சிவராம காரந்த்தின் “சோமனின் உடுக்கை”
முப்பதுகளில் எழுதப்பட்ட ஒரு
நாவல் இன்றளவும் புதுப்புது வாசகர்களை ஈர்த்தபடி நெருக்கமாக இருப்பது மிகப்பெரிய
அதிசயம். தன் உள்ளடக்கத்தாலும் மொழிப் பயன்பாட்டாலும் பல படைப்புகள் காலத்தால்
உதிர்ந்து போய்விடுகின்றன. மிகக் குறைவான படைப்புகள் மட்டுமே காலத்தைத் தாண்டி
நிற்கும் வலிமை உள்ளவையாக உள்ளன. தமிழில் பாரதியார் மற்றும் புதுமைப்பித்தன்
படைப்புகள் அத்தகையவை. மலையாளத்தில் தகழி, பஷீர் படைப்புகளும்
அப்படிப்பட்டவை. கன்னடத்தில் சிவராம காரந்த், குவெம்பு, மாஸ்தி போன்றவர்களின்
படைப்புகளையும் அவ்வரிசையில் வைக்கலாம். சிவராம காரந்த்தின் “பாட்டியின் நினைவுகள்”, “அழிந்த பிறகு” ஆகிய இரண்டு நாவல்கள் மட்டுமே தமிழ் வாசகர்களுக்கு நேற்றுவரை படிக்கக்
கிடைத்தன. மூன்றாவதாக இப்போது “சோமனின் உடுக்கை” வந்திருக்கிறது.

