ரெளலட் சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு காந்தியடிகள் தஞ்சாவூருக்கு 24.03.1919 அன்று வந்தார். ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்துக்குத் திரண்டு வந்து காந்தியடிகளை
வரவேற்றனர். தஞ்சாவூரில் புகழ்பெற்ற வழக்கறிஞரும் ‘தமிழ் வரலாறு’ என்னும் புத்தகத்தை எழுதியவருமான கே.எஸ்.சீனிவாசன் பிள்ளை காந்தியடிகளுக்கு மாலை அணிவித்து
ஊர்வலமாக தம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். தமிழகப்பகுதிகளில் பயணம் செய்யும்போது தமிழில் கையெழுத்திடுவதை வழக்கமாகக் கொண்ட காந்தியடிகள் பெரிய கோவிலுக்குச் சென்ற தருணத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் தமிழில் கையெழுத்திட்டார். பதிவேட்டுக்கு அருகில் அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேனா வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் ஒவ்வொருவரும் சுதேசியமயமாக இருக்கும் நாணத்தட்டையால் மட்டுமே எழுதவேண்டுமென்றும் ஒவ்வொரு செயலிலும் சுதேசியத்தைக் கடைபிடிக்கவேண்டியது மிகமிக முக்கியமென்றும் ஆலய தர்மகர்த்தாக்களிடம் தெரிவித்தார்.