்டை நோக்கி உற்சாகத்தோடு நடந்தார்கள். அம்மா பாதி அளவே நிரப்பிவைத்த பூக்கூடை
வாசலிலேயே இருந்தது. அதையும் எடுத்துக்கொண்டு இருவரும் சந்தைக்குச் சென்றார்கள்.
காட்டிலிருந்து
எடுத்துவந்த பூக்களின் நிறமும் மணமும் சந்தைக்கு வந்த அனைவரையும் ஈர்த்தன.
தெருவில் நடப்பவர்கள் ஒவ்வொருவரும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே
நடந்துபோனார்கள். சிலர் கையில் இருந்த பணத்தைக் கொடுத்துவிட்டு பூக்களை
பொட்டலமாகக் கட்டி வாங்கிக்கொண்டு சென்றார்கள். அவர்கள் நினைத்ததைவிட வேகமாக
எல்லாப் பூக்களும் விற்றுத் தீர்ந்தன. உடனே இருவரும் கடைக்குச் சென்று அன்றைய
சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்கள்.
சீக்கிரமாக
திரும்பிவிட்ட மகள்களைப் பார்த்ததும் அம்மாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.
“எங்கடி பூ? ஏன் சீக்கிரமா வந்துட்டீங்க?” என்று தயக்கத்தோடு கேட்டாள். “எல்லாப்
பூவும் இன்னைக்கு சீக்கிரமா வித்து தீர்ந்துடிச்சிம்மா” என்று சொல்லிக்கொண்டே
வெற்றுக்கூடைகளை திண்ணையில் வைத்தாள் புஷ்பா. சமையல் சாமான்கள் நிறைந்த கைப்பையை
அம்மாவிடம் கொடுத்தாள் புனிதா.
“என்னமோ
கடவுள் கண்ணத் தெறந்துட்டான்” என்று மனத்துக்குள் முணுமுணுத்தபடி சமையல் பொருட்கள்
அடங்கிய பையை வாங்கிக்கொண்டு சமையலறைக்குள் சென்றாள் அம்மா.
இப்படியே
ஒவ்வொரு நாளும் நடந்தது. ஒரு கட்டத்தில் வீட்டுத் தோட்டத்தில் பூக்கள் பூக்கும்
அளவு குறைந்துகொண்டே வந்து நின்று போனது. அப்போது அந்தக் கூடையையும் காட்டுக்கு
எடுத்துச் சென்று இரு கூடைப்பூக்களோடு திரும்பி வந்தனர். வயிற்றுப்பாட்டுக்காக
எங்கோ எப்படியோ அலைந்து திரிந்து பூக்களைச் சேகரித்துக்கொண்டு திரும்புகிறார்கள் என
தன் பிள்ளைகளை நினைத்து பெருமைப்பட்டாள் அம்மா. ஆண் பிள்ளைகள் கூட செய்யமுடியாத செயலை
தனக்குப் பிறந்த பெண் பிள்ளைகள் செய்கிறார்கள் என்று அடிக்கடி நினைத்துக்கொண்டாள்.
ஒருநாள்
சந்தையில் அவர்கள் பூக்கூடையோடு உட்கார்ந்திருந்தபோது ஒரு இளைஞன் அவர்களுக்கு
அருகில் வந்து கூடையில் இருந்த பூக்களைத் தொட்டுப் பார்த்தான். அவன் பெயர் சிக்கண்ணா.
அதன் மணத்தையும் நுகர்ந்து பார்த்தான்.
“இந்தப்
பூவுடைய பெயர் என்ன?” என்று புஷ்பாவிடம் கேட்டான்.
இதுவரை
ஒருவரும் அவளிடம் அப்படி ஒரு கேள்வி கேட்காததால் அவளுக்கு என்ன பதில் சொல்வது
என்று ஒருகணம் புரியவில்லை. ஆனாலும் தைரியமாக “காட்டுப்பூ” என்றாள்.
“அது
தெரியுது. பூவுக்குன்னு தனியா பேரு எதுவும் கிடையாதா?”
“அதெல்லாம்
எனக்குத் தெரியாது. நாங்க காட்டுப்பூன்னு சொல்வோம். அதுதான் பழக்கம்.”
”அது
சரி, நல்ல மணமாத்தான் இருக்குது. என்ன விலை?”
“உங்களுக்கு
எவ்வளவு வேணும், அதைச் சொல்லுங்க?”
“இந்தக்
கூடையில இருக்கற எல்லாப் பூவையையும் நான் எடுத்துக்கறேன். என்ன விலைன்னு
சொல்லுங்க”
சிக்கண்ணாவின்
கண்களில் ஆர்வம் மட்டுமே தெரிந்தது. கிண்டலோ கேலியோ எதுவும் தெரியவில்லை. புஷ்பா
ஒருகணம் கழித்து ஒரு விலையைச் சொன்னாள். அவன் மறுபேச்சின்றி அவள் சொன்ன விலையைக்
கொடுத்துவிட்டு பூக்களை மூட்டையாகக் கட்டித் தரச்சொல்லி வாங்கிக்கொண்டு சென்றான்.
அதற்குப்
பிறகு சிக்கண்ணா ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் அந்த இடத்துக்கு வரத்
தொடங்கினான். புஷ்பாவிடம் பேச்சு கொடுத்து அவளை எப்படியாவது உரையாடலுக்குள்
இழுத்தான். அவள் அவனை எப்படியாவது வெட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு
வெடுக்வெடுக்கென்று பேசினாலும் அவன் மிகவும் அன்பார்ந்த குரலிலேயே பேசினான்.
“ஒவ்வொரு
நாளும் இருக்கற பூ எல்லாத்தையும் நீங்களே வாங்கிட்டு போறீங்களே? வீட்டுக்கு
எடுத்தும் போயி என்ன செய்வீங்க?” என்று கேட்டாள் புஷ்பா.
“நான்
வீட்டுக்கு எடுத்துட்டு போறேன்னு யாரு சொன்னா?”
“பின்ன?”
“வீட்டுக்குப்
போற வழியில ஒரு கோயில் இருக்குது. அந்தக் கோயிலுக்குப் போய் சாமிகிட்ட வைக்கச்
சொல்லிட்டு போயிடுவேன்”
“ஏன்?
வீட்டுக்கு எடுத்தும் போவமாட்டீங்களா?”
“எடுத்துட்டு
போகலாம். ஆனா வீட்டுல யாருகிட்ட கொடுக்கறது?”
“ஏன்,
உங்க மனைவிகிட்ட கொடுத்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க இல்லையா?”
“மனைவியா?”
என்று சொல்லிவிட்டு விழுந்துவிழுந்து சிரித்தான் சிக்கண்ணா. சிரித்துச்சிரித்து
அவனுக்கு புரையேறிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக செருமி தன்னைச் சரிப்படுத்திக்கொண்டான்.
பிறகு “எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்க” என்று வெட்கத்தோடு சொன்னான். அதற்குப்
பிறகு புஷ்பா எதுவும் பேசவில்லை. அமைதியாக வேறெங்கோ பார்ப்பதுபோல முகத்தைத்
திருப்பிக்கொண்டாள்.
ஒவ்வொரு
நாளும் அவர்கள் பூக்கூடைகளோடு சந்தைக்கு வருகிற சமயத்தில் அவனும் வரத்
தொடங்கினான். ஏதாவது ஒரு விஷயத்தைத் தொட்டு அவர்களோடு உரையாடலை வளர்ப்பதில் அவன்
மிகுந்த ஆர்வம் காட்டினான். ஒருநாள் பூவிலிருந்து எழும் மணத்தை இழுத்து
நுகர்ந்துவிட்டு “சந்தனம் மாதிரி மணக்குது” என்றான் இன்னொருநாள் “நெய்மாதிரி
மணக்குது” என்றான். மற்றொரு நாள் “வெல்லப்பாகு மாதிரி மணக்குது” என்றான். அவன்
வரும் சமயத்தில் கூடையில் எவ்வளவு பூ இருக்கிறதோ, அவ்வளவையும் அவனே மொத்தமாக
வாங்கிக்கொண்டு சென்றான்.
ஒருநாள்
புஷ்பாவிடமிருந்து பூக்களை வாங்கிக்கொண்டு திரும்பிய சிக்கண்ணா தனக்கு
ஏற்பட்டிருக்கும் மயக்கம் பூவை மட்டும் சார்ந்த மயக்கமா, அந்தப் பெண்மீது
ஏற்பட்டிருக்கும் மயக்கமா என பிரித்தறியமுடியாமல் குழம்பினான். கடைசியில் இரண்டும்
சேர்ந்த மயக்கம் என தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
அவர்கள்
யார், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எங்கிருந்து மணம் நிறைந்த அப்பூக்களைக்
கொண்டுவருகிறார்கள் என்பதை அவர்கள் அறியாமல் கண்டுபிடிக்கவேண்டும் என்று
திட்டமிட்டான். அவனுடைய திட்டத்தைப்பற்றி எதுவும் தெரியாமல் சகோதரிகள் இருவரும்
வழக்கம்போல ஊரில் நடமாடிக்கொண்டிருந்தார்கள்.
ஒருநாள்
சந்தையிலிருந்து அவர்கள் தம் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது அவர்களுக்குத்
தெரியாமல் சிறிது தூர இடைவெளியில் அவர்களைப் பின்தொடர்ந்து நடந்து சென்றான்.
சுவாரசியமாக கதை பேசிக்கொண்டு சென்ற சகோதரிகள் இருவரும் அவன் தமக்குப் பின்னால்
வருவதை உணரவே இல்லை.
ஊருக்கு
வெளியே தன்னந்தனியாக இருக்கிற ஒரு குடிசைக்குள் சகோதரிகள் இருவரும் சென்று மறைவதை
அவன் கண்டுபிடித்தான். அங்கேயே வெகுநேரம் ஒதுங்கி நின்று அந்த வீட்டில் அவர்களைத்
தவிர அவர்களுடைய அம்மாவும் இருப்பதைப் புரிந்துகொண்டான். அந்தக் குடிசையின் மீது கண்வைத்தபடி சுற்றிவரும்போது, குடிசைக்குப்
பின்னால் இருக்கிற பெரிய பூந்தோட்டத்தையும் பார்த்தான் சிக்கண்ணா. ஒன்றிரண்டு
செடிகளில் மட்டும் பூக்கள் பூத்திருக்க, பிற செடிகள் செடிகளாக மட்டுமே
நின்றிருப்பதைப் பார்த்தான். பூக்களே இல்லாத இந்தத் தோட்டத்திலிருந்து இப்பெண்கள்
பூக்களை எப்படி எடுத்துக்கொண்டு வருகிறார்கள் என்று நினைத்துக் குழம்பினான். சந்தையில்
அவர்கள் விற்கும் பூக்களுக்கும் அந்தத் தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களுக்கும்
இடையிலான வேறுபாடு அவனை மேன்மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது. இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என அவனாகவே
எதைஎதையோ நினைத்துக்கொண்டான். இறுதியில் குழப்பம்தான் எஞ்சியதே தவிர, அவனால் உறுதியாக ஒரு முடிவுக்கும்
வரமுடியவில்லை.
அடுத்தநாள்
சந்தையில் அந்தப் பெண்களின் வரவுக்காக அவன் காத்திருந்தான். அவர்கள் கூடைகளோடு
வந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்து வியாபாரத்தைத் தொடங்கியதும் அவன் வழக்கம்போல பூ
வாங்குபவன் போல அவர்கள் முன்னால் சென்று நின்றான்.
“என்ன
இது? இன்னைக்கு பூவிலிருந்து கரும்புச்சாறு மணம் வருது” என்று சொன்னபடி குனிந்து
கூடையிலிருந்து ஒரு பூவை எடுத்து திருப்பிப் பார்த்தான்.
“கரும்புச்சாறை
நினைச்சிகிட்டே பூவைப் பார்க்கிறவங்களுக்கு கரும்புச்சாறு மணம் வரும்.
கஞ்சித்தண்ணியை நினைச்சிகிட்டே பார்க்கிறவங்களுக்கு கஞ்சித்தண்ணி மணம் வரும்”
“நான்
விளையாட்டுக்குச் சொல்லலைங்க. உண்மையாவே இந்தப் பூவிலேர்ந்து கரும்புச்சாறு மணம்
வருது”
அந்த
இளைஞனோடு பேசுவதற்கு புஷ்பாவுக்கு ஆசையாக இருந்தாலும் பக்கத்தில் அக்காவை
வைத்துக்கொண்டு பேச அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அதனால் அவன் பேச்சைத் தடுக்கும்
விதமாக, “பூவிலேர்ந்து எந்த மணமாவது வந்துட்டுப் போகட்டும். இப்ப உங்களுக்கு என்ன
வேணும், சொல்லுங்க” என்று கேட்டாள்.
“எனக்கு
பூதான் வேணும்” என்று கூடையை நெருங்கினான்.
“ஐயையோ,
ஒவ்வொரு நாளும் நீங்களே எல்லாப் பூவையும் மொத்தமா எடுத்துட்டு போயிட்டா, வழக்கமா
எங்ககிட்ட வாங்கற வாடிக்கைக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றது? மொத்தமா தரமுடியாது.
உங்களுக்கு எவ்வளவு வேணுமோ, அந்த அளவுக்கு மட்டும் வாங்கிட்டுப் போங்க”
புஷ்பா
பேசப்பேச, அந்தப் பேச்சில் மயங்கியவன் போல கேட்டுக்கொண்டிருந்தான் சிக்கண்ணா.
பிறகு ”சரி, நீங்க சொல்றதையே கேக்கறேன். எத்தனை பேரு வந்து வாங்கிட்டு போறாங்களோ
வாங்கட்டும். நான் யாரையும் தடுக்கலை. எல்லாரும் வாங்கினதுபோக கடைசியில என்ன
மிஞ்சுதோ அதை நான் வாங்கிக்கறேன். சரிதானே?” என்று கேட்டான்.
அந்த
அளவுக்கு அவன் சட்டென்று இறங்கிவந்து பேசுவான் என புஷ்பா எதிர்பார்க்கவில்லை.
அதனால் அவனை வெளியேற்றும் விதமாக அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. “சரி சரி”
என்று மட்டும் பதில் சொல்லிவிட்டு வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினாள்.
பல
பெண்கள் வந்து புஷ்பாவிடம் பூக்களை வாங்கிச் சென்றார்கள். கூடையில் பூ வேகவேகமாக
குறைந்துகொண்டே வந்தது.
“அது
சரி, இதுக்கு முன்னால இந்த மாதிரி வண்ணவண்ணப் பூக்களை நான் இந்தப் பக்கம்
பார்த்ததே இல்லை. எல்லாம் புதுசா இருக்குது. எங்கேர்ந்து வாங்கிட்டு வரீங்க?”
என்று கேட்டான் சிக்கண்ணா.
(தொடரும்.....)