திருவிளையாடல்
ஓர் ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருந்தனர். வாழ்நாள் முழுதும் வசதியாக வாழ்வதற்குத் தேவையான அளவுக்கு அவர்களிடம் செல்வம் இருந்தது. அரண்மனையில் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்து அவர்களுக்குச் சேவை செய்ய ஏராளமான சேவகர்கள் காத்திருந்தனர். அவர்களுடைய அரண்மனைக்குப் பின்னால் மாபெரும் தோட்டமொன்று இருந்தது. அங்கு ஏராளமான மரம் செடி கொடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. அவற்றுக்கு நடுவில் காகம், குருவி, கொக்கு, குயில் என ஏராளமான பறவைகள் பறந்து விளையாடின. தாமரைப்பூக்கள் பூத்திருக்கும் பெரிய குளமொன்றும் இருந்தது. எல்லாம் இருந்தும் அவர்களுக்கு ஒரே ஒரு குறை இருந்தது. பேர் சொல்லி அழைக்கவும் ஓடி விளையாடவும் ஒரு பிள்ளை இல்லை என்பதுதான் அந்தக் குறை.
அரண்மனைக்கு வந்துபோகும்
துறவிகளும் குருசாமிகளும் சொன்ன ஆலோசனைகளுக்கு ஏற்ப ஏராளமான விரதங்களையும் அவர்கள்
செய்து பார்த்துவிட்டார்கள். தான தருமங்களும் செய்து பார்த்தார்கள். எந்தப் பயனும்
இல்லை.
திருமணமாகி பன்னிரண்டு
ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அதற்குப் பிறகும் அவர்களுக்குப் பிள்ளைப்பேறு
உண்டாகவில்லை.
பிள்ளை இல்லை என்னும் கவலை ராணியை
வாட்டியெடுத்தது. நாள் முழுதும் ராணி கவலையில் மூழ்கியிருப்பதைக் கண்டு ராஜாவும் வருத்தத்தில் ஆழ்ந்தார். எங்கு
சென்றாலும் அந்தக் கவலையிலிருந்து அவரால் தப்பிக்க இயலவில்லை. ஒருநாள் அதே கவலையுடன் அரண்மனைக்குளத்தில்
இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் இறைவனிடம் தன் கோரிக்கையை
முன்வைத்து கடுமையான வகையில் தவமியற்ற வேண்டும் என முடிவெடுத்தார்.
அக்கணமே குளத்தங்கரை ஓரமாக
இருந்த ஒரு வட்டப்பாறையை எடுத்து தன் தலைமீது சுமந்தபடி இன்னொரு வட்டப்பாறை மீது
ஏறி கைலாசம் இருக்கக்கூடிய வடக்குத்திசையைப் பார்த்து நின்றார். ஒவ்வொரு நாளும்
தான் பக்தியுடன் வணங்கும் சிவபெருமான் எதிரில் தோன்றி தனக்கு பிள்ளைவரம் அளிக்கும்
வரையில் அந்த இடத்தைவிட்டு நகரப்போவதில்லை என்றும் தலைமீது வைத்த சுமையை
இறக்கப்போவதில்லை என்றும் மனத்தில் முடிவெடுத்துக்கொண்டார்.
ராஜாவின் செயலைப் பார்த்த
வேலையாட்கள் அந்த முயற்சியைக் கைவிடும்படி பயபக்தியுடன் கேட்டுக்கொண்டனர்.
இறைவனின் வரம் கிட்டும்வரை தன் தவத்திலிருந்து பின்வாங்கமுடியாது என ராஜா அவர்களிடம்
திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். உடனே வேலைக்காரர்கள் ஓடோடிச் சென்று ராணியிடம்
அந்தத் தகவலைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்டு திகைத்த ராணி குளத்தங்கரைக்கு ஓடோடி
வந்தாள். தலைமீது வட்டப்பாறையைச் சுமந்தபடி நின்றிருக்கும் ராஜாவின் கோலத்தைப்
பார்த்து அச்சம் கொண்டாள்.
ராஜாவின் முன்னால் நின்று
கைகுவித்து அவர் மேற்கொண்டிருக்கும் தவமுயற்சியைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டாள்
ராணி. பிள்ளைவரம் வேண்டி சிவபெருமானை
நினைத்து தவம் மேற்கொண்டிருப்பதாகவும் தான் விரும்பும் வரம் கிட்டும்வரை தன்
தவத்திலிருந்து பின்வாங்கமுடியாது என ராணியிடமும் ராஜா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ராணியைத் தொடர்ந்து மூத்த
அமைச்சரும் அரண்மனை குருவும் அடுத்தடுத்து வந்து அதே கோரிக்கையை ராஜாவின் முன்
வைத்தார்கள். சிவபெருமான் நேரில் காட்சியளிக்கும் வரை தன் தவத்திலிருந்து
பின்வாங்கமுடியாது என அவர்களிடமும் உறுதியாகத் தெரிவித்தார் ராஜா.
வேறு வழியில்லாமல் அனைவரும்
ராஜாவை குளத்தங்கரையில் தனியாக விட்டுவிட்டு தத்தம் வேலைக்குத் திரும்பினர்.
ஒவ்வொரு கணமும் சிவபெருமானை மனமுருகும் வகையில் தன் கோரிக்கையை முன்வைத்து
பிரார்த்தனையில் மூழ்கியிருந்தார் ராஜா. அவர் தலை மீதிருந்த பாறை பெருஞ்சுமையாக அவரை
அழுத்தியது. பிள்ளை இல்லை என்னும் மனக்குறை அதைவிட பெருஞ்சுமையாக அவரை அழுத்தியது.
கைலாசத்தில் பார்வதிதேவியோடு
அமர்ந்திருந்த சிவபெருமான் தன் ஞானக்கண் வழியாக வட்டப்பாறையைத் தலையில் சுமந்தபடி
தவத்தில் மூழ்கியிருக்கும் ராஜாவின் கோலத்தைப் பார்த்தார். அதைப் பார்க்கப்பார்க்க
அவருக்கும் மனச்சுமை பெருகியது. ஆனாலும் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு வேறு
வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்.
பார்வதி தேவியால் அப்படி
இருக்கமுடியவில்லை. அடிக்கடி
சிவபெருமானுக்கு அந்த ராஜாவைப்பற்றி நினைவூட்டிக்கொண்டே இருந்தாள். அந்த
ராஜாவுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தூண்டிக்கொண்டே இருந்தாள். சிவபெருமானுக்கு
அவன் வேண்டிய வரத்தைக் கொடுக்கலாமா, வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. அவரால்
ஒரு தீர்மானமான முடிவுக்கு வரமுடியவில்லை. அதனால் “இது எல்லாமே ஆரம்ப வேகம்தான்.
கொஞ்சநாள் இப்படி இருந்து பார்த்துட்டு அப்புறம் தானாவே விட்டுடுவான்” என்று பார்வதிதேவியிடம் சொல்லிவிட்டு அமைதி கொண்டார்.
ஆனால் சிவபெருமான் நினைத்ததுபோல
ராஜா பின்வாங்கிச் செல்பவராகத் தெரியவில்லை. அவர் எதிர்பார்த்ததைவிட அதிக மன உறுதி
கொண்டவனாக இருந்தார். ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டு காலம் அவர் தீராத மனச்சுமையோடும்
தலைச்சுமையோடும் நின்றிருப்பதைப் பார்த்ததும்
ஒருநாள் சிவபெருமானின் மனத்தில் கருணை பிறந்தது. உடனே தன்
இருக்கையிலிருந்து எழுந்து பூமிக்குச் செல்வதற்காக புறப்பட்டார்.
அவருடைய திடீர் பயணத்தைப்
பார்த்த பார்வதிதேவி “இவ்வளவு அவசரமா எங்க கிளம்பிட்டீங்க?” என்று கேட்டாள்.
அதற்கு சிவபெருமான் “அந்த ராஜாவுடைய பக்தி என்
தலைமேல ஒரு பெரிய பாரமாக உட்கார்ந்துட்டிருக்குது. பன்னிரண்டு ஆண்டு கால பக்தியின்
எடையை என்னால தாங்கமுடியலை. பாவம், அவன் ஒரு சாதாரண மனிதன். அந்தப் பாறையுடைய எடையை
அவன் எப்படித்தான் தாங்கிட்டிருக்கானோ தெரியலை. முதல் வேலையா, அவனுக்கு அவன் கேக்கற
வரத்தைக் கொடுத்துட்டு வரேன். அதுக்கப்புறம்தான் நானும் நிம்மதியா இருக்கமுடியும்”
என்று சொன்னார். ”போய் வாங்க. போய் வாங்க. நல்ல முடிவைத்தான் எடுத்திருக்கீங்க” என்று
சொல்லி சிவபெருமானை வாழ்த்தி கைலாசத்திலிருந்து வழியனுப்பி வைத்தாள் பார்வதிதேவி.
கைலாசத்திலிருந்து நேராக அரண்மனைக்
குளத்தங்கரைக்கு வந்து ராஜாவின் முன் காட்சியளித்தார் சிவபெருமான்.
ஒளிவேறுபாட்டின் காரணமாக சிவபெருமானின் இருப்பை உணர்ந்துகொண்ட ராஜா தன் கண்களைத்
திறந்து சிவபெருமானைப் பார்த்தார். அவர் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது.
“முதல்ல பாறையிலிருந்து நீ இறங்கி
வா. தலைமேல வச்சிட்டிருக்கிற சுமையை கீழ எறக்கு”
என்று சொன்னார் சிவபெருமான்.
ராஜா தன் கோரிக்கையில்
உறுதியாக இருந்தார். “ஐயா சிவபெருமானே, முதல்ல எனக்கு வரம் கொடுங்க. அதுக்கப்புறம்
நான் இந்தப் பாறையிலிருந்து இறங்கி வரேன்” என்று தெரிவித்தான்.
சிவபெருமான் இரண்டுமூன்று
முறை சொல்லிப் பார்த்தார். ஆனால் ராஜா அதைக் கேட்கவில்லை. தன் கோரிக்கையில்
உறுதியாக இருந்தார். “முதல்ல வரம். அதுக்கப்புறம்தான் இறங்குவேன்” என்றார்.
அவருடைய உறுதியைக் கண்டு
சிவபெருமான் மனம் நெகிழ்ந்துபோனார். ”ராஜா. என் சொல்லை நம்பு. நீ கேட்கிற வரத்தை
நான் கண்டிப்பா கொடுப்பேன். ஆனால் இங்கு இல்லை. நாளைக்கு காலையில உன் அரண்மனைக்கே
நேரா வந்து ராணியையும் சந்திச்சிட்டு வரம்
கொடுப்பேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சிவபெருமான்.
ஒரு கணம் ராஜா அமைதியாக
சிவபெருமான் முகத்தைப் பார்த்தார். அவர் சொல் மீது அவருக்கு நம்பிக்கை பிறந்தது.
“சரி சிவபெருமானே. உன் கருணைக்கு நன்றி. நீ சொன்னபடி செய்றேன்” என்று
சொல்லிக்கொண்டே தன் தலைமீது வைத்திருந்த பாறையை கீழே இறக்கிவைத்தார். பிறகு
நின்றுகொண்டிருந்த பாறையிலிருந்து கீழே இறங்கி சிவபெருமானை நோக்கி நடந்துவந்தார்.
அவர் முன்னால் நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து அவருடைய பாதங்களைத் தொட்டு
வணங்கிவிட்டு எழுந்து நின்றார். ராஜாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக
வழிந்தபடி இருந்தது.
“இப்போ நிம்மதியா அரண்மனைக்குப்
போ. நாளைக்குக் காலையில நான் அங்க வரேன். அப்போ விரிவா பேசிக்கலாம்” என்று அவரை
வழியனுப்பிவைத்தார் சிவபெருமான். ராஜாவும் மற்றொரு முறை அவரைக் குனிந்து
வணங்கிவிட்டு அரண்மனையை நோக்கி நடந்து சென்றார்.
சிவபெருமானின் தரிசனம்
கிடைத்த செய்தியை உடனடியாக தன் ராணியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர் மனம்
துடித்தது. அவர் அரண்மனைக்குள் செல்லும்வரை பார்த்தபடி நின்றிருந்த சிவபெருமான்
தனக்குள் புன்னகைத்தபடி அங்கிருந்து மறைந்தார்.
அரண்மனைக்குள் வரும் ராஜாவை
முதலில் வேலையாட்கள்தான் பார்த்தார்கள். முதலில் ஒருகணம் அவர்களுக்கு எதுவுமே
புரியவில்லை. அஞ்சி ஒதுங்கினார்கள். பிறகு ராஜா அனைவரையும் பார்த்து “என்னப்பா,
எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ஏன் என்னைப் பார்த்து எல்லாரும் மெரள்றீங்க?” என்று
கேட்டபடியே நடப்பதைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் திளைத்தார்கள். ஓடோடிச் சென்று
அரண்மனை முழுவதும் அச்செய்தியைப் பரப்பினர். ஒருவன் வேகமாக அந்தப்புரத்துக்குச்
செய்தி அனுப்பிவைத்தான். செய்தி கிடைத்ததும் ராஜாவை வரவேற்க ராணியே நேராக
வாசலுக்கு வந்து நின்றாள். அதே சமயத்தில் ராஜா படியேறி உள்ளே வந்தார். அவருக்கு
ஆரத்தி எடுத்து வரவேற்று அரண்மனைக்குள் அழைத்துச் சென்றாள் அவள்.
“ராணி, எனக்கு சிவபெருமானின்
தரிசனம் கிடைச்சிட்டுது. அவர் கருணையும் கிடைச்சிட்டுது” என்றார்.
“என்ன ராஜா? என்ன சொல்றீங்க?
விளக்கமாச் சொல்லுங்க” என்று கேட்டாள் அவள்.
“ஆமாம். நான் சிவபெருமானை
நேருக்கு நேர் பார்த்தேன். அவர் என் கண் முன்னால காட்சியளித்தார்.”
“உண்மையாகவா?”
“ஆமாம். நமக்கு பிள்ளைவரம்
கொடுக்க சிவபெருமான் ஒத்துகிட்டாரு”
“அப்படியா? இந்த
மகிழ்ச்சியை என்னால தாங்கவே முடியலை”
“நாளைக்கு காலை வேளையில நம்
அரண்மனைக்கே நேருல வரேன்னு சிவபெருமான் சொல்லியிருக்காரு.
அந்த சமயத்துல அந்த வரத்தை கொடுக்கறதா எனக்கு வாக்களிச்சிருக்காரு”
ராஜாவை உச்சியிலிருந்து
பாதம் வரை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு உடல்சிலிர்த்தாள் ராணி. ராஜாவை ஒருமுறை
தழுவிக்கொண்டாள்.
”நம்முடைய நீண்டகால ஏக்கம்
நாளைக்கு காலையில நிறைவேறப்போவுது. சிவபெருமான் நம் அரண்மனைக்குள்ள வர சமயத்துல நீ
நல்ல உடைகளை உடுத்திகிட்டு வரவேற்பு கொடுக்க தயாரா இருக்கணும். அதுக்கு முன்னால்
இன்னைக்கே நம்ம வேலையாட்களை வச்சிகிட்டு அரண்மனையை முழுசா கழுவி துடைச்சி கோலம்
போட்டு பளிச்சினு வச்சிருக்கணும். ஒருவேளை நம் அரண்மனையிலேயே அவர் காலை உணவைச்
சாப்பிடக்கூடும். அவருக்குப்
பேரீச்சம்பழங்கள்தான் ரொம்பவும் பிடிக்கும். நல்ல பழங்களை விதையை எடுத்துட்டு ஒரு
தட்டில தயாரா வச்சிருக்கணும். அது போதும்”
ராணிக்கு ராஜாவின் சொற்களை
நம்புவதா, கூடாதா என குழப்பமாக இருந்தது. அவள் குழப்பத்தைப் புரிந்துகொண்டதும்
ராஜா அவள் தோளைத் தொட்டு அசைத்து “பயப்படாதே ராணி. சிவபெருமான் எனக்கு வாக்களிச்சிருக்காரு.
நிச்சயமாக அவரு நம்மைப் பார்ப்பதற்கு வருவாரு” என்று ஆறுதலாகச் சொன்னார்.
அடுத்த காலை விடிந்தது.
சிவபெருமான் கைலாசத்திலிருந்து ஆகாயமார்க்கமாக ஒரு சாமியாரின் தோற்றத்தோடு அந்த
ஊரின் எல்லைக்கு வந்து சேர்ந்தார். அவர் தோளில் ஒரு பை தொங்கியது. ஒரு கையில்
பிச்சைத்தட்டும் இன்னொரு கையில் ஓர் ஊன்றுகோலும் இருந்தன. ஊர் நெருங்கியதும்,
கண்ணுக்குத் தென்பட்ட முதல்
வீட்டின் வாசலில் நின்று பிச்சை கேட்டார். அந்த வீட்டில் வசித்துவந்த ஒரு கிழவி
முறத்தில் அரிசி எடுத்துவந்து நீட்டினாள். அவர் அதை தன் தோள்பையில் வாங்கிக்கொண்டு
ஆசி வழங்கிவிட்டு அடுத்த வீட்டை நோக்கி நடந்தார். அந்த வரிசையில் இருந்த எல்லா
வீட்டு வாசல்களிலும் நின்று பிச்சை வாங்கியபடி நடந்தார். தெருக்கள் கூடும்
இடங்களில் நின்று எல்லோரும் பார்க்கும் வகையில் நடனமாடி குதித்தார். ஓங்கிய
குரலில் ராகம் போட்டு பாடினார். சிறு பிள்ளைகளும் பெரியவர்களும் கூட்டமாக நின்று
வேடிக்கை பார்த்தனர். சிவபெருமான் அவர்கள் அனைவருக்கும் பையிலிருந்து பழங்களை
எடுத்துக் கொடுத்தார். இப்படி பிச்சை
வாங்கியபடியே கடைசியாக அரண்மனையை அடைந்தார்.
ராஜாவும் ராணியும் அரண்மனை
வாசலிலேயே சிவபெருமானுக்காகக் காத்திருந்தனர். வாசலில் வந்து நின்ற சாமியாரைப்
பார்த்ததும் சிவபெருமான்தான் சாமியார் வேடத்தில் வந்திருக்கிறார் என்பதை ராஜா
புரிந்துகொண்டான். ராணியின் பக்கமாகத் திரும்பி கண்ணசைவில் அந்த உண்மையை அவளுக்கு
உணர்த்தினான். உடனே ராணி வாசலிலேயே மஞ்சள் கரைத்த நீரை நிறைத்துவைத்திருந்த
குடத்தை எடுத்துவந்து சாமியாரின் பாதங்களில் ஊற்றி தூய்மை செய்துவிட்டு விழுந்து
வணங்கினாள். ராஜாவும் ராணியோடு சேர்ந்து காலில் விழுந்து வணங்கினான். “சீரும்
சிறப்போடும் சந்ததியோடும் நீடூழி வாழ்க” என இருவரையும் வாழ்த்தினார் சாமியார்.
பிறகு பையிலிருந்து இரு
மாம்பழங்களை எடுத்து ராணியிடம் கொடுத்தார். ”இவற்றை சாப்பிடு மகளே. நீ நீண்ட காலமா
பிள்ளை இல்லாத மனக்குறையோடு இருக்கறேன்னு எனக்குத் தெரியும். உன் குறையைத் தீர்க்கறதுக்காக
பன்னிரண்டு ஆண்டு காலம் கடுமையா தவம் செய்த உன் கணவன் மிகவும் அன்பானவன். உங்க
ரெண்டு பேருக்கும் நான் உதவி செய்யணும். உன் கணவன் கேட்ட வரத்தை அளிக்கறதுக்கு
முன்னால உன்னிடமிருந்து ஒரு கேள்விக்கு பதில் எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னார்.
“என்ன கேள்வி ஐயா?” என்று
பணிவோடு கேட்டாள் ராணி.
”உனக்கு பதினாறு ஆண்டுகள்
மட்டுமே ஆயுள் உள்ள புத்திசாலிக்குழந்தை வேணுமா?
நூறு ஆண்டுகள் வரை கெட்டியான ஆயுள் உடைய முட்டாள் குழந்தை வேணுமா? இந்தக்
கேள்விக்கு நீ பதில் சொல்லிட்டால், என் வேலை எளிதாக முடிஞ்சிடும்” என்றார் சிவபெருமான்.
”ஐயோ, இது என்ன குழப்பம்?”
என்று தலையைப் பிடித்தபடி உட்கார்ந்துவிட்டாள் ராணி. “நான் என்ன பதில் சொல்வேன்?
எனக்கு ஒன்னுமே புரியலையே” என்று புலம்பியபடி அருகில் நின்றிருந்த ராஜாவின் பக்கம்
திரும்பினாள். ராஜாவும் ஏதோ பதில் சொல்ல முற்பட்டான். உடனே கையை உயர்த்தி அவனைத்
தடுத்த சிவபெருமான் “ராணியிடம் கேட்ட கேள்விக்கு ராணிதான் பதில் சொல்லவேண்டும்”
என்று உறுதியான குரலில் தெரிவித்தார். அதைக் கேட்டதும் ராஜா அமைதியடைந்தான்.
ராணி தன் கைகளை உயர்த்தி
தன் தலைமீது பட்பட்டென்று அடித்துக்கொண்டாள். “ஐயோ, நான் என்ன செய்வேன்? இது என்ன
சோதனை? நான் என்ன கேட்பேன்? எனக்கு ஒன்னுமே புரியலையே. இப்படி ஒரு இக்கட்டில
சிக்கிகிட்டேனே” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டாள். அவள் விழிகள் சிறிது நேரம்
வாசலருகில் புத்தம்புது பூக்களுடன் காற்றில் மெல்ல அசைந்தபடி நின்றிருந்த ஒரு செடியின்
மீது பதிந்தன.
பிறகு எழுந்து நின்று
சிவபெருமானைப் பார்த்து கைகுவித்து வணங்கியபடி, “ஐயா, ஒரு முட்டாளைப் பெத்து நூறு
ஆண்டுகள்வரைக்கும் வச்சிருக்கிறதால என்ன பயன் இருக்கப் போவுது. ராஜ்ஜியத்தையும்
ஆட்சி செய்ய முடியாம, வீட்டையும் கவனிச்சிக்க முடியாம இருக்கற ஒரு முட்டாள்
இருப்பதும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான் அல்லவா?” என்று சொல்லிவிட்டு ஒரு
பெருமூச்சு விட்டாள். சிவபெருமான் அவளை அமைதியோடு பார்த்தபடி நின்றிருந்தார்.
”வீட்டைக் கவனிச்சிக்கிறதைவிட
நாட்டைக் கவனிச்சிக்கிறதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். எனவே, பதினாறு ஆண்டுகள்
வாழக்கூடிய புத்திசாலிக் குழந்தையே போதும்” என்று சொன்னாள் ராணி.
“முடிவாகத்தான் சொல்றியா?”
என்று கேட்டார் சிவபெருமான்.
“ஆம் ஐயா” என்று
சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு தலையைக் குனிந்துகொண்டாள் ராணி.
“அவசரப்பட வேணாம். நல்லா யோசிச்சி
உன் முடிவைச் சொல். வரத்தைக் கொடுத்த பிறகு எக்காரணத்தைக் கொண்டும் என்னால மாத்தமுடியாது.”
“எல்லாக் கோணங்களிலும் ஆராய்ச்சி
பண்ணிட்டுதான் என் பதிலைச் சொல்றேன் ஐயா. எனக்கு பதினாறு ஆண்டு காலம் மட்டுமே வாழுறா
புத்திசாலிக்குழந்தையே போதும்”
“இதுதான் உன் முடிவா?”
“ஆமாம் ஐயா. இதுதான் என்
முடிவு”
சிவபெருமான் ஒருகணம்
ராணியையும் ராஜாவையும் மாறிமாறிப் பார்த்தார். பிறகு இருவருடைய தலைமீதும் கை
வைத்து கண்களை மூடி முணுமுணுத்தார். பிறகு “நீங்கள் கேட்ட வரத்தைக் கொடுத்துவிட்டேன்.
நீங்க நினைச்சபடியே ஆகட்டும். வாழ்வாங்கு வாழ்க” என்று கூறிவிட்டு அரண்மனையைவிட்டு
வெளியேறினார்.
அடுத்து சில நாட்களிலேயே
ராணி கருவுற்றாள். அரண்மனை வைத்தியர் அவளுடைய கர்ப்பத்தை உறுதி செய்ததும், ராஜா
ஊரில் உள்ள அனைவரும் வந்து உண்டுவிட்டுச் செல்லும் வண்ணம் அரண்மனை வாசலிலேயே
பெரியதொரு பந்தல் போட்டு, ஓர் அறுசுவை விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அனைவரும்
விருந்துண்டு ராணியை வாழ்த்திவிட்டுச் சென்றனர்.
பத்து மாதங்கள் நிறைவுற்ற
தருணத்தில் ராணி அழகான ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். வம்சம் விளங்கப் பிறந்த
குழந்தையைப் பார்த்து ராஜா பூரித்தார். அன்று மாலையே ராஜா ஊரிலிருந்த சிவாலயத்துக்குச்
சென்று வழிபட்டு தெய்வத்துக்கு நன்றி சொன்னார். ஊரில் இருக்கும் எல்லா
ஆலயங்களிலும் குழந்தையின் பெயரில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குழந்தைக்கு
சென்னா என்று பெயரிட்டனர்.
சென்னா நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்தான். அனைவருடைய முன்னிலையிலும் வெளித்தோற்றத்துக்கு
மகிழ்ச்சியாக இருப்பதுபோலக் காட்டிக்கொண்டாலும் ராணி ஒவ்வொரு கணமும் உள்ளூர
நடுங்கிக்கொண்டிருந்தாள். சிவன் குறிப்பிட்டதுபோல தன் மகன் பதினாறு வயதுவரை
மட்டும்தான் உயிர்வாழ்வானோ என நினைத்து துயரத்தில் மூழ்கியிருந்தாள்.
யாருக்கும் தெரியாமல் ஒரு
ஜோதிடரை அரண்மனைக்கு வரவழைத்தாள் ராணி. குழந்தை பிறந்த நேரத்தையும் வரம்
கொடுத்தபோது சாமியார் சொன்ன தகவலையும் சேர்த்துச் சொல்லி, குழந்தையின்
எதிர்காலத்தைக் கணித்துக் கூறுமாறு கேட்டுக்கொண்டாள். ஜோதிடர் அங்கேயே உட்கார்ந்து
கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு ராணியின் முகத்தைப் பார்த்தார்.
“அம்மா, அந்தச் சாமியார்
சொன்னது எல்லாமே உண்மை. இந்தக் குழந்தை நல்ல ஞானமுள்ளவன். வீரமும் நேர்மையுணர்ச்சியும்
உள்ளவன். ஆனா பதினாறு வயசு நடக்கற சமயத்துல அவனுக்கு மிகப்பெரிய ஆபத்து ஒன்னு
காத்திட்டிருக்குது. அது எப்படி முடியும்னு யாராலயும் சொல்லமுடியாது”
ஜோதிடருக்கு தக்க
தட்சணையைக் கொடுத்து அனுப்பிவைத்த ராணி, தன் சென்னாவை கண்ணை இமை காப்பதுபோல
காத்துவந்தாள். சென்னா மெல்ல மெல்ல வளர்ந்து பாலகனான். அரண்மனையில் இருந்த
அனைவருக்கும் அவன் செல்லப்பிள்ளை ஆனான். அவனும் எல்லோரோடும் அன்பாகப் பழகி,
எல்லோருடைய மனத்திலும் இடம் பிடித்தான். சென்னா எங்கு சென்றாலும் அவனோடு ஒரு
சிறுவர் கூட்டமும் பின்தொடர்ந்தது.
விளையாட்டுபோல பதினாறு
ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அப்போதும் சென்னா பிற சிறுவர்களோடு சேர்ந்து ஏரிக்கரையிலும்
குளக்கரையிலும் பந்து விளையாடி பொழுதுபோக்கினான்.
ஒருநாள் ஒரு சிறுவன் “நீ
ராஜாவுடைய பிள்ளை. நீ ஏன் எங்களை மாதிரியான ஆளுங்களோடு சேர்ந்து இங்க வந்து பந்து
விளையாடுற? காட்டுக்குப் போய் மான்வேட்டை ஆடறதும் புலிவேட்டை ஆடறதும்தான் உன்னைமாதிரியான
இளவரசர்களுக்கு அழகு” என்று
குறிப்பிட்டான்.
“மானையோ, புலியையோ
வேட்டையாடிக் கொல்றதில என்ன அழகு இருக்கப்போவுது? நமக்குத் துன்பம் தராத உயிருக்கு
நாம ஏன் துன்பம் தரணும்?” என்று கேட்டான் இளவரசன் சென்னா.
“கொல்வதில் அழகு எதுவும்
இல்லைதான். ஆனால் கொல்வதுதான் வீரம். அப்படித்தான் நம் சாஸ்திரம் சொல்லுது” என்றார்கள்
சிறுவர்கள்.
அன்று வீட்டுக்குத்
திரும்பிய சென்னா இரவு முழுக்க, பிற சிறுவர்கள் சொன்னதைப்பற்றி யோசித்துக்கொண்டே
இருந்தான். அடுத்தநாள் காலையில் அவன் சிறுவர்களோடு விளையாடுவதற்குச் செல்லவில்லை.
அவன் ஏதோ யோசனையில் மூழ்கியபடி அரண்மனையில் ஓர் அறைக்குள் உட்கார்ந்திருப்பதைப்
பார்க்க ராணிக்கு வருத்தமாக இருந்தது.
“என்ன நடந்திச்சி மகனே?”
என்று பரிவோடு கேட்டாள். பிற சிறுவர்கள்
அவனைப் பார்த்து சொன்ன சொற்களையெல்லாம்
அவன் ராணியிடம் சொன்னான். ”பாவம் அந்தச் சிறுவர்கள். அவுங்க பேச்சையெல்லாம்
நீ ஏன் கேட்கிற? நீ உன் விருப்பம்போல நம் அரண்மனைத் தோட்டத்திலேயே விளையாடு. காட்டுக்குப் போறதுலாம் ரொம்ப ரொம்ப ஆபத்தான
காரியம்” என்று ராணி அவனை எச்சரித்தாள்.
”இல்லை அம்மா. நான்
காட்டுக்குப் போய் புலியைக் கொன்று என் வீரத்தை அனைவருக்கும் நிரூபிச்சிக் காட்டணும்.
கோழை போல ஒதுங்கி நிற்க எனக்கு விருப்பமில்லை” என்று சொன்னான் சென்னா.
“உன்னை கோழைன்னு இப்ப யாரு
சொன்னாங்க? நீ எவ்வளவு பெரிய வீரன்ங்கறது எனக்குத் தெரியுமே. தினம்தினமும் நம்
அரண்மனைத்தோட்டத்தின் உச்சிக்கிளையில தொங்கற மாம்பழங்களை உன் வில்லையும் அம்பையும்
கொண்டு வீழ்த்தறதை என் கண்ணால ஒவ்வொரு நாளும் நான் பார்த்துட்டுதான இருக்கேன்”
என்று சென்னாவை அமைதிப்படுத்த முயற்சி செய்தாள் ராணி.
“நான் வீரன்ங்கறது உனக்கு
மட்டும் தெரிஞ்சா போதுமா? ஊரில இருக்கிறவங்களுக்குத் தெரியவேணாமா? காட்டுக்குப்
போய் வேட்டையாட எனக்கு அனுமதி கொடுங்க. என் வேட்டையில புலிகளை வீழ்த்தி நான் யார்ங்கறதை
இவங்களுக்குப் புரியவைக்கிறேன்”
“அவசரம் வேண்டாம் மகனே.
எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரும். அப்போது உன்னை நானே காட்டுக்கு
அனுப்பிவைப்பேன். அமைதியாக இரு. இனிமேல நீ வெளியே போய் பிள்ளைகளோடு சேர்ந்து
விளையாடவேணாம். அரண்மனைக்குள்ளயே இருக்கற சிறுவர்களோடு சேர்ந்து விளையாடு. அது
போதும்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் ராணி.
அவளுக்கு திடீரென ஜோதிடர்
சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன. பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்வான் என்று
குறிப்பிட்ட சிவபெருமானின் சொற்களும் நினைவுக்கு வந்தன. என்ன செய்வது என்று
புரியாமல் குழப்பத்தோடு தன் அறைக்குத் திரும்பினாள்.
மறுநாள் விடிந்தது.
காட்டுக்குச் சென்று வேட்டையாட வேண்டும் என சென்னாவின் மனம் துடித்தது.
அரன்மனைக்குள்ளேயே அவனோடு நெருக்கமாகப் பழகுகிற சில வேலைக்காரர்களையும் மாடுகளைப்
பராமரிக்கிற சிறுவர்களையும் சேர்த்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் காட்டுக்குப்
புறப்பட்டான்.
எதிர்பாராத விதமாக, ராணி
அந்த இடத்துக்கு வந்துவிட்டாள். அவன் நின்றிருக்கும் கோலத்தைப் பார்த்து அவள்
திடுக்கிட்டாள். அவன் புறப்பட்டு நிற்பதைப் புரிந்துகொண்டதும் அவனை எப்படியாவது
தடுத்து நிறுத்தவேண்டும் என முயற்சி செய்தாள். அவனோடு பேசத் தொடங்கிய சில
நொடிகளிலேயே அவன் மன உறுதியை அவள் உணர்ந்துகொண்டாள். அவனைத் தடுத்து நிறுத்துவது
சிரமம் என்பதையும் புரிந்துகொண்டாள்.
ஒரு பெருமூச்சுடன் “உன்
விருப்பம்போல காட்டுக்குப் போய் வேட்டையாடிட்டு வா. நான் உன்னைத் தடுக்கலை. ஒரே
ஒரு கணம். நான் வெளியே போய் சகுனம் எப்படி இருக்குதுன்னு பார்த்துட்டு வரேன்.
அதுக்கப்புறம் நீ கெளம்பலாம்” என்று சொல்லிவிட்டு வாசலுக்குச் சென்றாள்.
அப்போது அவள் பார்வையில்
கெட்ட சகுனங்களே தென்பட்டன. எண்ணெய்க்கூடைகளோடு ஒரு வண்டி சென்றது. கோடரிகளோடு
விறகுவெட்டிகள் நடந்துபோனார்கள். எல்லாமே கெட்ட சகுனங்கள். அவற்றையெல்லாம்
பார்த்து மனவருத்தத்தோடு ராணி திரும்பி வந்தாள். தான் பார்த்த குறிப்புகளையெல்லாம்
மகனிடம் எடுத்துச் சொன்னாள். ”ஒரே ஒரு நல்ல சகுனம் கூட என் கண்முன்னால தென்படலை.
கொஞ்ச நேரம் காத்திரு. ஏதாவது ஒரு நல்ல சகுனம் அமையட்டும். அதுக்கப்புறம் நீ புறப்பட்டுச் செல்லலாம். நான் உன்னைத்
தடுக்கமாட்டேன்” என்றாள் ராணி. அவள் கண்களிலிருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது.
ஆனால் சென்னா மன உறுதியோடு நின்றிருந்தான்.
ஒருமுறை எடுத்த முடிவிலிருந்து பின்வாங்குவதிலை என்பதில் உறுதியாக இருந்தான்.
”அம்மா. நான் புறப்பட்டுட்டேன். இப்பவே ரொம்ப காலதாமதமாகிட்டுது. தயவுசெஞ்சி
என்னைத் தடுக்காதே. என் கூட இத்தனை பேர் வரும்போது எதுக்கும்மா கவலைப்படறீங்க? நான்
பாதுகாப்பா திரும்பி வருவேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டான். அவனோடு
அரண்மனையைச் சேர்ந்த ஆட்களும் பின்தொடர்ந்து சென்றனர். ஒரு பாதுகாப்புக்காக ராணி
தன் சகோதரனையும் அவர்களோடு
அனுப்பிவைத்தாள்.
(தொடரும்)