ஆண்டன் செகாவ் என்னும் ரஷ்ய எழுத்தாளரின் புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்று ‘பந்தயம்’. மிகவும் சிரமமானது மரண தண்டனையா அல்லது ஆயுள் தண்டனையா என்பதையொட்டி இரு நண்பர்களிடையே மிகவும் சாதாரணமாக தொடங்குகிற உரையாடல் இறுதியில் பந்தயத்தில் முடிகிறது. ஆயுள் தண்டனை அப்படியொன்றும் சிரமமானதல்ல என்று உரைக்கும் நண்பன் தனியறையில் குறிப்பிட்ட ஆண்டு காலம் அடைபட்டிருந்து அதை நிரூபிக்கவேண்டும் என்பதுதான் அந்தப் பந்தயம்.. பந்தயக்காலம் முழுதும் அவன் அவ்விதமாக தனியறையிலேயே கழித்துவிட்டால் மிகப்பெரும் தொகையை அவனுக்குத் தருவதாக பந்தயம் கட்டுகிறான் மற்ற நண்பன்.