Home

Monday, 7 April 2025

ஏவாளின் இரண்டாவது முடிவு - சிறுகதை

 

பிரதமர் அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் வந்திருப்பதைப் பார்த்ததும் ‘‘பெண்கள் நம் கண்கள்’’ ‘‘தாய்  நம் நடமாடும் தெய்வம்’’ ‘‘தாய்மார்களின் சேவை இந்த நாட்டுக்குத் தேவை’’ என்று வழக்கமாக வரும் உபதேச வார்த்தைகளாக இருக்கக்கூடும் என்று அலட்சியமாகக் கணிப்பொறித் திரையில் மௌஸைக் கிளிக்கினேன். நான் நினைத்ததற்கு மாறாக அது வேறொரு செய்தி. அஞ்சலின் மூலையில் பிரதமரின் படம். அவர் என்னைப் பார்த்து வணங்கியபடி அந்த வாசகங்களைச் சொல்வதுபோல அந்த அஞ்சல் வடிவமைக்கப்பட்டிருந்தது.

தற்செயல்களும் திருப்புமுனைகளும்

 

’இலங்கை ஒலிபரப்புக் கூட்டுறவு ஸ்தாபனம்’ என்ற சொல்லைக் கேட்டதுமே என் நினைவுக்கு வரக்கூடிய முதல் பெயர் பி.எச்.அப்துல் ஹமீத். அக்காலத்தில் அவர் வானொலியில் பேசும்போதெல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கமாட்டாரா என்று தோன்றாத நாளே இல்லை. அந்த அளவுக்கு அவருடைய தெளிவான உச்சரிப்பும் வெண்கலக்குரலும் என்னைக் கவர்ந்த அம்சங்கள். சமீபத்தில் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ என்னும் தலைப்பில் அவருடைய தன்வரலாற்று நூல் அ.முத்துலிங்கத்தின் முன்னுரையோடு வெளிவந்தது. புத்தகம் கைக்குக் கிடைத்ததும் ஒரே நாளில் படித்துவிட்டேன்.

Tuesday, 1 April 2025

புதிய எல்லையை நோக்கி

  

தமிழ்ச்சிறுகதையின் வடிவமும் கதைக்களமும் காலந்தோறும் மாறிக்கொண்டே வருகின்றன. வ.வெ.சு.ஐயர், பாரதியார், அ.மாதவையா போன்ற மூத்த தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய அல்லது கண்டடைந்த சிறுகதையின் வடிவத்தை ஒரு தொடக்கநிலை என வைத்துக்கொள்ளலாம். புதுமைப்பித்தன், மெளனி, ந.பிச்சமூர்த்தி போன்ற இரண்டாம் தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய சிறுகதையின் வடிவம் முற்றிலும் வேறுவகையாக இருந்தது. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் போன்ற படைப்பாளிகள் உருவாக்கிய கதைவடிவம் இன்னொரு வகையில் புதுமையாக அமைந்திருந்தது.  ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், ஆ.மாதவன், ஆதவன் போன்றோர் முன்வைத்த வடிவங்கள் மற்றொரு புதிய பரிமாணத்தை உணர்த்துவதாக இருந்தன.

வண்ணக்கிளிஞ்சல்கள் - புதிய தொகுதியின் முன்னுரை

 

புதிதாக வெளிவந்திருக்கும் ‘வண்ணக்கிளிஞ்சல்கள்’ தொகுதியில் முப்பது கட்டுரைகள் உள்ளன. எல்லாமே என் அனுபவம் சார்ந்தவை. சில தருணங்களில் நான் பார்வையாளனாக மட்டும் இருந்திருக்கிறேன். சில தருணங்களில் பிறருடன் நானும் இணைந்திருக்கிறேன்.

Sunday, 23 March 2025

கல்யாண்ராமனுக்கு வாழ்த்துகள்

 

நம் தமிழ்சூழலில்  இதுவரை தோன்றிய மொழிபெயர்ப்பாளர்கள் இருவகைகளில் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றியிருக்கிறார்கள். ஒருபுறம், பாரதியாரின் கனவையொட்டி பிறமொழிகளில் முதன்மையாகக் கருதப்படுகிற படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இன்னொருபுறம், தமிழ்ச்சூழலில் சிறந்தவையாக விளங்கும் படைப்புகளை பிற மொழிகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒரு பணி, நம் மொழிச்சூழலுக்கு உரமாக விளங்குகிறது. இன்னொரு பணி நம் மொழியின் பெருமையை வெளியுலகத்துக்கு உணர்த்துகிறது. இத்தகு இருவித பணிகளிலும் ஈடுபட்டுவரும் ஆளுமைகள் பாராட்டுக்குரியவர்கள். என்றென்றும் நினைக்கப்பட வேண்டியவர்கள்.

கன்னத்தில் அடித்த வாழ்க்கை

  

ஒருநாள் ஒரு நண்பரைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரும் அவருடைய எட்டு வயது மகனும் மட்டும் வீட்டில் இருந்தார்கள். நாங்கள் உரையாடிக்கொண்டிருந்த சமயத்தில் அவருடைய மகன் தரைவிரிப்பில் உட்கார்ந்துகொண்டு கோலிக்குண்டுகளை  வளைத்துவளைத்து அடுக்குவதில் ஈடுபட்டிருந்தான். அடுக்கும் வேலை முடிந்ததும் “அப்பா, இங்க பாருங்க, பாம்பு” அச்சுறுத்தும் குரலில் சொன்னான். 

Sunday, 16 March 2025

வளவனூர் : நினைவுப்புத்தகத்தில் நிறைந்திருக்கும் சித்திரங்கள்

  

நான் பிறந்த ஊர் வளவனூர். என்னுடைய அப்பாவின் பெயர் பலராமன். கடைத்தெருவில் வாடகைக்கட்டடத்தில் தையல்கடை வைத்திருந்தார். என் அம்மாவின் பெயர் சகுந்தலா. புதுச்சேரியில் பிறந்தவர். அப்பாவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு வளவனூருக்கு வந்தவர்.

புதிர்த்தருணங்களின் காட்சி

 

சங்க காலக் கவிஞர்கள் தம் பாடல்களை எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே வாழ்க்கையின் புரியாத புதிர்களை எழுதத் தொடங்கிவிட்டனர் என்றே சொல்லவேண்டும். நற்றிணையில் பாலைத்திணைப் பாடலொன்று ‘முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார் வாழ்நாள் வகை அளவு அறிஞரும் இல்லை’ என்னும் புதிரோடுதான் தொடங்குகிறது. தலைவியின் குரலில் அமைந்த அப்பாடல் இளமை அழிந்த முதுவயதில் இளமையை மீண்டும் திரும்பப்பெற முடியாது என்பதும் குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்திருப்போம் என ஒருவராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது என்பதும் ஏன் இந்தத் தலைவனுக்குத் தெரியவில்லை, இன்பம் துய்க்கவேண்டிய தருணத்தில் இவன் ஏன் பிரிந்துசெல்கிறான். இது புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறதே என புலம்பும் தலைவியின் மனக்குறையைத்தான் அப்பாடல் எதிரொலிக்கிறது. புரிந்துகொள்ள முடியாத புதிர்த்தருணங்கள் ஆதிகாலத்திலிருந்தே படைப்புக்களமாக விளங்கி வந்திருக்கின்றன.

Sunday, 9 March 2025

திசை தேடும் பறவை

 

தாத்தாவின் முடிவு குறித்து யாருக்கும் திருப்தி இல்லை. அபரிமிதமான சோர்வும் துக்கமும் கொண்டிருந்தார் அப்பா. தத்தளிக்கும் உணர்ச்சிகளை அவர் முகம் அப்பட்டமாய் வெளிக்காட்டியது. கண்டமங்கலம் சித்தப்பாவும், பாக்கியம் அத்தையும் எதுவும் பேசமுடியவில்லை. புடவை முந்தானையால் வாயை மூடிக்கொண்டு, கதவுக்குப் பின்பக்கம் நின்றுகொண்டு அம்மா அழுதாள். தாத்தாவோ மகிழ்ச்சி, துக்கம் எதையும் காட்டிக்கொள்ளாத முகத்துடன் இருந்தார். புரிதல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மர்மச் சித்திரமாய் இருந்தது அவர் முக உணர்ச்சி. பொங்கல், தீபாவளி சமயங்களில் காலில் விழுந்து வணங்கி எழுகிற மாதிரி அன்றைய தினம் எல்லாரும் விழுந்து கும்பிட்டோம். எல்லோரின் தலையையும் ஆதரவுடன் தொட்டு ஆசிர்வாதம் செய்துவிட்டு தாத்தா விடை பெற்றுக்கொண்டார்.

சரண்

 

அந்த இடத்தைக் கோயில் என்று சொல்லமுடியாது. அது இருந்த கோலம் அப்படி. மணிகண்டசாமி இருந்தவரைக்கும் சுத்தபத்தமாகத்தான் இருந்தது. ஐயப்பனுக்கு பக்தர்களும் பெருகிக்கொண்டு வந்தார்கள்.   இருதய நோயிலிருந்து பிழைத்து எழுந்ததற்காக ஐயப்பனுக்கு நன்றி செலுத்துகிறவண்ணம் நாற்பதுக்கு நாற்பது அடி தேறுகிற இடம் ஒன்றை வாங்கித் தானமாகக் கொடுத்திருந்தார் நமசிவாயம் செட்டியார். அதற்கு நடுவில்தான் பதினெட்டு படிகளும் ஐயப்பன் சிலையும்

Sunday, 2 March 2025

கையெழுத்து

 

அத்தையை அவசரமாக அழைத்துவரச் சொன்னாள் அம்மா. “நாளைக்கு பரீட்ச இருக்குது. கணக்கு போட்டு பாக்கற நேரத்துல வேல வச்சா எப்படிம்மா? மார்க் கொறஞ்சா திட்டறதுக்கு மட்டும் தெரியுதே, இது தெரிய வேணாமா?” என்ற என் சிணுங்கல்கள் எதுவும் அவளிடம் எடுபடவில்லை. “அவசரத்துக்கு ஒரு வேல சொன்னா ஆயிரம் தரம் மொணங்கு. பெரிசா மார்க் வாங்கி கிழிச்சிட்ட போ. சீக்கிரமா கூட்டிட்டு வாடா போஎன்று அதட்டி விரட்டினாள் புத்தகங்களை மூடி வைத்துவிட்டு எழுந்தேன். “போனமா, வந்தமான்று சீக்கிரமா வந்து சேரு. அந்த ஊரு காலேஜ் வண்டி வந்துது. இந்த ஊரு காலேஜ் வண்டி வந்ததுன்னு பெராக்கு பாத்துக்கினு நின்னுடாதஎன்று பேசிக்கொண்டே இருந்தாள் அம்மா.

வழி


வனாந்திரமான இடத்தில் பெரியபெரிய புகை போக்கிகள் முளைத்த கல் கட்டிடத்தின் கம்பீரம் தெருவில் போகும் யாரையும் திரும்ப வைத்துவிடும். இதே பாதையில் வேலை சம்பந்தமாய் நான் அலைய ஆரம்பித்து ஒரு வருஷத்துக்கு மேலிருக்கும். என் வேலைக்கென்றே இலாக்கா மோட்டார் சைக்கிள் ஒன்று என் வசமிருந்தது

Sunday, 23 February 2025

நித்யா

 

 கஸ்தூரிபாய் ஆதரவற்றோர் இல்லத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளத் தொடங்கி ஆறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. எங்கள் ஐந்து திருமண நாள்களையும் ஐந்து பிறந்த நாள்களையும் குழந்தை அபியின் மூன்று பிறந்த நாள்களையும் இதே இல்லத்தில் தான் கழித்திருக்கிறோம். என் மனத்தில் புதைந்து கிடக்கும் எண்ணற்ற சித்திரங்களுள் இந்த இல்லத்தின் சித்திரம் மறக்கமுடியாத அனுபவம்

நெஞ்சைக் கவர்ந்த கதைப்பாடல்கள்

  

கதைப்பாடல் என்றதும் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை எழுதிய ’பாட்டியின் வீட்டுப் பழம்பானை அந்தப் பானையின் ஒருபுறம் ஓட்டையடா’ என்னும் பாடல்தான் உடனடியாக நினைவுக்கு வருகிறது. ஆரம்ப வகுப்புகளில் நெற்பானையும் எலியும் என்ற தலைப்பில் படித்த பாடல் அது. அதேபோல ஊகமுள்ள காகம் என்னும் பாடலையும் மறக்கமுடியாது.

Monday, 17 February 2025

கவிதை என்னும் கலை


நல்லாசிரியர்கள் எல்லாக் காலங்களிலும் தம் மாணவர்களை எவ்விதமான எதிர்பார்ப்பும் இன்றி தத்தம் துறைகளில் திறமை மிக்கவர்களாக மிளிர்வதற்குத் துணையாக இருக்கிறார்கள்.  அதே நல்லாசிரியர்கள் எல்லாக் காலங்களிலும் அந்த மாணவர்களால் நன்றியுடன் நினைக்கப்படுகிறார்கள்.

மகத்தான கனவு

 

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது  எங்கள் வளவனூர் அரசு நூலகத்தில் ஒருமுறை புத்தகத்தாங்கிகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்த சமயத்தில் தண்ணீரும் கண்ணீரும் என்னும் புத்தகத்தைப் பார்த்தேன். அதன் அட்டையில் தண்ணீருக்கு அடையாளமாக ஒரு கிணறும் கண்ணீருக்கு அடையாளமாக அழுதுகொண்டிருக்கும் ஒரு பெண்ணும் கொண்ட சித்திரம் வரையப்பட்டிருந்தது. எதுகைமோனையோடு அமைந்திருந்த புத்தகத்தலைப்பும் வசீகரமான அட்டைப்பட சித்திரமும் அப்புத்தகத்தைப் படிக்கத் தூண்டின. உடனே அப்புத்தகத்தை எடுத்துச் சென்று இரண்டு நாட்களிலேயே படித்தேன். 

Saturday, 8 February 2025

நோயற்ற வாழ்க்கைக்கு ஒரு கையேடு

 

இன்று நம் நாடெங்கும் குறிப்பிட்ட பரிசோதனைகள் வழியாக உடலைத் தாக்கியிருக்கும் நோய் எத்தகையது என்பதைக் கண்டறிந்து, அதைத் தீர்க்கும் மருந்துகளை வழங்கும் முறை ஓங்கி வளர்ந்து வருகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்துவரும் இம்மருத்துவ முறைக்கு பொதுமக்களின் பேச்சுவழக்கில் ஆங்கில மருத்துவம் என்ற பெயர் உருவாகி, அதுவே நிலைத்துவிட்டது.

கிருஷ்ண சுவாமி சர்மா : சமத்துவக்கனவின் சாட்சி

  

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த காந்தியடிகள் கோகலேயின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு இந்தியாவின் அரசியல் நிலவரங்களை அறிந்துகொள்ள நாடு தழுவிய நீண்டதொரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அப்பயணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டுக்கு வந்து 14.04.1915 முதல் 29.04.1915 வரை சென்னையில் தங்கியிருந்தார். அப்போது 20.04.1915 அன்று இந்திய ஊழியர் சங்கக்கட்டிடத்தில் கோகலே கிளப் உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடும் விதத்தில் ஒரு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அவர் 1904இல் தென்னாப்பிரிக்காவில் தான் அமைத்த பீனிக்ஸ் குடியிருப்பு பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இந்தியாவில் காந்தியடிகள் ஆசிரமம் எதையும் தொடங்கியிருக்காத நேரம் அது. வெகுவிரைவில் தென்னாப்பிரிக்காவிலிருந்து தம்மோடு வந்த சில தமிழர்களோடு இணையான எண்ணங்களோடிருக்கும் வேறு சிலரையும் இணைத்துக்கொண்டு ஓர் ஆசிரமத்தைத் தொடங்கும் திட்டம் மட்டும் இருந்தது.

Monday, 3 February 2025

மாபெரும் புதிர்

  

பிரதமரான நேருவிடம் ஒரு நேர்காணலில் “காந்தியிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?” என்றொரு கேள்வியை ஒரு நிரூபர் கேட்டார். அதற்கு நேரு ”அச்சமின்மையும் எளிமையும் நல்லிணக்கப்பார்வையும் உண்மையும் ஊக்கமும் கொண்ட செயல்திறமையும் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட முக்கியமான விஷயங்கள். நான் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அவர் இதைத்தான் கடைசி மூச்சு வரை கற்றுக்கொடுக்க முயற்சி செய்துகொண்டே இருந்தார்” என்று பதில் சொன்னார். காந்தியடிகளை இதைவிட ஒரு சிறந்த ஒரு பதிலால் ஒருவரும் வரையறுத்துவிட முடியாது.

விலைமதிப்பில்லாத வைரங்கள்

 

ஒருநாள் மாலை வழக்கம்போல எங்கள் குடியிருப்புப் பகுதியை ஒட்டிய  ஏரிக்கரையில் வேடிக்கை பார்த்தபடி நடந்துகொண்டிருந்தேன். எனக்கு முன்னால் பத்து பதினைந்தடி தொலைவில் நாற்பது வயதையொட்டிய ஒருவர் ஏழெட்டு வயதுள்ள ஒரு சிறுவனின் விரல்களைப் பற்றிக்கொண்டு நடந்துகொண்டிருந்தார். அவர் அச்சிறுவனிடம் மெல்லிய குரலில் எதையோ சொல்லிக்கொண்டிருந்தார். தொலைவு காரணமாகவும் காற்றுவீச்சு காரணமாகவும் எதுவும் காதில் விழவில்லை.  நடை சுவாரசியத்துக்காக ஏதேனும் ஒரு கதையை அச்சிறுவனுக்கு அவர் சொல்லிக்கொண்டிருக்கக்கூடும் என நானாகவே நினைத்துக்கொண்டேன்.  சிறுவயதில் என் தாத்தாவின் கையையும் அப்பாவின் கையையும் பற்றிக்கொண்டு நடந்த பழைய காலத்து நினைவுகள் ஓரிரு கணங்கள் மனத்தின் மூலையில் மின்னி மறைந்தன. 

Sunday, 26 January 2025

மலேசியப்பயணம் : அழகான நிலமும் அன்பான மனிதர்களும் - 1

 

இலக்கியத்தின் ஆர்வமுள்ள மலேசிய இளைஞர்கள் அதன் கலைநுட்பத்தை கூர்மையாக அறிந்துகொள்ளும் விதத்தில் பல்வேறு பயிற்சி முகாம்களையும் இலக்கியத்திருவிழாக்களையும் எழுத்தாளர் நவீன் ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவில் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். இந்த ஆண்டுக்குரிய வல்லினம் இலக்கியத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து நானும் நண்பர் ஜா.ராஜகோபாலும் விமானம் வழியாக கோலாலம்பூர் வந்து சேர்ந்தோம். என்னோடு என் மனைவி அமுதாவும் வந்திருந்தார். இந்திய நேரத்துக்கும் மலேசிய நேரத்துக்கும் இரண்டரை மணி நேர வித்தியாசம். இந்திய நேரப்படி 28.11.2024 அன்று  நண்பகல் 11.45க்குப் புறப்பட்ட விமானம் மலேசிய நேரப்படி மாலை 6.45க்கு கோலாம்பூருக்கு வந்து சேர்ந்தது. முறைப்படியான சோதனைகள் முடிந்து நாங்கள் வெளியே வரும்போது ஏழரை ஆகிவிட்டது. அப்போதே வானில் இருள் சூழந்துவிட்டது. 

மலேசியப்பயணம் : அழகான நிலமும் அன்பான மனிதர்களும் - 2

 தொடர்ச்சி.....

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கீசியர்கள் மலேசியாவைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அவர்கள் வந்த வழியிலேயே வந்த டச்சுக்காரர்கள் அவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அதற்கு அடுத்த நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் காட்டுப்பாதைகள் வழியாக மலேசியாவுக்குள் நுழைந்தார்கள். ஆயிரக்கணக்கான மிதிவண்டிகள் வழியாக காட்டை ஊடுருவிப் பயணம் செய்து டச்சுக்காரர்களுடன் மோதினர்.  அதிக அளவிலான உயிரிழப்பைத் தவிர்ப்பதற்காக  டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டனர். இந்தோனோசியாவையும் அதற்கு அடுத்த பகுதிகளையும் டச்சுக்காரர்கள் வைத்துக்கொள்ள, ஆங்கிலேயர்கள் மலேசியாவைக் கைப்பற்றிக்கொண்டனர்.

Monday, 20 January 2025

இலக்கியம் என்பது சுயமரியாதை


கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் புகுமுக வகுப்புத் தேர்வை எழுதிய மாணவரொருவர் முடிவுக்காகக் காத்திருந்தார். அந்த வட்டாரத்திலேயே பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குச் சென்ற முதல் மாணவர் அவர். அவருடைய அம்மா, அப்பா, உற்றார், உறவினர், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அனைவருமே அவருடைய தேர்வு முடிவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். அந்த மாணவர் மட்டும் தன் முடிவைப்பற்றிய பதற்றமோ, கவலையோ இல்லாமல், தொடர்ச்சியாகக் கிடைத்த விடுப்பை மனத்துக்குப் பிடித்த விதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் புத்தகமே உலகமென வாசிப்பின்பத்தில் மூழ்கியிருந்தார்.

மகிழ்ச்சியாக இருப்பதும் மகிழ்ச்சியாக வாழ்வதும்

 

ஒருசில நாட்களுக்கு முன்னால்தான் செந்தில் பாலா என்னும் கவிஞர் தொகுத்து வெளியிட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகளின் தொகுதியைப் படித்து மகிழ்ந்தேன். பல கவிதைகளின் வரிகள் இன்னும் என் நினைவலைகளில் மிதந்தபடி இருக்கின்றன. அந்த மகிழ்ச்சியை இன்னும் கூடுதலாகப் பெருக்கும் வகையில் இப்போது கும்பகோணம் பகுதியில் அமைந்திருக்கும் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளி மாணவர்களின் கதைத்தொகுதியைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் இளம் வாசகர்வட்டத்தின் செயல்பாடுகள் மாணவர்கள் தம் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள பலவகைகளில் உதவியிருப்பதற்கு இதுபோன்ற தொகுதியே நல்ல எடுத்துக்காட்டு.

Friday, 10 January 2025

புன்னகை பூத்த முகம்: கவிஞர் உமாமோகன் அஞ்சலி

  

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில்தான் கவிஞர் உமா மோகனை முதன்முதலாகச் சந்தித்தேன். அன்று  மாலையிலேயே கண்காட்சிக்கு வந்துவிட்ட நான் ஒரு சுற்று எல்லாக் கடைகளிலும் ஏறி இறங்கிவிட்டு இரண்டாவது சுற்றில் சந்தியா பதிப்பகத்துக்கு வந்து சேர்ந்தேன். அப்போது உமா மோகனையும் வண்ணதாசனையும் அங்கு நின்றிருந்தனர். வண்ணதாசன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். உமா மோகன் புன்னகைத்தபடியே “என்ன சார் நீங்க? எங்க ஊருக்காரர எனக்கு அறிமுகப்படுத்திறீங்களா? அவரைப் பார்த்ததில்லையே தவிர, நிறைய படிச்சிருக்கேன்” என்று கூறினார். “அப்படியா, சரி சரி” என்று சிரித்துக்கொண்டார் வண்ணதாசன்.

முத்தைத் தேடி

 

கராச்சியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் காந்தியடிகள் முதன்முதலாக உரையாற்ற நேர்ந்தபோது இந்தியச் சமூகம் பெண்களை நடத்தும் விதத்தைப்பற்றிய தன் ஆற்றாமையை வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டார். நம் குடும்பங்களிலும் இதயத்திலும் ஓர் அரசியாக வைத்து மதிக்கவேண்டிய பெண்களை நாம் நிலம், வீடு, தங்க ஆபரணங்களைப்போன்ற பாதுகாக்கப்படவேண்டிய சொத்துகளைப்போல நினைத்துக்கொண்டிருக்கிறோம்.  நம் பிரச்சினைகள் அனைத்தும் அந்தக் கருத்துருவிலிருந்து தொடங்குகிறது என்று குறிப்பிட்டார்.

Sunday, 5 January 2025

இருட்டை விலக்கிய வெளிச்சம்

 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய அரசு வங்காள மாகாணத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு எடுத்த முயற்சி இந்திய விடுதலைப்போரில் ஒரு முக்கியமான திருப்புமுனை.  விடுதலைக்காக ஆங்காங்கே உருவாகி வந்த எழுச்சிகளிடையே ஒரு குவிமையம் உருவாவதற்கு அது ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், விபின் சந்திரபால், கோகலே போன்ற மூத்த விடுதலை வீரர்கள் வரிசை அப்போதுதான் உருவானது. இந்த ஆளுமைகளை முன்மாதிரியாகக் கொண்டு தம் வாழ்க்கையை வாழ நினைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவில் உருவானார்கள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மெட்ரிகுலேஷன் படிப்பை வெற்றிகரமாக முடித்திருந்த கிருஷ்ண சுவாமி சர்மா என்னும் இளைஞரும் அவர்களில் ஒருவர்.

இரு தன்வரலாறுகள்

  

ஏறத்தாழ நூற்றிருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கல்கத்தாவில் நகரத்துக்குள் நான்கு வீடுகளும் புறநகரில் தோட்டத்துடன் கூடிய மாளிகை போன்றதொரு வீடும் வைத்திருந்த செல்வச்செழிப்பான உயர்வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞரின் குடும்பமொன்றில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவள் பத்து வயதாக இருந்தபோது, இரண்டாவது பிரசவத்தில் அவளுடைய அன்னை மறைந்துவிட்டாள். அந்தத் துக்கத்தின் நிழல் அவள் மீது விழுந்துவிடாதபடி, அவளை கண்ணும் கருத்துமாக வளர்த்தார் அவளுடைய தந்தையார். நகரத்திலேயே பெரிய பள்ளியாக இருந்த பெத்யூன் பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தார்.