Home

Sunday 25 February 2024

சுஜாதா - நம்பமுடியாத விசித்திரம்

 

சுஜாதா என்கிற பெயரை நான் முதன்முதலாக பத்தாம் வகுப்பு முடித்த விடுமுறையில்தான் அறிந்துகொண்டேன். நாற்பத்தைந்து-நாற்பத்தாறு ஆண்டுகளுக்குமுன்பு என்பதெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தால்தான் தெரிகிறது. ஆனால் எல்லாமே நேற்று நடந்ததுபோல இருக்கிறது.

அப்போது எங்கள் அப்பாவுடைய தையற்கடையில் உதவியாளராக மாதவன் அண்ணன் என்பவர் இருந்தார். என்னுடைய புத்தகம் படிக்கும் பழக்கத்தைத் தெரிந்துகொண்டு தன்னுடைய வீட்டில் தன் அண்ணனுக்கும் அப்படிப்பட்ட பழக்கம் உண்டு என்று சொன்னார். ஏராளமான அளவில் புத்தகங்கள் அவரிடம் இருப்பதாகவும் உற்சாகமாகச் சொன்னார். உடனே அந்தப் புத்தகங்களைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் எனக்குள் பீறிட்டெழுந்ததால்

படிப்பதற்கு எனக்குத் தருவாரா? என்று கேட்டேன். அவருடைய அண்ணன் கடலூரில் தங்கி ஏதோ ஒரு அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக வேலை பார்த்துவருகிறார் என்றும் வாரவிடுமுறையான ஞாயிறு அன்றுதான் வீட்டுக்கு வருவார் என்றும் மாதவன் அண்ணன் சொன்னார். அதனால் ஞாயிறு வரை நான் காத்திருந்தேன்.

அவர்கள் வீடு வளவனூரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு தள்ளியிருந்த நறையூரில் இருந்தது. ஞாயிறு காலை எழுந்ததுமே என் வேலைகளை வேகவேகமாக முடித்துக்கொண்டு இருபுறங்களிலும் கருப்பந்தோப்புகளும் நெல்வயல்களும் தென்னைமரங்களும் செறிவாக அடர்ந்திருக்க, இடையில் நீண்ட மண்சாலைவழியாக நடந்து சென்றேன். நான் சென்ற நேரத்தில் வீட்டுத் திண்ணையில் மாதவன் அண்ணனும் அவருடைய அண்ணனும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அறிமுகம் முடிந்ததும் நேரிடையாக புத்தகங்கள்பற்றிய பேச்சைத் தொடங்கினேன். என்னை மேலும் கீழுமாகப் பார்த்தவருக்கு அவ்வளவாக நம்பிக்கை வரவில்லை. என்னடா படிச்சிருக்கே? என்று ஏதோ நேர்காணலில் கேட்பதுபோலக் கேட்டார். பத்தாவது என்றேன். என் பதிலைக் கேட்டு அந்த அண்ணன் சிரித்தார். அத கேக்கலடா, புத்தகம் படிச்சிருக்கேன்னு சொன்னாயே, யார்யாரயெல்லாம் படிச்சிருக்கேன்னு கேட்டேன் என்றார். தமிழ்வாணன், கல்கி, சாண்டில்யன் எழுதனதெல்லாம் படிச்சதுண்டு என்றேன் அத்துடன் நேர்காணல் முடிந்தது.

திண்ணையிலிருந்து அந்த அண்ணன் எழுந்துவந்து என் தோளைத் தட்டி அழுத்திக்கொண்டார். வா போவலாம் என்று வேட்டியை சரிப்படுத்திக்கொண்டபடி தன்னுடைய அறைக்குள் என்னை அழைத்துச் சென்றார். ஒரு பெரிய புதையலைப் பார்க்கப் போகிற பரவசத்தோடு அவரைப் பின்தொடர்ந்து சென்றேன். தன்னுடைய படுக்கைக்கு அருகே சுவரிலேயே வடிவமைக்கப்பட்ட நிலைப்பேழையின் கதவைத் திறந்தார். அதற்குள் ஆறு அடுக்குகள். அனைத்தும் புத்தகங்களால் நிரம்பியிருந்தன. ஆசைஆசையாக அவற்றின்முன் நின்று ஒருமுறை விரல்களால் தடவிப் பார்த்தேன். ம், பாரு, எது வேணும்னாலும் எடுத்துக்கோ என்றார். அடுக்கில் தெரிந்த முதல் புத்தகத்தைக் கவனமாக எடுத்தேன். நைலான் கயிறு என்கிற தலைப்பு படித்த கணத்திலேயே புதுமையாகவும் மனத்தைத் தொடுவதாகவும் இருந்தது. எழுதியவரின் பெயரைப் பார்த்தேன். சுஜாதா என்று போட்டிருந்தது. வார இதழில் வந்த தொடர்கதைத் தாள்களை வெட்டித் தொகுத்து உருவாக்கப்பட்ட புத்தகம் அது. இந்தப் பெண் எழுத்தாளர் எழுதனத எடுத்துக்கறேன் என்றேன். நான் அப்படிச் சொல்வேன் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. சிரித்தபடி என் தோளை மறுபடியும் தட்டினார். பெண் எழுத்தாளர் இல்லடா, அவர் ஆண் எழுத்தாளர்தான். அந்தப் பெயர்ல எழுதறாரு. அவ்வளவுதான் என்றார். எனக்கு கூச்சமாக இருந்தது. மறுபடியும் நைலான் கயிறைக் காட்டி இத எடுத்துச் செல்லட்டுமா? என்று கேட்டேன். சரி என்று சம்மதித்தார்.

புத்தகத்தோடு மண்சாலையில் திரும்பி நடந்தபோது அபூர்வமான ஒரு பரிசை யாரோ ஒருவர் எனக்கு அளித்ததைப்போல மகிழ்ச்சியாக இருந்தது. என் ஆவலைக் கட்டுப்படுத்த இயலாமல் வழியிலேயே புத்தகத்தைப் பிரித்து படித்தபடி நடக்கத் தொடங்கினேன். அதன் சுவாரஸ்யம் என்னை நடக்கவிடவில்லை. ஒரு மரத்தடியில் ஒதுங்கி நிழலில் உட்கார்ந்து படிக்கத் தொடங்கினேன். அடுத்த சில மணிநேரங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். பசியோ தாகமோ எதையுமே உணரவில்லை. அந்த எழுத்தின் புதுமை ஒருவித மயக்கத்தைக் கொடுத்தது. பக்கத்திலேயே உட்கார்ந்து யாரோ கதையை விவரிப்பதுபோல இருந்தது. படித்து முடிக்காமல் எழுந்திருக்கக்கூடாது என்று ஏதோ ஒரு வேகத்துக்குக் கட்டுப்பட்டவன்போல நிமிர்ந்துகூட பார்க்காமல் ஒரே வேகத்தில் படித்துமுடித்தேன். சூரியன் உச்சியில் இருந்தது. வீட்டில் அம்மா அப்பா தேடுவார்களோ என்று அப்போதுதான் முதன்முதலாகத் தோன்றியது. நடக்கத் தொடங்கினேன். மறுகணமே படித்து முடித்த புத்தகத்தோடு வீட்டுக்குச் செல்வதற்கு மாறாக, இதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு இன்னொரு புத்தகத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் செல்லலாம் என்றொரு திட்டமெழுந்தது. என் கால்கள் தாமாக மாதவன் அண்ணன் வீட்டைநோக்கி திரும்பி நடந்தன.

அண்ணன் அப்போதும் திண்ணையில்தான் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் என்ன என்ன என்று பதறி ஓடிவந்தார். வந்த நோக்கத்தைப்பற்றி மெதுவாகச் சொன்னேன். அவரால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. என்ன பையன்டா நீ. அவன் சொல்றமாதிரி சரியான புத்தகப் பைத்தியம்தான் நீ என்று சிரித்துக்கொண்டார். நைலான் கயிறை வாங்கிக்கொண்டு எதுடா வேணும்? என்றபடி அடுக்குப்பேழையை மறுபடியும் திறந்தார். என் கண்ணுக்கு அனிதா இளம்மனைவி தெரிந்தது. இத எடுத்துக்கறேன் என்றேன். அண்ணன் தலையசைத்தபடி அதை எடுத்துக்கொடுத்தார்.

மறுபடியும் ஏதாவது ஒரு மரத்தடியில் படிக்க உட்கார்ந்து விடுவேனோ என்று அச்சம்கொண்ட மாதவன் அண்ணன் தன்னுடைய மிதிவண்டியிலேயே என்னை உட்காரவைத்து ஓட்டிவந்து வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார். அன்று இரவிலேயே அதையும் படித்துமுடித்துவிட்டேன்.

மறுநாள் இரண்டு புத்தகங்களைப்பற்றியும் என் நண்பன் பழனியிடம் சொன்னேன். ஒரு கண்டுபிடிப்பைப்போல நான் அந்தப் புத்தகங்களைப்பற்றி சொன்னபோது அவன் அவற்றை எற்கனவே படித்துவிட்டதாகச் சொன்னான். அந்தப் பதில் எனக்கு சற்றே ஏமாற்றமாக இருந்தாலும் கதைகளின் நயமான பகுதிகளை ஒருவருக்கொருவர் மாற்றிமாற்றிச் சொல்லி மகிழ்ச்சியடைந்தோம். அன்று முதல் சுஜாதாவின் எழுத்துகளைத் தேடித்தேடிப் படிக்கிறவர்களாக நாங்கள் இருவருமே மாறினோம். எந்தக் கதையை எங்கே படித்தாலும் உடனே என்னிடம் வந்து சொல்லிவிடுவான் அவன். அதேபோல நானும் சொல்லிவிடுவேன். விறுவிறுப்பான ஓர் ஓட்டப்பந்தயத்தைப்போல அவருடைய கதைகள் வேகவேகமாக நடந்துமுடிகின்றன என்று நினைத்துக்கொள்வோம். அப்போது நாங்கள் படித்த வேறு எவருடைய படைப்பிலும் இப்படிப்பட்ட வேகம் தெரிந்ததில்லை. அன்று முதல் எங்கள் உரையாடலில் சுஜாதாவின் எழுத்துகளும் இடம்பெறத் தொடங்கின. ஒவ்வொரு வாக்கியத்தையும் வசீகரமாக அமைக்கிற அவருடைய நுட்பத்தின்மீதிருந்த தீராத ஒரு கவர்ச்சி மிகவும் பிடித்திருந்தது. அனிதா இளம் மனைவி, கனவுத்தொழிற்சாலை, கரையெல்லாம் செண்பகப்பூ, என் இனிய இயந்திரா, இருள்வரும் நேரம், பிரிவோம் சந்திப்போம், ரத்தம் ஒரே நிறம், மீண்டும் ஜினோ, தூண்டில் கதைகள், மத்யமர் கதைகள், சற்றே நீளமான கதைகள், ஸ்ரீரங்கத்துக்கதைகள் என கணக்கற்று நீளும் அவருடைய எல்லாப் படைப்புகளிலும் அந்த நுட்பமும் வசீகரமும் காணப்பட்டன. தும்பைச் செடிகளiல் உட்கார்ந்திருக்கும் வண்ணத்துப் பூச்சிகளைப்போல.

-2-

ஒரு நாள் மாலையில் சுஜாதா எழுதிய சசி காத்திருக்கிறாள் என்னும் சிறுகதையை எங்கோ வெளியூருக்குப் போயிருந்த சமயத்தில் படித்ததாகச் சொன்னான் பழனி. கதையை அவன் சொல்லச்சொல்ல நான் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன். கதையில் நிகழக்கூடிய அந்தத் திருப்பம் மிகப்பெரிய மனநிம்மதியை வழங்கியதை உணர்ந்தேன். என்ன ஒரு திருப்பம் என்ன ஒரு திருப்பம் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தான் பழனி. சில ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் நூலகத்துக்கு வந்த ஒரு சிறுகதைத் தொகுப்பில் அக்கதை இடம்பெற்றிருந்தது. நான் அப்போதுதான் படித்தேன்.

தொடக்கத்திலிருந்து இறுதிப்புள்ளிவரை இடைவிடாத ஒரு வேகத்தைக் கொண்ட எழுத்து என்னை காந்தம்போல ஈர்த்தது. அந்தக் கதையைப் படித்துவிட்டதாக உடனே பழனியைச் சந்தித்துச் சொன்னேன். “ஏதோ உச்சியிலேருந்து அருவி கொட்டறமாதிரி எவ்வளவு வேகமா நகருது பாரு கதை என்று சொல்லிச்சொல்லி ஆச்சரியப்பட்டேன்.

அந்தத் திருப்பத்தை சுஜாதா தனது சிறுகதையில் எப்படி சாத்தியப்படுத்துகிறார் என்று நாங்களாகவே விவாதித்தோம். ஏதோ இயற்பியல் வேதியியல் பரிசோதனையைப்போல இப்படி கதைகளை எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்வது அந்தக் காலத்தில் எங்களுடைய பழக்கமாக இருந்தது. எதையோ கண்டுபிடித்துவிடுகிற தீவிரம்தான் எங்களை அப்படிச் செயல்படத் தூண்டியது. கதை வாசிப்பைவிட இப்படிப்பட்ட கலந்துரையாடல்கள் எங்களுக்குக் கூடுதலான சுவாரசியத்தை வழங்குவதாக இருந்தன.

வெற்றிகரமான திருப்பம் கொண்ட கதைகளை வெற்றிகரமான கதைகள் என்று நாங்கள் மனமார நம்பிக்கொண்டிருந்த எங்கள் இளமை நாட்களில் எங்கள் எண்ணங்களைக் கொள்ளைகொண்ட எழுத்தாளராக மாறினார் சுஜாதா. எழுத்து சார்ந்த என் நம்பிக்கைகள் மெல்லமெல்ல மாறுதலடையத் தொடங்கிய பிறகுகூட நானும் பழனியும் சுஜாதாவின் படைப்புகளைப் படிப்பதை நிறுத்தவில்லை. மொழியையே ஒரு கயிறுபோல மாற்றி முறுக்கேற்றும் அவருடைய ஆற்றல் எங்களை வியப்புக்குள்ளாக்காத நாளே இல்லை. எப்படி இது அவருக்கு சாத்தியமாகுது? என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வோம். கதைகளாக இருந்தாலும் கட்டுரைகளாக இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்திப் படிப்பது எங்களுக்கு விருப்பமாகவே இருந்தது. அதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும் என்று அப்போது யோசித்ததில்லை. ஆனால் இப்போது யோசிக்கும்போது கிட்டத்தட்ட மூன்று காரணங்களை வரையறுத்துக்கொள்ளமுடிகிறது.

என்னவிதமான புதிய நுட்பத்தை இந்தக் கதையில் பயன்படுத்தியிருக்கிறார் என்று கண்டுபிடிக்கிற வேகம் எங்களுக்குள் இயல்பாகவே இருந்தது ஒரு காரணம்.

எங்கள் இளம் மனங்களை சவால்களை நோக்கிச் செலுத்துகிற வேகத்தை அவர் படைப்புகள் கொண்டிருந்தன என்பது இன்னொரு காரணம்.

வெவ்வேறு துறைகளைப்பற்றிய அறிமுகத்தை சிக்கலற்ற மொழியில் முன்வைக்கிற எளிமை மூன்றாவது காரணம்.

எல்லா வார இதழ்களிலும் தொடக்கக் காலத்திலிருந்தே அவருடைய படைப்புகள் வெளiவந்தன. ஏராளமான வாசகர்கள் அவருக்கிருந்தார்கள். வார இதழ்க்கதைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பு எல்லாக் காலத்திலும் உண்டு. மாற்ற முடியாத அந்த வடிவமைப்புக்குள் முடிந்த அளவுக்கு எல்லாப் புதுமைகளையும் வழங்குகிறவராக இருந்தார் சுஜாதா. காலத்துக்குக் காலம் அந்தப் புதுமைகளையும்

புதுப்பித்துக் கொள்கிறவராகவும் இருந்தார்.

எண்பதாம் ஆண்டில் தொலைபேசித் துறையில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் அஸ்வினி என்றொரு பத்திரிகையில் வெளிவந்திருந்த சுஜாதாவின் சிறுகதையைப் படித்தேன். அந்தக் கதையின் பெயர் நிஜத்தைத் தேடி. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அன்று மாலை அந்தப் பத்திரிகையை பழனியிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்தபடி சிறிது நேரத்துக்குள் படித்துமுடித்துவிட்டான் அவன். தொடுவானத்தைநோக்கி நகர்கிற மேகமண்டலத்தைப் பார்த்து பெருமூச்சுவிட்டபடி ஆம்பளைங்கள்ளாம் இப்படித்தான் இருக்கறோம் என்று வருத்தமாகச் சொன்னான். பிறகு மெதுவாக எல்லா ஆம்பளைங்களுக்கு உள்ளயும் கெட்டவனும் இருக்கான். நல்லவனும் இருக்கான். ரொம்ப பேரு மனசுல கெட்டவன் நல்லா கால அகலமா நீட்டிகிட்டு உடம்ப சாச்சிகிட்டு உக்காந்திருக்கான். ஏதோ மழைக்கு ஒன்டணவனப்பொல நல்லவன் ஓரமா ஒண்டிகிட்டிருக்கான். அதான் கொடும என்றான்.

ரொம்ப சரியா சொல்லிட்ட பழனி என்று அவன் கையைப் பற்றிக்கொண்டேன்.

ஆம்பளைங்களுக்கு ரொம்ப அகங்காரம்டா. தான் நெனைக்கறதுதான் நெஜமா இருக்கணும், தான் சொல்றதுதான் நெஜமா நடக்கணும். நேருக்குமாறா நடந்தாலும் தான் நெனச்சமாதிரி நடந்ததா பொய்சொல்லி அதயே நெஜமாக்கிடணும். கேவலமா இருக்குதில்ல? எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

ஒரு மோசமான அரசியல்வாதியப்போல நடந்துக்கறாங்க ஆம்பளைங்க.

அந்தக் கதை ஒரு கணவன் மனைவிக்கிடையே நடக்கும் ஒரு சம்பவத்தையொட்டியது. மனைவியின் முன்னால் தன்னை நிறுவிக்கொள்வதற்காக மனமறிந்து பொய் சொல்கிறான். அதைத்தான் எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

மனசாட்சியே இல்லாம எப்படிடா ஒருவனால பொய்சொல்லமுடியும்?

பொய்சொல்லணும்னு முடிவெடுத்த பிறகு மனசாட்சி எதுக்கு?

அன்று அதற்குமேல் எங்களால் எதையும் பேசிக்கொள்ள முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பாக பழைய பத்திரிகைகளையெல்லாம் மூட்டைகட்டி யாருக்காவது கொடுத்துவிடலாம் என்று அடுக்கிக்கொண்டிருந்தபோது இந்த அஸ்வினி இதழ் கண்ணில் பட்டது.

மண்ணின் நிறத்துக்கு மாறிப்போன தாள் வேகமாகத் தள்ளினாலேயே இற்று உதிர்ந்துவிடும்போல இருந்தது. சுஜாதாவின் நிஜத்தைத் தேடி சிறுகதையை மறுபடியும் படித்தேன். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகும் அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நல்லவன் கெட்டவன் விவகாரத்தையும் ஆழ்மனத்தில் தன்னைத்தானே நிறுவிக்கொள்ள விழைந்தபடி உறங்குகிற அகங்காரத்தையும் தள்ளி வைத்துவிட்டு அந்த மனைவியின் பாத்திரம் மேலெழுந்து வருவதை அப்போது என்னால் உணரமுடிந்தது. எவ்வளவு அழகான பாத்திரம்.

ஆண்மனத்தை வெகுநுட்பமாகப் புரிந்து வைத்திருப்பவளாகக் காணப்பட்டாள் அவள். இருவரில் யார் நிஜம் என்கிற கேள்வி கதையின் இறுதியில் மிதந்துவருவதாகத் தோன்றியது எனக்கு.

************************

அடுத்தமுறை ஊருக்குச் சென்றபோது இந்த விஷயத்தைப் பழனியிடம் சொன்னேன். அவன் மிகவும் சந்தோஷப்பட்டான். சுஜாதாகிட்டயே சொல்லுடா, அவர் ரொம்ப சந்தோஷப்படுவாருடா என்றான். அதயெல்லாம் தாண்டி அவர் எங்கயோ போயிட்டாருடா என்றேன்.

அப்படிச் சொல்லாதடா, ஒரு சின்னச் சந்தோஷமாவது அவருக்கு கண்டிப்பா கெடைக்கும் என்றான். பார்க்கலாம் என்று இழுத்தபடி புன்னகைத்து பேச்சின் திசையை மாற்றிவிட்டேன்.

அது திண்ணை இணைய இதழில் எனக்குப் பிடித்த கதைகள் என்றொரு தொடரை எழுதிக்கொண்டு வந்த நேரம். தொடர்ல சுஜாதா கதைக்கு இடமுண்டு இல்லயா? என்று சந்தேகமுடன் கேட்டான். கண்டிப்பா உண்டு, அவர் இல்லாமலா? எழுபதுகளின் எழுத்தாளரா அவரை முன்வைப்பதால எண்ணிக்கையில கொஞ்சம் பின்னால வரலாம் என்றபடி அவன் தோளைத் தட்டினேன்.

**

சுஜாதாவின் படைப்புகளைப் படிப்பது என்பது எனக்கும் பழனிக்கும் எப்போதும் ஏதோ ஒரு குறுக்கெழுத்துப் புதிர்ப்போட்டியின் விடைகளைக் கண்டுபிடிக்கிற உற்சாகத்தையும் சுவாரசியத்தையும் வழங்கும் விஷயமாகவே இருந்தது. எழுத்தை ஒரு விளையாட்டாகவே உருமாற்றிவிட்டார் அவர் என்று சொல்லிக்கொள்வோம். இக்கணத்தில் அதை நினைத்துப் பார்க்கும்போது இதுதான் சுஜாதாவின் மிகப்பெரிய பலம் என்று தோன்றுகிறது. வாசிப்பது என்பது எங்களுக்கு எப்படி ஓர் உற்சாகமான விளையாட்டாக இருந்ததோ, அதே அளவுக்கு உற்சாகம் தருகிற ஒரு செயலாக அவர் எழுதுவதை நினைத்தார் என்று தோன்றுகிறது. வேலைகளால் களைப்பு ஏற்படும்போது எழுத்தில் ஈடுபட்டு உற்சாகமடைவேன், எழுத்துவேலையில் களைப்பு உருவாகும்போது, வேலைகளில் ஈடுபட்டு உற்சாகமடைவேன். ஒன்றை மற்றொன்று நிரப்பிக்கொள்கிறது என்று ஒரு சந்திப்பின்போது சொன்ன சொற்கள் நினைவுக்கு வருகின்றன.

ஒருமுறை சுபமங்களா இதழில் சுஜாதாவின் நேர்காணல் வெளiவந்திருந்தது. அதில் எழுத்துமுயற்சியைப்பற்றிய ஒரு கேள்விக்கு அது ஒரு தொழில்நுட்பத்திறமை என்கிற வகையில் பதில் சொல்லியிருந்தார் சுஜாதா. அந்தப் பதிலை பழனியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என்னடா நம்ம சுஜாதா இப்படி சொல்லிட்டாரே என்று ஆதங்கத்தோடு பலமுறை உச்சுக்கொட்டிவிட்டான். எனக்கும் அந்தப் பதில் வருத்தம் தருவதாகத்தான் இருந்தது. ஆனால் அவருடைய நிலையில் அப்படிப்பட்ட ஒரு பதிலைத்தான் சொல்லமுடியும் என்று சொன்னேன்.

வெகுகாலத்துக்குப் பிறகு மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்துக்கு அவர் எழுதிய வசனங்களைப்பற்றிப் பேசியபோதும் இந்த நேர்காணலைத்தான் சாட்சிக்கு இழுத்துப் பேசிக்கொண்டோம். விஷயம் இவ்வளவுதான். திரைப்படத்தில் இடம்பெறும் இந்திரா என்னும் புனைபெயரில் கதை எழுதக்கூடிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் நடக்கக்கூடிய ஒரு பாராட்டுக்கூட்டத்தில் உரையாற்றும்போது எழுத்து ஒரு தொழில்நுட்பத்திறமை என்றுதான் உரையைத் தொடங்குகிறார். ஏற்கனவே சுஜாதாவின் மனத்தில் இருந்ததுதான் இப்படி ஓர் உரையாடலாக வெளிப்பட்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டோம். அன்றும் பழனி என்னடா நம்ம சுஜாதா இப்படி சொல்லிட்டாரு என்று சொல்லி வருத்தப்பட்டான்.

உண்மையோ பொய்யோ பழனி. அவர் அப்படி நெனச்சித்தான் சொல்லியிருப்பாருன்னு நாம நெனச்சிக்கலாமே. அதுல நமக்கு என்ன நஷ்டம்? எவ்வளவு பெரியவர் அவர். அவருடைய நம்பிக்கையபத்தி நாம ஏன் எடைபோடணும்? பழனி என்னுடைய தோளைத் தட்டினான்.

மன எழுச்சியபத்தி ஒண்ணும் தெரியாத ஆளில்ல அவர் பழனி. பிரபந்தங்கள் பற்றியும் பாசுரங்கள்பற்றியும் எவ்வளவோ சொல்லியிருக்காரு. நெறய எழுதியும் இருக்காரு. ஆழ்வார்கள் மனஎழுச்சி இல்லாமயா பாடியிருப்பாங்க? ஆழ்வார்கள் பாடன பாடல்கள மனப்பாடமாவும் நெகிழ்ச்சியாவும் சொல்ற ஒரு மனுஷர் மனஎழுச்சிமேல நம்பிக்கை இல்லாதவர்னு எப்படி சொல்லமுடியும்? மன எழுச்சிங்கறத திட்டவட்டமான அடிப்படைத்தகுதின்னு அவர் நெனைச்சிருக்கலாம்ன்னுதான் ஒரொரு சமயத்துல தோணுது.

அப்படின்னா தொழில்நுட்பத்திறமைதான் முக்கியம்னு ஏன் சொல்லணும்? பழனி மறுபடியும் பழைய கேள்வியில் வந்து நின்றான்.

அந்தக் கேள்விக்கான பதிலும் பிரபந்தத்துலயே இருக்கறமாதிரி தோணுது பழனி என்றேன். அப்போதுதான் அந்தப் பதிலை என் மனம் கண்டுபிடித்திருந்ததால் நானும் ஒருவித பரவசத்தில் இருந்தேன்.

எப்படி?

எல்லா ஆழ்வார்களும் ஒரே இறைவனைப்பற்றித்தான் பாடறாங்க. ஒரே விதமாத்தான் உருகறாங்க. அவுங்க பாடுகிற பாடல்களின் புறவடிவம்கூட ஏறத்தாழ எல்லாமே ஒன்னாதான் இருக்குது. அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம். கலிப்பா இப்படி. ஒரே வகையான வடிவ அமைப்புக்குள்ள, ஒரே விதமான இறைவனைப்பற்றிய பாடல்களுக்குள்ள, ஒரேவிதமான அனுபவத்தை முன்வைக்கிற பாடல்களுக்குள்ள ஒரு கவிஞர் எப்படி வித்தியாசம் காட்டமுடியும் சொல்லு? சொல்லுகிற முறையில ஒரு தனிப்பட்ட தொழில்நுட்பத்திறமை இருந்தால்தான் ஒரு கவிஞர் மற்ற கவிஞர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கமுடியும். நெருப்பென நின்ற நெடுமாலேன்னு ஒரு வரி பாடுவோமே ஞாபகமிருக்குதா? என்ன மாதிரியான வரி பார்த்தியா அது? சொல்லும்போதே உடம்பு சிலிர்க்குதில்லயா? என்ன மாதிரியான நெருப்பு அது? அகந்தையை அழிக்கிற நெருப்பு. ஆசையை அழிக்கிற நெருப்பு. வெறுப்பையும் காமத்தையும் அழிக்கிற நெருப்பு. எல்லாவற்றையும் அழிச்சி அகற்றிவிட்டு அணைச்சிக்கறவன்தானே நெடுமாலா இருக்கமுடியும். எல்லா சமயத்துலயும் இப்படி ஒரு சொல்ல உருவாக்கமுடியாது. மனசுக்குள்ள சொற்கள் கொந்தளiக்கும்போது இப்படி சட்டுனு பொங்கிவந்துடும். இத சொல்றதுக்கத்தான் தொழில்நுட்பத்திறமை வேணும். சுஜாதா சொல்றது இந்தத் தொழில்நுட்பத் திறமையைத்தான்னு தோணுது.

என் சொற்களை பழனி நம்பியதுபோலவும் இருந்தது. நம்பாததுபோலவும் இருந்தது. சிறிதுநேரம் கழித்து எனக்காக நீ வேணுமின்னே சொல்றமாதிரி இருக்குது. ஆனாலும் கேக்கறதுக்கு நல்லா இருக்குது என்று சிரித்துக்கொண்டு சொன்னான்.

காகிதச் சங்கிலி, கனவுத் தொழிற்சாலைன்னு அவர் எழுதனத ஒரு நிமிடம் நெனச்சப் பாரு. ஒரு தொழில்நுட்பத்திறமை அவர் மனசுக்குள்ள ஓடறதாலதான் அந்த வார்த்தைகளை அவரால் சட்டுனு சொல்லமுடியுது.

அதுதான் உண்மைன்னா அவரே இத இன்னும் வெளிப்படையா சொல்லியிருக்கலாமே.

அவரால சொல்லமுடியாது பழனி. காரணம் அவருக்கிருந்த அறிவியல் அந்தஸ்து. எல்லாவற்றையும் அறிவியல் செயல்பாடா பார்க்கற ஒருவர் கவிதை எழுதுகிற பித்துநிலையை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அவரைப் பொருத்தவரைக்கும் அது ஒரு திறமை. அவ்வளவுதான்.

பிறகு எந்தப் பேச்சுமில்லாமல் அஸ்தமனச் சூரியனைப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். சிறிதுநேர மௌனத்துக்குப் பிறகு அடங்கிய குரலில் நானேதான் சும்மா அப்படி சொல்லிப் பார்த்தேன் பழனி. அப்படி ஒரு நம்பிக்கை அவருக்கு இல்லாதது எனக்கும் வருத்தமாத்தான் இருக்குது என்றேன்.

**

திருப்பங்கள் உள்ள சிறுகதைகளை ஏராளமான எண்ணிக்கையில் எழுதியவர் சுஜாதா. அந்தத் திருப்பங்களை வெறுமனே திடுக்கிட வைக்கிற அல்லது சுவாரஸ்யத்துக்காக இட்டுக்கட்டுகிற திருப்பங்கள் என்று சொல்லமுடியாது. கதையோடு அழகாகப் பொருந்திப் போகிற வரிகளாகவே அவை அமையும். மொத்த கதையிலும் நம் கவனத்திலிருந்து பிசகியிருந்த ஒரு புள்ளiயின்மீது சட்டென்று அத்திருப்பத்தில்தான் வெளiச்சம் விழும். ஏராளமான வாசகர்களை ஈர்க்கிற எடுத்தியம்புமுறை இது என்பதால் இவ்வகையான எழுத்தாக்கங்கள்மீது சுஜாதாவும் தீராத ஈர்ப்பு கொண்டவராகவே இருந்தார். ஒரு சிறுகதைக்கான சட்டகத்தை கச்சிதமாக உருவாக்கி, அந்தச் சட்டகத்துக்குள்ளேயே அச்சிறுகதையை முடித்துவிடுகிற எண்ணம்தான் அவரிடம் இருந்திருக்கவேண்டும். அபூர்வமான மிகச்சில தருணங்களில்மட்டுமே அந்தச் சட்டகத்தைவிட்டு விடுதலையாகி சிறுகதைகள் வானைநோக்கி எம்பித் தாவுகின்றன

எனக்கும் பழனிக்கும் மிகவும் பிடித்த சிறுகதை தந்தை மகன் உறவை மையமாகக் கொண்ட ஒன்று. தந்தை மிகவும் நேர்மையான மனிதர். வீட்டிலும் வெளியுலக வாழ்க்கையிலும் மிக நேர்மையானமனிதர் என்று பெயரெடுத்தவர். அலுவலகத்தில் அவர் நேர்மையின் சின்னமாகவே கருதப்படுகிறவர். பட்டப்படிப்பு படித்த மகனுக்கு சரியான வேலை அமையவில்லை. எழுதுகிற எல்லாத் தேர்வுகளiலும் தோல்வியடைகிறான். மகனுடைய தோல்வி தந்தையின் மனத்தை கலங்கவைக்கிறது. ஒரு நல்ல எதிர்காலம் அவனுக்கு எப்படியாவது அமையாதா என்கிற கவலை அவரை நலிவடையவைக்கிறது. பிள்ளைப்பாசம் அவரை தன்னுடைய நேர்வழியிலிருந்து பிறழ வைக்கிறது. மாதிரி வினாத்தாள் என்கிற பெயரில் ஒரு போட்டித் தேர்வுக்கான உண்மையான வினாத்தாளையே அவனுக்காக ஏற்பாடு செய்து தருகிறார். தேர்வுநாள் அன்று மாலை மகனைச் சந்திக்கிற தந்தைக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. தேர்வெழுதாமலேயே வந்துவிட்டதாகச் சொல்கிறான் மகன். மாதிரி வினாத்தாளாக கொடுக்கப்பட்ட வினாத்தாள்தான் உண்மையான வினாத்தாள் என்று அறிந்தபிறகு தன் மனம் அந்தத் தேர்வை எழுதுவதையே ஏற்கவில்லை என்று சொல்கிறான்.

நேர்மையாக வாழ்வது என்பதை ஒரு பெருமையாகக் கருதுகிற தந்தையால் தன் மகனிடம் இயல்பாகவே ஊற்றெனப் பெருகி நிறைந்திருக்கிற நேர்மையைக் கண்டுணர்ந்துகொள்ள முடியவில்லை என்பது மகத்தான சோகம். மகனிடம் நிறைந்துள்ள பழக்கங்களையெல்லாம் துல்லியமாகக் கண்டுபிடித்துப் பட்டியலிடுகிற தந்தை அவனிடம் படிந்துள்ள நேர்மையைமட்டும் கண்டறியாதவராக இருக்கிறார். அவர் சார்பில் எந்த ஒரு முயற்சியும் இல்லாமலேயே அவருடைய நேர்மை அவனுடைய நெஞ்சில் ஒளiவிடும் விளக்காக உள்ளது. சமரசம் செய்துகொள்கிற நேர்மை, சமரசம் செய்யாத நேர்மை என நேர்மையின் இரண்டு பக்கங்களையும் நமக்கு அடையாளம்காட்டுகிறார் சுஜாதா. நேர்மை என்பது என்ன எனத் திரண்டெழுகிற கேள்வி சிறுகதையை விண்ணைநோக்கிச் செலுத்துகிறது. எந்த நேர்மை மேலானது? வெற்றியில் திளைக்கிறவரின் நேர்மையா? வெற்றியையே நிராகரித்துவிட்டு நிற்கிற நேர்மையா? நிராயுதபாணியாக நிற்பவனுடைய நேர்மைக்கு இந்த உலகில் கிடைக்கிற விலை என்ன? விலை உண்டு என்றால் அவனால் அந்த நேர்மையை மட்டும் வைத்துக்கொண்டு பிழைப்பதற்கு ஏன் வழியின்றிப் போகிறது? விலை இல்லை என்றால் மானுடம் ஏன் எல்லாப் பக்கங்களிலும் நேர்மையை உன்னதமான ஒரு குணமாக வலியுறுத்துகிறது? நேர்மை அகவயமான ஒரு பண்பா? அல்லது புறவயமான பண்பா? இப்படி கேள்விகள் விரிவடைந்தபடி செல்கின்றன.

இந்தச் சிறுகதையைப் படித்த அன்று இதைத் தவிர நானும் பழனியும் வேறு எதையுமே பேசிக்கொள்ளவில்லை. மீண்டும்மீண்டும் நேர்மையைப் பற்றிய கேள்விகளே எங்களை அலைக்கழித்தன.

**

இரண்டு மாதங்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையையொட்டி ஊருக்குச் சென்றிருந்த சமயத்தில் பழனியோடு பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாகவே எங்கள் உரையாடல் மரணத்தின் திசையில் இருந்தது. கடந்த முறை பயணத்துக்கும் இந்த முறை பயணத்துக்கும் இடைப்பட்ட நாட்களில் எங்கள் தெருவில் நாலைந்துபேர்கள் மறைந்துவிட்டிருந்தார்கள். சில இயற்கை மரணங்கள். சில அகால மரணங்கள். அந்த மரணங்களைப்பற்றிப் பேசத் தொடங்கி பேச்சின் மையப்பொருளாகவே மரணம் மாறிவிட்டது. பொத்தாம்பொதுவில் வீசப்படும் ஒரு தூண்டில் அகப்படுகிற மீனை இழுத்துக்கொண்டு நிமிர்வதைப்போல மரணத்தூண்டில் கைக்குக் கிடைக்கிற ஆளை அள்ளiக்கொண்டுபோய்விடுகிறது. மரணம் நம்ப முடியாத விசித்திரம் என்று சொல்லிக்கொண்டோம்.

சுஜாதா கூட இப்படி நடந்துவிடுகிற அபத்தமான ஒரு மரணத்தைப்பற்றி எழுதியிருக்காருடா சுஜாதா கதை என்றதும் பழனியின் முகத்தில் ஆவல் தெரிந்தது.

தலைப்பு சரியா ஞாபகமில்லை. ஆனா கதை இதுதான் என்று கதையைச் சொல்லிமுடித்தேன்.

காவலரால் துரத்தப்படுகிறவனையும் அவனுக்கு அடைக்கலம் வழங்குகிறவனையும் பற்றிய சிறுகதை அது. காவலரைப்பற்றிய எண்ணம் வந்தாலேயே அஞ்சி நடுங்குகிறவனை அமைதிப்படுத்தும் வழி தெரியாமல் குழம்புகிற நண்பன் ஆபத்துக்கு உதவட்டும் என்று ஒரு பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கியைக் கொடுத்து வைத்துக்கொள்ளுமாறு சொல்கிறான். கையில் துப்பாக்கி இருந்தாலும்கூட அவனுடைய பயம் அவனைவிட்டு போகவில்லை. தனியிடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள அவனைச் சந்திக்க வருகிற நண்பன் தற்செயலாக ஒரு காவலர் உடையில் வருகிறான். காலடிச் சத்தத்தையும் காவலர் உடையையும் பார்த்ததும் பீதியின் உச்சத்தில் நண்பனையே சுட்டுவிடுகிறான்.

எந்த நேரமும் மரணம் நிகழ்ந்துவிடும்னு காத்திருப்பவன் உயிரோட இருக்கறான். மரணத்த பத்தியே கொஞ்சம்கூட நெனச்சிப் பாக்காதவன் உயிர விட்டுடறான். என்ன மாதிரியான வாழ்க்கைடா இது? சுஜாதா இதக்கூட யோசிச்சிருக்காருங்கறது ஆச்சரியமாதான் இருக்குது ஒரு தத்துவஞானியைப்போல அன்று பழனி பேசினான்.

28.02.08 அன்று அதிகாலையில் என் நண்பர் மகாலிங்கத்தை வேறு எதையோ விசாரிப்பதற்காக தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் சுஜாதாவின் மறைவுச்செய்தியைச் சொன்னார். ஒருகணம் ஆழ்ந்த துக்கம் என் நெஞ்சில் கவிந்தது. அவரைச் சந்திக்கச் சென்ற நாளின் நினைவுகள் அலைபாயத் தொடங்கின. பழனிக்கு அந்தச் செய்தியை உடனடியாகச் சொல்லிவிட வேண்டும் என்ற வேகத்தில் தொலைபேசி எண்களைச் சுழற்றினேன். மணி அடித்துக்கொண்டிருந்ததே தவிர எடுக்கப்படவே இல்லை. அது அவன் வாடகைக்கு வசிக்கிற வீட்டுச் சொந்தக்காரரின் தொலைபேசி. நாலைந்து முறை விடாது முயற்சி செய்துவிட்டு நிறுத்திவிட்டேன். வேறு யாரிடமும் பேச விருப்பமில்லை. என் மனைவி அமுதாவிடம் மட்டும் சுஜாதாவைப் பார்க்கச் சென்ற அனுபவம் நினைவிருக்கிறதா என்று கேட்டு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். பெங்களூரில் இருக்கும்போது ஒருமுறையும் சென்னைக்குப் போனபிறகு ஒருமுறையும் அவரைப் பார்க்கச் சென்றபோது என்னோடு அமுதாவையும் அழைத்துச் சென்றிருக்கிறேன்.

இளமையும் துடிப்பும் நிறைந்த ஏராளமான படைப்புகளை சுஜாதா எழுதியிருக்கிறார். இளமையின் இதயமும் கண்களும் அவரிடம் நிரந்தரமாக இருந்தன. இளமையின் துடிப்போடு எழுத்துத்துறையில் அவர் காலமெல்லாம் வலம் வந்தார். தன்னால் தொடமுடிந்த எல்லாத் துறைகளையும் தொட்டுப் பார்த்தார். இளமை என்பதை வெறும் வயது சார்ந்த ஒன்றாகமட்டுமே நாம் சுருக்கிப் பார்க்கத் தேவையில்லை. இளமை என்பது வேகம். இளமை என்பது ஒருவித சாகசநாட்டத்தைக் குறிக்கும் அடையாளம். இளமை, ஈர்ப்பு, புதுமை என மூன்றோடு தன் மனத்தையும் இணைத்து ஒரு புத்தம்புதிய படைப்புமொழியை சுஜாதா தன் படைப்புகளiல் பயன்படுத்தினார். சொற்களால் இழைத்துஇழைத்து உருவாக்கிய இந்தப் படைப்புமொழிதான் சுஜாதா தமிழுக்கு வழங்கிய மிகப்பெரிய கொடை.

இரண்டு நாட்கள் கழித்தபிறகுதான் பழனியுடன் தொலைபேசியில் பேச முடிந்தது. நம்ம சுஜாதா போயிட்டாருடா என்று என்னை முந்திக்கொண்டு திரும்பத் திரும்பச் சொன்னான். இரண்டு முறை திருப்பித்திருப்பிச் சொன்னான். அவன் குரல் உடைந்திருந்தது.

நூலகத்திலேருந்து கரையெல்லாம் செண்பகப்பூ எடுத்தாந்து வச்சிருக்கேன். அதத்தான் இந்த வாரம் முழுக்க படிக்கப் போறேன். சுஜாதாவுக்கு நான் செலுத்துகிற எளi அஞ்சலி என்றான்.

ஒரு செட் சுஜாதா புஸ்தகம் என்ன வெலைடா இருக்கும்? ஒரு நாலாயிரம் ஐயாயிரம் இருக்குமா? வசதி வந்தா அப்படி ஒரு செட் வாங்கி வச்சி தினம் படிக்கணும்டா. அப்படித்தான் நாம அவுங்கள கௌரவிக்கணும்.

அவன் மறுபடியும் சொன்னான். அவரைப்பற்றிச் சொல்ல அவனுக்கு ஏராளமான விஷயங்கள் இருந்தன. கடைசியாக முடிக்கும்போது நான் அவர ஒருமுறை கூட நேர்ல பாத்ததில்லைடா என்று குரல் கமற ஆதங்கத்தோடு சொன்னான். எனக்குச் சுரீரென்றது. நானும் அவரைப் பார்த்து ஏழெட்டு ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

தொலைபேசி உரையாடலை முடித்துக்கொண்டு குளிக்கச் சென்றேன். இப்போது இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறவன் கடந்த முறை பொங்கல் சமயத்தில் பார்த்தபோது சொல்லியிருந்தாலாவது ஒரு முறை சென்னைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்திருக்கலாமே என்று நினைத்துக்கொண்டேன். சில விஷயங்களை நாம் ஏதோ ஒரு காரணத்துக்காக தயங்கித்தயங்கி வெளிப்படுத்துவதே இல்லை. வெளிப்படுத்தும்போது எல்லாமே கைமீறிப் போய்விடுகிறது.

கடந்த முறை சந்திப்பில் நானும் பழனியும் மரணத்தைப்பற்றிய அவருடைய சிறுகதையை முன்னிட்டு பேசிக்கொண்டதுகூட ஏதோ ஒரு விசித்திரம்தான் என்று தோன்றுகிறது. அந்தக் கதையில் நிகழ்கிற அபத்தம் அவருடைய மரணத்திலும் நேர்ந்துவிட்டதாக நானாக நினைத்துக்கொண்டேன். எந்த மீனையோ அள்ளிக்கொண்டு உயரவேண்டிய மரணத்தூண்டிலில் இப்போது சுஜாதா சிக்கிக்கொண்டார். மரணம் என்பது நம்பமுடியாத ஒரு விசித்திரம் என்பதைத்தான் நாம் ஒவ்வொரு மரணத்தின்போதும் மீண்டும்மீண்டும் தெரிந்துகொள்கிறோம் என்று தோன்றியது.

 

(திண்ணை – இணையதளம் - 10.04.2008)

(சுஜாதா மறைந்த நாள் 28.02.2008)