தொண்ணூறுகளின் பிற்பகுதியில் சு.வேணுகோபால் எழுதத் தொடங்கியபோது, தமிழ்ச்சிறுகதைகள் ஒரு குறிப்பிட்ட உயரத்தைத் தொட்டுவிட்டிருந்தது. அவற்றின் செழுமையும் வளமும் என்றென்றும் போற்றக்கூடிய தன்மையுடன் இருந்தன. சிறுகதைகள் புதிய தளங்களைக் கடந்து, புதிய எல்லைகளைத் தொட்டிருந்தன. குறிப்பிடத்தக்க ஆளுமைகள் உருவாகி நிலைபெற்றிருந்தார்கள். அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற சொல்லாடல்கள் உருவாக்கிய நட்பற்ற சூழலைக் கடந்து, சீரான இடைவெளிகளில் மிகச்சிறந்த சிறுகதைகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. கரிய ஏளனம் படிந்த குறுநகைகள் தோன்றித்தோன்றி நிராசைக்குள்ளாக்கி வந்த ஒருவித இறுக்கமான சூழலில், மன உறுதியும் தீராத வேட்கையும் கொண்டவர்கள் மட்டுமே படைப்புகளில் தம்மை இடைவிடாமல் வெளிப்படுத்தி வந்தார்கள்.