அரிஜன சேவா சங்க வேலைகளில் ஈடுபட்டிருந்த தொண்டர்களை ஊக்கப்படுத்தவும் அரிஜன மேம்பாட்டுக்கான நிதியைத் திரட்டுவதற்காகவும் 23.01.1934 முதல் தமிழ்நாட்டில் ஒரு நீண்ட பயணத்தை காந்தியடிகள் மேற்கொண்டார். சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி என பல இடங்களுக்குச் சென்று பொதுமக்களிடையில் உரையாடிவிட்டு 15.02.1934 அன்று நாகப்பட்டினத்துக்கு வந்து சேர்ந்தார். அன்று காந்தியடிகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் சுயமரியாதை இயக்கத்தினர் கருப்புக்கொடி தாங்கி ஊர்வலம் நடத்தினர். ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் மிகப்பெரும் எண்ணிக்கையில் அக்கம்பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் காந்தியடிகளின் உரையைக் கேட்கத் திரண்டு வந்தனர்.
ஒரு பெரிய மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நகராட்சி
மன்றத்தின் சார்பாக இராமனாத முதலியாரும் தாலுகா போர்டு சார்பாக மனத்துணைநாத தேசகரும்
வரவேற்புப்பத்திரங்களை வாசித்து அளித்தனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அரிஜன சேவா சங்கத்தின்
சார்பாகவும் வடுவூர் கிராமத்தின் சார்பாகவும் பல தொண்டர்கள் தீண்டாமை ஒழிப்பின் முக்கியத்துவத்தை
வலியுறுத்தி உரையாற்றினர். அப்போது அந்த ஊரைச் சேர்ந்த வயதான ஒரு மூதாட்டி மேடையேறி
வந்து ஒரு வெள்ளித்தம்ளரை தம் காணிக்கையாகக் கொடுத்துவிட்டு, காந்தியடிகளின் கால்களைத்
தொட்டு வணங்கிவிட்டுச் சென்றார்.
காந்தியடிகள் தம் உரையில் தீண்டாமையை அனைவரும் கைவிடவேண்டும்
என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டார். தீண்டாமை என்னும் சாபக்கேட்டை சாதி இந்துக்கள் கைவிட்டால்,
சகோதரத்துவ உணர்ச்சியை அடைவதில் இந்துக்கள் எளிதாக வெற்றி அடைந்துவிடலாம் என்றும் இன்று
இந்த உலகமே சகோதரத்துவ உணர்வுக்காகத்தான் ஏங்கிக்
கிடக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
சமத்துவ உணர்வோடும் நல்லிணக்கத்தோடும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக
வாழவேண்டும் என்பதுதான் அன்று காந்தியடிகள் நிகழ்த்திய உரையின் சாரமாகும். அந்தச் சொற்களை
அந்தக் கூட்டத்தில் நிறைந்திருந்த ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் ஆழமாகப் பதிந்தன. சுதந்திரப்போராட்ட
நடவடிக்கைகளிலும் தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டிலும் ஆர்வம் கொண்டிருந்த தேசபக்தரான தன்
தாய்மாமனோடு காந்தியடிகளின் உரையைக் கேட்பதற்காக வந்திருந்த பத்து வயது பள்ளிச்சிறுவனொருவனின்
நெஞ்சில் அவருடைய சொற்கள் பசுமரத்தாணியென பதிந்துவிட்டன. தன்னுடைய எதிர்கால வாழ்வின்
செல்திசையை அன்றே அச்சிறுவனின் இளையமனம் தீர்மானித்துவிட்டது. அச்சிறுவன் என்.ஜி.ராஜன்.
பள்ளிப் பாடங்களைப்போலவே கூட்டங்களில் கேட்கும் கருத்துகளையும்
கருத்தூன்றிக் கவனித்து நெஞ்சில் பதியவைத்துக்கொள்ளும் பண்பு இயற்கையிலேயே ராஜனுக்குக்
கைவந்திருந்தது. சுதந்திரத்துக்கான தேவை குறித்து கேட்கும் உரைகள் வழியாக தானும் சுதந்திரத்துக்காக
உழைக்கும் வாழ்க்கையை வாழவேண்டும் என்று அவர் நினைத்தார். மாமனுடன் சென்று அவர் கலந்துகொண்ட
நிகழ்ச்சிகள் அவருடைய கனவை உரமிட்டு வளர்த்தன. 1936இல் தமிழகத்துக்கு வருகை புரிந்த
நேரு நாகப்பட்டினத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உத்வேகமூட்டும் உரையை நிகழ்த்தினார்.
அந்த உரை ராஜனைப் பெரிதும் கவர்ந்தது. இளைஞனாக வளர்ந்ததும் காந்தியடிகளைப்போலவும் நேருவைப்போலவும்
சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு தியாக வாழ்க்கையை
வாழ வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டார்.
பள்ளிப்படிப்பை முடித்ததும் மகனை பாரிசுக்கு அனுப்பி சட்டக்கல்வி
படிக்கவைக்கவேண்டும் என்று நினைத்திருந்த ராஜனின் தந்தையாருக்கு, ராஜனின் பேச்சிலும்
நடவடிக்கைகளிலும் ஏற்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனியும் தாய்மாமன்
வீட்டிலேயே விட்டுவைத்திருப்பது சரியில்லை என நினைத்து, நாகப்பட்டினத்துக்குச் சென்று
அவரை தம்முடைய வசிப்பிடமான காரைக்காலுக்கு அழைத்து வந்துவிட்டார்.
தடைபட்ட பள்ளிப்படிப்பை காரைக்காலில் தொடரவைத்து தன் கனவை நிறைவேற்றிக்கொள்ளலாம்
என்பது அவர் திட்டமாக இருந்தது. ஆனால் மகனோடு பள்ளிக்கூடத்துக்குச் சென்றபோதுதான்,
அப்போது நிலவிய சட்டமுறைடின்படி அதற்கு வழியில்லை என்பதை அவர் புரிந்துகொண்டார். பிரெஞ்சிந்தியப்
பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமே அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் கல்வி பயிலமுடியும் என்பது
அக்காலத்தில் அரசவிதியாக இருந்தது. பிரிட்டிஷ் இந்தியப் பகுதியிலிருந்து செல்லும் மாணவர்களுக்கு
பிரெஞ்சிந்தியப் பகுதியில் கல்வி கற்க வழியில்லை. மகனுடைய கல்வி தன்னாலேயே தடைபட்டுவிட்டதே
என நினைத்து ராஜனின் தந்தையார் வருந்தினார். அதே சமயத்தில் அவருடைய மனம் மகனை நாகப்பட்டினத்துக்கு
அனுப்பிவைக்க விரும்பவில்லை. அச்சூழல் அவரை சுதந்திரப்போராட்டத்தை நோக்கி இழுத்துச்
சென்றுவிடும் என நினைத்து அஞ்சினார். அதனால் குத்தகைக்கு எடுத்துப் பயிரிடும் நிலங்களில்
நடைபெறும் விவசாய வேலைகளில் தனக்கு உதவியாக வைத்துக்கொண்டார்.
அப்பாவுக்கு அருகிலேயே இருந்தபோதும், தமிழகப்பகுதிகளில் நடைபெறும்
போராட்டச் செய்திகளை பத்திரிகைகள் வழியாக படித்துத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தார்
ராஜன். வார்தா ஆசிரமத்துக்குக் குடியேறிய பிறகு காந்தியடிகள் கிராம நிர்மாணப்பணிகளில்
முழுமூச்சாக ஈடுபடத் தொடங்கினார். அரிஜன் இதழில் அது தொடர்பான கட்டுரைகள் ஏராளமாக வெளிவந்தன.
அந்நிய ஆட்சியை அகற்றும்
மிகமுக்கியமான நோக்கத்தோடு ஈடுபட்டிருக்கும் ஒரு பேரியக்கம் கிராம
நிர்மாணப்பணிகளில் இறங்கி தன் ஆற்றலை இழந்துவிடக்கூடாது என காங்கிரஸ்
இயக்கத்துக்குள் இருந்த சில இளைஞர்கள் கருதினர். அந்நிய ஆட்சியை அகற்றும் மகத்தான
திட்டத்துடன் இத்தகு சில்லறை வேலைகளை இணைத்துக்கொள்ளக்கூடாது என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்தது. அதனால் காங்கிரஸ் இயக்கத்துக்குள்ளேயே
காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி என்ற பெயரில் அவர்கள் ஒரு தனி அமைப்பை உருவாக்கி
செயல்படத் தொடங்கினர். சோவியத் ருஷ்யாவின் ஆட்சியமைப்பு அவர்களுக்கு ஒரு வசீகரமான முன்மாதிரியாக
இருந்தது.
நாட்டின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் பதினைந்து
அம்சங்களை அக்கட்சி தன் நோக்கமாக அறிவித்து செயல்படுத்தத் தொடங்கியது. நாடெங்கும்
நிர்மாணச்செயல்பாடுகளில் ஈடுபாட்டோடு பாடுபட்டுக்கொண்டிருந்த செயலூக்கம் கொண்ட பல
இளைஞர்கள் ஒருபுறம் காங்கிரஸ் கட்சியிலும் மறுபுறம் கம்யூனிஸ்ட் கட்சியிலும்
ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். ராஜனும் அத்தகு இருவித மனநிலைகளிடையில்
செயல்படுபவராக இருந்தார். ஆழ்மனத்தில் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு மக்களுக்குத்
தொண்டாற்ற வேண்டும் என்னும் விசை அவருக்குள் எப்போதும் அணையா நெருப்பாக
சுடர்விட்டபடி இருந்தது என்பதுதான் எல்லாவற்றுக்கும் முக்கியமான காரணம்.
1941ஆம் ஆண்டில் காரைக்காலில் விவேகானந்தர் வாலிபர்
சங்கம் உருவான சமயத்தில், உடனடியாக அச்சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து செயல்படத் தொடங்கினார்
ராஜன். அதற்குமுன் காரைக்காலில் தொடங்கப்பட்ட தேச ஊழியர் சங்கத்திலும் உறுப்பினராக
இருந்தார். மக்கள் பணிகளில் அவர் பங்கெடுத்துக்கொள்ளும் வேகத்தைப் புரிந்துகொண்ட
சங்க உறுப்பினர்கள் அவரை 1942இல் அச்சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர்.
அதே ஆண்டில் ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதியன்று
பம்பாயில் கூடிய மாநாட்டில் காந்தியடிகள்
வெள்ளையனே வெளியேறு முழக்கத்துடன் புதிய போராட்டத்தைத் தொடங்கினார். அம்மாநாட்டில் ’வெள்ளையனே
வெளியேறு’ தீர்மானத்தை நேருவை முன்மொழிய வைத்தார்
காந்தியடிகள். அந்த
இயக்கத்தை முளையிலேயே கிள்ளியெறிய விரும்பிய ஆங்கிலேய
அரசு அதற்கு மறுநாளே காந்தியடிகளையும் மற்ற தலைவர்களையும் கைது செய்து வெவ்வேறு சிறைகளில் அடைத்தது.
சிறைவாசத்தின்போது, காரணமில்லாமல் பலர் கைது செய்யப்படுவதைக்
கண்டித்து காந்தியடிகள் 21 நாட்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். அச்சமயத்தில்
அவருடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என அனைவரும் அச்சம் கொண்டிருந்தனர்.
இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு காந்தியடிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்
என்ற கோரிக்கையோடு வைசிராய்க்கு ஒரு கடிதத்தை எழுதி, அதில் பொதுமக்கள் அனைவரும் கையெழுத்திடவேண்டும்
என்ற வேண்டுகோளோடு தேச ஊழியர் சங்கம் சார்பாக ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்தினார்
ராஜன். அச்செயல்பாட்டை ஓர் அரசியல் நடவடிக்கையாகக் கருதிய விவேகானந்தர் வாலிபர் சங்கம்
அவரை அச்சங்கத்திலிருந்து வெளியேற்றியது.
அப்போது கல்கி இதழில் ஒருமுறை சென்னை மாகாணத்தில் ராஜாஜி அமைச்சரவையில்
சட்ட அமைச்சராக இருந்த சுப்பராயன் அவர்களுடைய மகள் பார்வதி குமாரமங்கலம் அவர்களின்
படத்தை அட்டையில் வெளியிட்டு மன்னார்குடியில் இந்திய சோவியத் நண்பர்கள் சங்கத்தில்
அவர் உரையாற்றவிருக்கும் செய்தியையும் வெளியிட்டிருந்தது. அதைப் படித்த ராஜன் சோவியத்
செய்திகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தால் காரைக்காலிலிருந்து புறப்பட்டுச் சென்று அக்கூட்டத்தில்
கலந்துகொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்கனவே இணைந்து செயல்பட்டுவந்த காரைக்காலைச்
சேர்ந்த பிற நண்பர்களான பொன்னையா, மருதமுத்து ஆச்சாரியார், சோ.சிதம்பரம் போன்றோரும்
அக்கூட்டத்துக்கு வந்திருந்தனர். அவர்களோடு பேசிப் பழகி நட்பை வளர்த்துக்கொண்டார் ராஜன்.
அதைத் தொடர்ந்து, பிற நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் அனைவரும் ஒன்றாகப் புறப்பட்டுச் சென்று
ஒன்றாகத் திரும்பி வரத் தொடங்கினர். இயக்கச் செயல்பாடுகளைப் பற்றிய எண்ணங்களைத் தமக்குள்
பரிமாறிக்கொள்ளவும் தொடங்கினர்.
ஒருமுறை காரைக்காலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கூட்டம் நடைபெற்றது.
நெடுங்காடி ராமச்சந்திரன் கூட்டத்தில் உரையாற்றினார். தற்செயலாக அத்தெருவின் வழியாக
நடந்துசென்ற ராஜனை பிற நண்பர்கள் அழைத்து ராமச்சந்திரனின்
உரையைக் கேட்கவைத்தனர். அந்த உரை அவரை முழுமையாகவே கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் திசைதிருப்பியது.
அது ராஜனுடைய வாழ்வில் முக்கியமான ஒரு நாள்.
விடுதலைப்போராட்ட நடவடிக்கைகளோடு, விவசாயிகள் சங்கம், தொழிலாளர்
சங்கம் என பல்வேறு பணிகளில் முனைப்போடு ஈடுபடத் தொடங்கினார் ராஜன். இந்தியாவை விட்டு
வெள்ளையர்கள் வெளியேறுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பிரெஞ்சுக்காரர்களும்
வெளியேற வேண்டியது அவசியம் என்று அவர் நினைத்தார். பிரெஞ்சு ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்ப்பதையும்
அவர் தன் கடமையாகக் கொண்டார். அதற்கு உகந்த வகையில் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு
பொதுமக்களிடையில் உரையாற்றி ஆதரவு திரட்டினார்.
புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த அ.சுப்பையா
அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இராமகிருஷ்ணா வாசக சாலையைப்போல தன் நண்பர்கள்
உதவியோடு காரைக்காலில் 20.06.1943 அன்று ’ஜனசக்தி வாசக சாலை’ என்னும் பெயரில் ஒரு பொதுநூலகத்தைத்
தொடங்கினார். வ.சுப்பையா ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்திவந்த சுதந்திரம் என்னும் வார
இதழை வரவழைத்து அனைவரும் படிப்பதற்கு வழிசெய்தார். ஒருபுறம் பொதுமக்கள் செய்திகளை வாசித்துத்
தெரிந்துகொள்வதற்கேற்ற இடமாகவும் மறுபுறம் அவர்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டுவதற்கான
இடமாகவும் அந்த நூலகம் இயங்கத் தொடங்கியது.
பிரெஞ்சிந்தியப் பகுதியிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் வெளியேற
வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த பல மூத்த தலைவர்கள் கோவில்பத்து முருகையா பிள்ளை
தோட்டத்தில் அடிக்கடி கூட்டம் நடத்தி அரசியல் செய்திகளை பொதுமக்களுக்குத் தெரிவித்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த எஸ்.ஆர்.சுப்பிரமணியம், வ.சுப்பையா போன்றோரும் காரைக்கால் பகுதியைச்
சேர்ந்த அரங்கசாமி நாயக்கர், வழக்கறிஞர் சவரிப்பிள்ளை, லெயோன் சேன் ழான், வையான் தெ
பழனூர், கணபதி ஐயர். கிருஷ்ணமூர்த்தி ஐயர் போன்றோரும் கலந்துகொண்டு உரையாற்றினர். இளைஞரான
ராஜன் அக்கூட்டங்களில் பங்கேற்று அவர்களோடு பழகவும் தொடங்கினார். அவர்கள் அறிவிக்கும்
ஒவ்வொரு போராட்டத்தையும் முன்னின்று நடத்தும் களச்செயல்பாட்டாளராகவும் விளங்கினார்.
ஒருமுறை ராஜனை தன் வீட்டுக்கு அழைத்த அரங்கசாமி நாயக்கர் தம்
வீட்டில் வெகுகாலமாக பாதுகாத்து வைத்திருந்த ஒரு புத்தகமூட்டையை அவரிடம் ஒப்படைத்தார்.
1857ஆம் ஆண்டில் நடைபெற்ற இராணுவத்தில் இந்தியச்சிப்பாய்களின் முன்முயற்சியால் நடைபெற்ற
முதல் சுதந்திரப்போராட்டத்தைப்பற்றிய புத்தகப்பிரதிகள் அந்த மூட்டையில் இருந்தன. சாவர்க்கர்
ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை மதுரையைச் சேர்ந்த செளந்திரம் அம்மாள் வேறொரு புனைபெயரில்
’எரிமலை’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்க, பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்தது. ஆங்கிலேய அரசு அப்புத்தகத்தைத் தடைசெய்திருந்ததால்,
அரங்கசாமி நாயக்கர் அவற்றை மூட்டை கட்டி பரண்மீது வைத்திருந்தார். பொதுமக்களிடம் விநியோகிப்பதற்காக
அந்தப் புத்தகமூட்டையை அவர் ராஜனிடம் ஒப்படைத்தார். அம்மூட்டையை எடுத்துச் சென்ற ராஜன்
ஜனசக்தி வாசகசாலையில் வைத்திருந்து, வாசிக்கும் ஆர்வம் கொண்ட வாசகர்களுக்கும் சுதந்திர
நாட்டம் கொண்டவர்களுக்கும் அப்பிரதிகளை இலவசமாகவே படிப்பதற்குக் கொடுத்தார் ராஜன்.
ஏற்கனவே புதுச்சேரியிலிருந்து வந்த சுதந்திரம் பத்திரிகையை விநியோகிக்கும் அனுபவம்
இருந்ததால், அவருக்கு எரிமலை புத்தகத்தை விநியோகிப்பதில் எவ்விதமான சிரமமும் ஏற்படவில்லை.
இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ் நாசிப்படைகளால்
கைப்பற்றப்பட்டது. அப்போது பிரான்ஸை விடுவிப்பதற்காக, பிரான்ஸின் குடியேற்ற
ஆட்சிக்கு உட்பட்ட பிற நாடுகள் ஒன்றிணைந்து ஒரு பாசிச எதிர்ப்பியக்கத்தைத்
தோற்றுவித்தனர். அது அல்ஜீரியாவின் தலைநகரான ஓராலில் தொடங்கியது. அதற்குக் கொம்பா
என்று பெயரிடப்பட்டது. அதன் கிளை அமைப்பை புதுச்சேரியில் வ.சுப்பையாவும்
காரைக்காலில் வழக்கறிஞரான லெயோன் சேன் ழானும் தொடங்கினர். ராஜனும் அந்த அமைப்பில்
இணைந்து பிரான்ஸ் விடுதலைக்குக் குரல்கொடுத்தார். அப்போது பிரெஞ்சிந்தியப்
பகுதியின் ஆளுநராக போன்வின் என்பவர் இருந்தார். அவர் நாசிப்படையினரால்
அமர்த்திவைக்கப்பட்ட ஆளுநர். அப்போது பிரெஞ்சிந்தியப் பகுதி பிரான்சின்
ஆட்சியிலிருந்து துண்டிக்கப்பட்டு பிரிட்டிஷ் இந்திய அரசின் ஆளுகைக்கும் நிதி
உதவிக்கும் கட்டுப்பட்டு இருந்தது. ஆளுநர் போன்வின் புதுச்சேரி, காரைக்கால்
பகுதிகளில் செயல்பட்டுவரும் கொம்பா அமைப்பினரைப்பற்றி இந்திய அரசிடம்
தெரிவித்தார். அதன் விளைவாக, ஆங்கிலேய அரசு கொம்பா அமைப்பைத் தடை செய்யவும்
அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களை நாடு கடத்தவும் உத்தரவிட்டது. இதன் விளைவாக, ராஜன்
உள்ளிட்ட பலரும் தலைமறைவானார்கள்.
இறுதியாக 01.05.1945 அன்று நாசிப்படை சோவியத்
ரஷ்யாவிடம் சரணடைந்தது. அதன் விளைவாக பிரான்ஸ் விடுதலையடைந்தது. பிரான்ஸில்
கம்யூனிஸ்ட்டுகளும் சோஷலிஸ்ட்டுகளும் இணைந்து ஆட்சி செய்தன. இக்குடியரசு ஏற்கனவே
அறிவிக்கப்பட்டிருந்த நாடுகடத்தும் ஆணையை ரத்து செய்து, அனைவரையும் விடுதலை
செய்வதாக அறிவித்தது. தலைமறைவு வாழ்க்கையிலிருந்து வெளியே வந்த ராஜன் மீண்டும் இயல்புவாழ்க்கைக்குத்
திரும்பினார்.
பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த
கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக
முன்னணியை உருவாக்கின. பிரெஞ்சு
அரசிடமிருந்து அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கும் நோக்கத்தோடு ஒரு மாபெரும் மக்கள்
இயக்கத்தை உருவாக்கி வழிநடத்துவதுதான் தேசிய ஜனநாயக முன்னணியின் அடிப்படை நோக்கமாக
இருந்தது. அதன் தொடர்பான பிரச்சாரங்களில் ராஜனும் அவருடைய நண்பர்களான
எம்.சுப்பிரமணியம், கேசவ ஐயர், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தலைக்கு மேல் இளைஞனாக வளர்ந்துவிட்ட மகனுக்கு எதிராக எதையும்
பேசமுடியாத நிலையில் அவருடைய தந்தையார் அமைதியாக
இருக்கவேண்டியதாயிற்று. நாகப்பட்டினத்தில் படித்துவந்த காலத்தில் எந்தச் சுதந்திரப்போராட்டம்
அவரை ஈர்த்துவிடக்கூடாது என அவர் அஞ்சினாரோ, அந்தக் காந்தத்தின் விசையால் காரைக்காலில்
அவர் ஆட்கொள்ளப்பட்ட போது, அவர் செய்வதறியாமல் அமைதியாக இருந்தார். மகனுக்குப் பொருத்தமான
இடத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து 13.09.1946 அன்று திருமணம் செய்துவைத்தார். திருமண
வாழ்க்கை அவருடைய வாழ்க்கையின் திசையில் ஒரு திருப்புமுனையைக் கொண்டுவரக்கூடும் என
அவர் கருதினார். ஆயினும் ராஜன் தன் திருமண
வாழ்க்கையை ஒரு கூடுதல் பொறுப்பாக எடுத்துக்கொண்டாரே
தவிர, அதை ஒருபோதும் சுமையாகவோ அல்லது திசைதிருப்பும் சக்தியாகவோ கருதவே இல்லை. அதனால்
அவருடைய அரசியல் செயல்பாடுகள் கிஞ்சித்தும் குறையாமல் சீரான வேகத்தில் தொடர்ந்தன.
அப்போது பாரததேவி என்னும் பெயரில் ஒரு
தினப்பத்திரிகையை ராஜனின் நண்பரான ராமரத்தினம் வெளியிட்டு வந்தார். பத்திரிகையின்
சார்பில் விடுதலை இயக்கப்பொதுக்கூட்டம் ஒன்றை அவர் ஏற்பாடு செய்து உரையாற்றினார்.
அக்கூட்டத்துக்கு ராஜன் எல்லா வகைகளிலும் உதவி செய்தார். இருவரும் பிரெஞ்சு
ஆட்சியாளர்கள் உடனடியாக பிரெஞ்சு இந்தியப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்று
உரையாற்றினார். கூட்டத்தில் அவர்கள் ஆற்றிய உரையின் குறிப்புகள் கிடைத்ததும்
வட்டார நிர்வாகம் அவ்விருவரையும் உடனடியாகக் கைது செய்து பன்னிரண்டு நாட்கள்
சிறையில் அடைத்து துன்புறுத்தியது. தண்டனையின் வேதனையைவிட தாய்நாட்டின்
விடுதலையையே பெரிதென நினைத்த அவர்கள் தண்டனைக்காலம் முடிந்து விடுதலை பெற்றதும்
மீண்டும் பழைய உற்சாகத்தோடு சுதந்திரப்போராட்ட நடவடிக்கைகளில் இறங்கினர்.
ஆங்கிலேய அரசு 15.08.1947 அன்று ஆங்கிலேயரின்
ஆட்சிக்குட்பட்ட இந்தியப் பகுதிகளுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை
வெளியிட்டு அதற்கான நடவடிக்கைகளை வேகவேகமாகத் தொடங்கியது. அதே போன்றதொரு அறிவிப்பை
பிரெஞ்சு அரசு வெளியிடவேண்டும் என சுதந்திர இயக்கத் தலைவர்கள் அரசுக்கு அழுத்தம்
கொடுத்தனர். ஆனால் பிரெஞ்சு அரசு அந்த வேண்டுகோளுக்கு அசைந்து கொடுக்கவில்லை.
அதனால் 08.08.1947 அன்று கம்யூனிஸ்ட் கட்சியைச்
சேர்ந்தவர்களும் பிரெஞ்சிந்தியக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் அனைத்துப்
பொதுநலச் சங்கங்கள் சார்ந்தவர்களும் தொண்டர்களும் தம் வேண்டுகோளை முழக்கங்களாக
எழுப்பியபடி ஒரு பெரிய ஊர்வலம் நடத்தினர். நிர்வாக அலுவலகம் வழியாக ஊர்வலம் செல்லக்கூடாது
என அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தி கலைந்துபோகச் செய்தனர்.
அதைப்பற்றிய தகவல் கிடைத்ததும் அடுத்தநாள் காலையில்
கம்யூனிஸ்ட் கட்சி, மாணவர் காங்கிரஸ்,
மதகடி ஜவஹர்லால் நேரு இளைஞர் காங்கிரஸ் ஆகிய அமைப்பினரை
ஒருங்கிணைத்துக்கொண்டு ஒரு பெரிய ஊர்வலம் ராஜன் தலைமையில் அதே நிர்வாக அலுவலகத்தை
நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. ’இந்தியாவுடன் இணைவோம். பிரெஞ்சு அரசே, பிரெஞ்சு
அரசே வெளியேறு’ என அவர்கள் எழுப்பிய முழக்கங்கள் விண்ணைத் தொட்டன. அப்போது போலீஸ்
கமிஷனராக இருந்த குரேஷே என்பவர் அந்த ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தினார்.
ஊர்வலத்தினர் தடை மீறிச் செல்ல முயற்சி செய்தபோது உடனடியாக தடியடி நிகழ்த்த
உத்தரவிட்டார். பலர் சிதறி ஓடினர். சிலர் காயம் பட்டு விழுந்தனர். இறுதியில், ராஜன்,
எம்.சுப்பிரமணியன், அம்பிகா சுந்தரமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்
அனைவருக்கும் ஐந்து மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலை அடைந்த சில
நாட்களிலேயே ராஜனும் அவருடைய நண்பர்களும் மீண்டும் விடுதலைப்போராட்ட
நடவடிக்கைகளில் இறங்கினர். காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்ற அவ்வழக்கில்
ராஜனுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறை, போராட்டம் என மாறிமாறி ராஜனுடைய
வாழ்க்கையின் திசை அமைந்துவிட்டது.
ராஜனைப்போலவே ராஜனுடைய நண்பரொருவர் மாஹே பகுதியில்
சுதந்திரப்போராட்ட நடவடிக்கைகளில் இறங்கி அடிக்கடி கைதாகி
விடுதலையாகிக்கொண்டிருந்தார். அவர் பெயர் முஷிக்கல் பத்மநாபன். காரைக்காலுக்கு
அவர் வந்தபோது அவரை எப்படியாவது கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று
முயற்சி செய்தது காவல்துறை. எப்படியோ அச்செய்தியை அறிந்துகொண்ட ராஜன் தம்
வீட்டுக்கு அருகில் இருந்த வேட்டைக்காரத் தெருவில் இருந்த ஒரு தோப்பில் அவரைப்
பாதுகாப்பாக வைத்திருந்தார். இரவு
நன்றாகக் கவிந்த பிறகு, அவரை அழைத்துச் சென்று வயல்வரப்புகளையும் காடு மேடுகளையும்
கடந்து காவல் துறையினருக்குத் தெரியாமல் தமிழக எல்லையில் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பினார்.
15.08.1947 அன்று இந்தியாவுக்கு சுதந்திரம்
கிடைத்ததும், காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதற்கு அடுத்த
ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு முடிந்த கையோடு
கம்யூனிஸ்ட் கட்சியை அரசு தடை செய்தது. இந்திய அரசின் இந்த நடவடிக்கையைத் தனக்கு
சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த பிரெஞ்சிந்திய அரசு காவல்துறையினர் வழியாக அரசை எதிர்த்துக் குரல்
கொடுப்பவர்கள் அனைவரையும் தாக்கியது. ராஜனும் அவருடைய பல நண்பர்களும் தடியடிக்கு
இரையானார்கள். மாதக்கணக்கில் அந்தக் கொடுமை முடிவே இல்லாது தொடர்ந்தது. கொடுமையின்
உச்சமாக, அறுவடைக்குத் தயாராக இருந்த ராஜனுக்குச் சொந்தமான வயலில் புகுந்து
விளைச்சலையெல்லாம் அறுவடை செய்து அவர்களே எடுத்துச் சென்றனர். காந்தியடிகள் வழியாக
அகிம்சைக்கருத்துகளே இளமைக்காலம் முதல் ராஜனின் நெஞ்சில் பதிந்திருந்ததால்,
எதிர்த்தாக்குதலில் ஈடுபடாமல் அமைதி காத்தார் ராஜன்.
அப்போது தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில்
முன்னணித் தலைவராக இருந்த ஏ.எம்.கோபு தம் தோழர்கள் சிலரோடு காரைக்காலுக்கு
வந்தார். மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவர்கள் அனைவருக்கும் தங்கவும்
சாப்பிடவும் தேவையான ஏற்பாடுகளை ராஜன் செய்துகொடுத்தார். சில நாட்கள் அங்கேயே
அவர்கள் தங்கியிருந்தனர். ஒவ்வொரு மாதமும் ரயில்வே ஊழியர்களின் சம்பள நாளன்று,
தண்டவாளத்திலேயே தள்ளிக்கொண்டு ஓடும் டிராலியில் சம்பளப்பணத்தைக் கொண்டு செல்வது
வழக்கம். தக்க நேரத்தில் அவர்களைத் தாக்கி அந்தப் பணத்தைப் பறித்துக்கொண்டு செல்ல
கோபு திட்டமிட்டிருந்தார். ஆனால் ராஜனுக்கோ, அத்திட்டத்தைப்பற்றி எதுவும்
தெரியாது. கோபு குழுவினர் திட்டமிட்டபடி டிராலி வரும் சமயத்துக்காகக் காத்திருந்து
வெடிகுண்டு வீசி பணப்பைகளைப் பறித்துக்கொண்டு ஓடி தலைமறைவாகிவிட்டனர். தகவல்
கிடைத்து வந்த காவல்துறையினர் அடைக்கலம் கொடுத்த ராஜனைக் கைது செய்து வழக்கு பதிவு
செய்து சிறையில் அடைத்தது.
அவர் சிறையில் இருந்த காலத்தில் அவருடைய குடும்பத்தை
வறுமை சூழ்ந்தது. குடும்பச்செலவுக்குப் பணமில்லாமல் குழந்தைகளும் பெரியவர்களும்
பட்டினி கிடந்தனர். பால் இல்லாமல் அவருடைய இரண்டாவது மகன் இறந்தான்.
சிறைக்கூடத்திலிருந்து பாதுகாப்புக் காவலர்களுடன் வந்த ராஜன் தன் குழந்தைக்குச்
செய்யவேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்துவிட்டு மீண்டும் சிறைக்குச் சென்றார்.
குடும்பச் செலவுக்காக, வடக்கு வீதியில் அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்த
வீட்டை விற்கவேண்டிய சூழல் வந்தது. கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் ஒரு
கூரைவீட்டைக் கட்டிக்கொண்டு அவருடைய குடும்பம் குடியேறியது. ராஜனின் துணைவியார்
குடும்பச்சுமைகள் அனைத்தையும் தன் சுமையெனக் கருதிச் சுமந்து குழந்தைகளைக்
காப்பாற்றினார்.
ஏழாண்டு காலமாக நீடித்த பிரெஞ்சிந்திய
விடுதலைப்போராட்டத்தால் ராஜன் பலமுறை கைதுசெய்யப்பட்டு இரண்டு வாரம், நான்கு வாரம்
என சிறையில் அடைக்கப்பட்டார். ஆயினும் அவரைக் கைது செய்யும் ஒவ்வொரு முறையும்
காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதியும்போது சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர்
என்று குறிப்பிடாமல் திருட்டு, கொள்ளை, கொலைமுயற்சி, பயங்கரமான ஆயுதங்களைப்
பயன்படுத்துதல் போன்ற குற்றங்களைச் சுமத்தி
கைது செய்து சிறுமைப்படுத்தினர். சிறைக்கொடுமையைவிட இந்தப் பொய்யான
குற்றச்சாட்டுகள் அவரை வேதனையில் ஆழ்த்தின.
ஒருமுறை பிரெஞ்சிந்தியப் பகுதியின் ஆட்சி நிர்வாகத்தை
இந்தியாவும் பிரான்சும் சரிபாதியாக நிர்வகிக்கலாம் என்று காரைக்கால் மேயராகப் பதவி
வகித்த பக்கிரிசாமிப்பிள்ளை முன்மொழிந்தார். எனினும் அனைத்து உறுப்பினர்களும்
முழுச்சுதந்திரம் ஒன்றையே முன்வைத்ததால் அவருடைய ஆலோசனை எடுபடவில்லை. இறுதியாக 30.10.1954
அன்று காரைக்கால் நிர்வாகியாக இருந்த புட்சினி என்பவர் பிரெஞ்சு ஆதிகத்தை
காரைக்கால் பகுதியிலிருந்து விலக்கிக்கொண்டார். 01.11.1954 அன்று காரைக்கால்
சுதந்திரம் அடைந்து இந்தியாவுடன் இணைந்தது.
பிரெஞ்சு இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்கால் வட்டாரச்
செயலாலராக சிறப்பாகப் பணியாற்றினார் ராஜன். காரைக்காலைச் சேர்ந்த விவசாயிகள்
சங்கத்திலும், தொழிற்சங்கத்திலும் இணைந்து தொண்டாற்றிய ராஜனுக்கு பொதுமக்களிடையில்
நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது. காரைக்கால் நகரத்தைத் தூய்மை செய்யும்
தூய்மைப்பணியாளர்களின் நலன் கருதி ராஜன் ‘நகரசுத்தித் தொழிலாளர் சங்கத்தை
அமைத்தார். சுருட்டு புகையிலை தொழிலாளர் சங்கத்தை ஏற்படுத்தி, அவர்கள் மீது
விதிக்கப்பட்ட வரிச்சுமையைக் குறைப்பதற்காகக் குரல் கொடுத்தார். 1968 முதல் 1977
வரை தொடர்ந்து பத்தாண்டுகள் காரைக்கால் நகரசபை உறுப்பினராகப் பொறுப்பேற்று மக்கள்
பணியாற்றினார். முதுமையின் காரணமாக உடல் நலிவுற்று 04.11.1994 அன்று மறைந்தார்.
ராஜனின் அரசியல் ஈடுபாடும்
அக்கறையும் உண்மையானவை. அவருடைய சிந்தனைகளிலும் தொண்டுகளிலும்
மனிதாபிமானம் நிறைந்திருந்தது. அவருடைய அரசியல் செயல்பாடுகள் காங்கிரஸில் தொடங்கி
பொதுவுடைமைக்கட்சியில் முடிவடைந்திருந்தாலும், மக்கள் நலம் மீது அவர் கொண்ட
அக்கறையே அனைத்துக்குமான விசையாக இருந்தது என்று சுருக்கமாகக் கூறலாம்.
காந்தியடிகள் வழியாக ராஜன் அந்த விசையைப் பெற்றுக்கொண்டார். வாழ்வின் இறுதிக்கணம்
வரை அந்த விசை ஒரு வைரத்தைப்போல அவருடைய உள்ளத்தில் சுடர்விட்டபடி இருந்தது. அவர்
வாழ்ந்த விதமே அதற்குச் சான்று.
என்.ஜி.ராஜன்
12.08.1924 அன்று நாகப்பட்டினத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் காரைக்காலைச் சேர்ந்த
நடேசப்பிள்ளை. தாயார் பெயர் செளந்தரவல்லி. முருகபக்தி காரணமாக பெற்றோர் அவருக்கு வடிவேல்
என்று பெயர் சூட்டியிருந்தாலும் அவருடைய தாய்வழி உறவினர் சூட்டிய கோவிந்தராஜன் என்னும்
பெயரே நிலைத்தது. பிற்காலத்தில் அவரை நண்பர்கள் அனைவரும் என்.ஜி.ராஜன் என்றே அழைக்கத்
தொடங்கியதும், அப்பெயரே அவருடைய இறுதிக்காலம் வரை நீடித்தது. 04.11.1994 அன்று மறைந்தார்.
அவருடைய மூத்த மகன் இளங்கோவனும் முனைவர் அ.உசேன் என்பவரும் இணைந்து ‘என்.ஜி.ராஜன் அவர்களின்
எழுச்சிமிகு வாழ்க்கைச்சரிதம்’ என்னும் நூலை அவருடைய நூற்றாண்டு நினைவு வெளியீடாக எழுதி
2024இல் வெளியிட்டனர்.
(சர்வோதயம் மலர்கிறது – ஜூன் 2025)