கோவில்பட்டியில் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக இறந்துவிடுகிறார். நடுவயதில் இறந்துவிட்ட அவருக்கு மூன்று பெண்குழந்தைகள், ஒரு ஆண்குழந்தை என நான்கு பிள்ளைகள். காந்தியடிகளின் மறைவுதினத்தின் பிறந்ததால், ஏதோ ஒரு விதத்தில் அவரை நினைவூட்டும் வகையில் இருக்கவேண்டும் என நினைத்து பாரததேவி என போலீஸ் அப்பாவால் பெயர்சூட்டப்பட்ட பெண்குழந்தையும் இவர்களில் ஒருவர். பிழைக்க வழியறியாத அக்குழந்தைகளின் தாய் தன் சொந்த ஊரான மீனாட்சிபுரத்துக்கு வந்துவிடுகிறார். அல்லும்பகலும் வயல்காட்டில் வேலை செய்து பிள்ளைகளைக் காப்பாற்றுகிறார். அம்மாவுக்குத் துணையாக பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்த நேரம் போக மற்ற நேரங்களில் மாடு மேய்க்கச் செல்கிறார்கள். புல்லறுத்துக்கொண்டு வருகிறார்கள். விறகு சேகரித்து எடுத்துவருகிறார்கள். காட்டுவழி நெடுக நின்றிருக்கும் மரம், செடி, கொடிகளில் பார்க்கும் காய்களையும் பழங்களையும் பறித்துத் தின்கிறார்கள்.