Home

Sunday, 15 June 2025

கிடைக்க மறுக்கிற நீதி - ஹஸினா – கன்னடத்திரைப்பட அனுபவம்

  

ஒரு தாய் தொடர்ந்து பெண்குழந்தைகளைப் பெறுவதால் கணவனால் வெறுக்கப்படுகிறாள் என்பது முஸ்லிம் சமூகத்துத் தாய்க்குமட்டுமே நேரக்கூடிய விஷயமல்ல. எல்லாத் தரப்புத் தாய்களுக்கும் நேரக்கூடியதுதான். செய்தித்தாள் படிக்கும் பழக்கமுள்ள ஒவ்வொருவரும் வாரத்துக்கு ஒருமுறையோ இரண்டுமுறைகளோ நாட்டில் ஏதோ ஒரு மூலையில் பெண்குழந்தை காரணத்தால் பெண்கள் ஒதுக்கிவைக்கப்படுவதும் மணவிலக்கு வழங்கப்படுவதும் மறைமுக வழிகளால் தந்திரமாகக் கொல்லப்படுவதும் நடந்தபடியிருப்பதை அறிந்தவர்களாகவே இருப்பார்கள்.

வெள்ளை யானை - கைவிடப்பட்டவர்களின் கதை

 

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பது வாய்வழக்கில் உள்ள ஒரு வாக்கியம். பறந்துபோகக்கூடிய பத்து குணங்களைப் பட்டியலிட்டு  ஒளவையார் ஒரு வெண்பா எழுதியிருக்கிறார். அவை எல்லாமே பசிக்கு ஆட்பட்டுத் தவிக்கிறவர்கள் ஒவ்வொன்றாக துறப்பதற்குச் சாத்தியமான குணங்கள். ஆனால், வரலாற்றில் ஒரு காலகட்டத்தில், துறப்பதற்கு ஒன்றுமே இல்லாதவர்களாக பசித்தவர்கள் காக்கை குருவிகளைப்போல செத்து விழ, அந்தப் பஞ்சத்துக்குக் காரணமானவர்கள் அந்த மரணங்களுக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாதவர்கள் போல நடந்துகொண்டார்கள்.

Sunday, 8 June 2025

கூண்டு - சிறுகதை

 

அழுவுணி ஆட்டம் ஆடியது அவர்கள்தான்என்றேன்  நான்.

நான்தான் என்றார்கள் அவர்கள்.  ஏற்கனவே நாய்த்தோல் பந்தால்

முதுகு சிவக்க அடிவாங்கிய வேதனை எனக்கு. பட்டாளமாய்

எல்லாரும் சேர்ந்துகொண்டு குற்றம் சாட்டியபோது அவமானத்தில்

அழுதுவிடுவேன் போலிருந்தது. ஒரு கணத்தில் கேலிச்சொற்களின்

கனம் தாங்காமல் பதிலளிக்க இயலாமல் நின்றதும் மிகுந்த

எக்காளத்துடன் அத்தனை பேரும் சிரித்தபடி என்னையே சுற்றி

வந்துதோத்தாங்குளிபாட்டுப் பாடிவிட்டு ஓடினார்கள்.  

சிவாவும் ஹரியும் பழைய புத்தகங்களும்

  

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சிக்கு நானும் விட்டல்ராவும் சேர்ந்து செல்வதாகத்தான் முதலில் திட்டமிட்டிருந்தோம். அதற்கு இசைவாக பயணச்சீட்டுகள் கூட பதிந்துவைத்திருந்தேன். எதிர்பாராத விதமாக அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஒரு வாரம் முன்னாலேயே சென்னைக்குச் செல்லும் வேலை வந்துவிட்டது. முதலில் பதிவு செய்த பயணச்சீட்டுகளை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தனியாக பயணச்சீட்டு பதிவு செய்துகொண்டு போய் வந்தேன். விட்டல்ராவ் மட்டும் தொடக்கத்தில் திட்டமிட்ட வகையிலேயே கண்காட்சிக்குச் சென்று ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு திரும்பினார்.

Sunday, 1 June 2025

சுய சரிதை புத்தகங்களுக்கு வசீகரம் - தினமணி கதிர் நேர்காணல்


கேள்விகள்: அருள்செல்வன்

‘காலவரிசையைப் பின்பற்றாமல் அவ்வப்போது நினைவுக்கு வரும் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நினைவுக்கு வரும் பாத்திரங்களைப்பற்றிய சித்திரங்களையும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.  அவை அனைத்தும் தொகுக்கப்படும்போது அதற்கு ஒரு சுயசரிதைத்தன்மை அமைந்துவிடுகிறது. அத்தகு புத்தகங்களுக்கு ஒரு வசீகரத்தையும் ஏற்படுத்திவிடுகிறது’ என்கிறார் எழுத்தாளர் பாவண்ணன். 

என்றென்றும் வாழும் இலட்சியவாதம்

  

சர்வோதயம் மலர்கிறது இதழின் ஆசிரியராகவும் மதுரை காந்தி நினைவகத்தின் செயலாளராகவும் நீண்ட காலம் பணியாற்றிய க.மு.நடராஜன் அண்ணாச்சி 24.05.2021 அன்று இயற்கையெய்தினார். நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன என்பதை நம்பவே முடியவில்லை. இன்றும் நண்பர்களோடு உரையாடும் சமயத்தில் அவர் தொடர்பான சில செய்திகளும் அடிக்கடி இடம்பெற்று வருவதால், அவருடைய மறைவு மனத்தில் பதியவே இல்லை.  

Sunday, 25 May 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 7

 

எறும்பின் சாகசம்

 ஒரு ஊரில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அதனுடைய கரை உயர்ந்த மேடு போல காட்சியளித்தது. அந்தக் கரையை ஒட்டி ஏராளமான செடிகொடிகளும் புதர்களும் உயரமான மரங்களும் இருந்தன. ஒரு புதருக்கு அருகில் ஒரு சின்ன எறும்புப்புற்று இருந்தது. அந்தப் புற்றுக்குள் ஒரு அம்மா எறும்பும் ஒரு குட்டி எறும்பும் இருந்தன.

செயலின் இனிமை

  

மூத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று மறைந்தார். அவரோடு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்து குடும்பப் பொறுப்புகளைச் சுமந்திருந்த கமலா அம்மையார், அதற்குப் பிறகான நாட்களில் பிரிவின் வேதனையை ஆற்றும் பொருட்டு எழுதத் தொடங்கினார். சு.ரா.வோடு சேர்ந்த வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளையும் தன் தாயாரைப் பற்றியும் தன் இளமைக்கால நினைவுகளைப்பற்றியும் கல்வி கற்ற அனுபவங்களைப்பற்றியும் நினைவுக்குறிப்புகளாக எழுதினார். அவை தொகுக்கப்பட்டு ஏற்கனவே இரு நூல்களாக (நெஞ்சில் ஒளிரும் சுடர், நான் தைலாம்பாள்) வெளிவந்தன. அவ்வரிசையில் ’சு.ரா.வுக்குப் பின்’ மூன்றாவது நூலாகும்.

Sunday, 18 May 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 6 (பகுதி -1)

 

புஷ்பா


ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் ஏழ்மையான நிலையில் வசித்துவந்தது. நடுவயதைக் கடந்த ஒரு அம்மாதான் அக்குடும்பத்தின் தலைவி. அவளுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். மூத்தவள் பெயர் புனிதா. இளையவள் பெயர் புஷ்பா.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 6 (பகுதி -2)

 (தொடர்ச்சி....)

“இது ஒன்னும் வாங்கன பூ கிடையாது. எங்க வீட்டு தோட்டத்துல பூத்த பூ” என்று பெருமையாகச் சொன்னாள் புஷ்பா.

பூவே இல்லாத தோட்டத்தைப் பார்த்ததை அவன் மனத்துக்குள் நினைத்துக்கொண்டான். இந்தப் பெண் எதையோ மறைக்கிறாள் என்பதுமட்டும் அவனுக்குப் புரிந்துவிட்டது. மேன்மேலும் அவளைப் பொய் சொல்லவைக்க வேண்டாம் என நினைத்து அமைதியாக இருந்தான்.

மானுட வாழ்க்கையின் தடங்கள்

 

உலகமெங்கும் புனைவுகளுக்கு இணையாக எழுத்தாளர்கள் தம் அனுபவத்துளிகள் அடங்கிய கதைக்கட்டுரைகளை எழுதும் போக்கு சமீப காலத்தில் பெருகிவருகிறது. கிட்டத்தட்ட அது ஒரு தன்வரலாறுதான். ஆனால் காலவரிசைப்படி எழுதப்பட்ட அனுபவங்களின் தொகுப்பாக அது அமைவதில்லை. ஞாபகத்துக்கு வந்த வரிசையில் அந்த அனுபவக் கட்டுரைகளை எழுதிச் செல்கிறார்கள். கலைத்துப்போட்ட சீட்டுக்கட்டு போல அவை அமைந்துவிடுகின்றன. படித்துப் பட்டம் பெற்று வேலைக்குச் சேர்ந்த காலத்து அனுபவங்கள் முதலில் இடம்பெறுகின்றன. அதற்கு அடுத்த அத்தியாயத்திலேயே தொடக்கப்பள்ளி அனுபவம் இடம்பெறுகிறது. படைப்பூக்கம் கொண்ட மனநிலை வாழ்வின் எந்தத்  தருணத்தை முதலில் கண்டெடுக்கிறதோ, அந்தத் தருணம் படைப்பாக அமைகிறது.

Sunday, 11 May 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 5 (பகுதி - 1)

 

குருவும் சீடனும்

ஓர் ஊரில் ஒரு குருவும் சீடனும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் நாடோடிகள் போல ஊரூராகத் திரிந்துகொண்டே இருந்தார்கள். ஒருநாள் இரவில் தங்கிய ஊரில் அடுத்தநாள் தங்கமாட்டார்கள். உடனே பக்கத்து ஊருக்குச் சென்றுவிடுவார்கள்.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக் கதைகள் - 5 (பகுதி 2)


“என்ன, சீக்கிரம் சொல்லு” என்று அவசரப்படுத்தினார் ராஜா.

“எந்த வீடா இருந்தாலும் கட்டற வேலை மட்டும்தான் என்னை மாதிரியான ஆட்களுடையது. கட்டறதுக்கு முக்கியத் தேவையான செங்கல் எல்லாம் வேற ஒரு ஆளு சூளையில சுட்டு கொண்டுவரக்கூடிய பொருட்கள்தான். அந்தச் செங்கல்லுலதான் ஏதோ ஒரு தப்பு நடந்திருக்கணும் ராஜா” என்று சொல்லிவிட்டு நிறுத்தினான் கட்டடவேலை செய்பவன்.

கலங்கரை விளக்கம்

  

எங்கள் வீட்டுக்கு அருகில் அழகானதொரு ஏரி இருக்கிறது. ஏரியை ஒட்டி நடப்பதற்கு ஏற்ற வகையில் செப்பனிடப்பட்ட நீண்ட நடைபாதையில் நடப்பது இன்பமளிக்கும் அனுபவம்.

Sunday, 4 May 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 4

 

ஓர் ஊரில் ஒரு சிற்றரசன் இருந்தான். அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். அவர்களுடைய இனிய இல்லறத்தின் அடையாளமாக அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள். மூத்தவள் பெண்குழந்தை. பெயர் கனகவல்லி. இளையவன் ஆண்குழந்தை. பெயர் கனகராஜா. இருவருமே பெற்றோர்களின் செல்லப்பிள்ளைகள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருவரும் வளர்ந்து கல்வி கற்கும் பருவத்தை அடைந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஆசிரியரொருவர் அரண்மனைக்கே வந்து அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்.

கவித்துவம் என்னும் ரசவாதம்

  

ப்ளக் ப்ளக் ப்ளக், காகத்தின் சொற்கள், நாகதிசை ஆகிய கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிருக்கும் கவிஞர் ராணிதிலக் குறுங்கதை வடிவத்தில் சில கதைகளை எழுதி ‘ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள்’ என்னும் தலைப்பில் சின்னஞ்சிறியதொரு தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். அவை கதைகள் என தலைப்பிடப்பட்டிருந்த போதும், கவித்துவப்புள்ளியை மையமாகக் கொண்டு சற்றே தளர்வான வடிவத்தில் எழுதி இணைக்கப்பட்ட கவிதைகளாகவே தோற்றமளிக்கின்றன. பெரும்பாலான குறுங்கதைகள், கவிதைக்குரிய கூர்மையான வாசிப்பையும் மறைந்திருக்கும் உள்ளடுக்குகளை அசைபோட்டுப் பிரித்துத் துய்ப்பதற்கான பொழுதையும் கோருபவையாக இருக்கின்றன. குறுங்கதை வடிவத்துக்கு அவை கூடுதல் அழகையே அளிக்கின்றன.

Sunday, 27 April 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 3

 

ராஜநாகத்தின் தலைவலியும் இளவரசியின் புன்னகையும்

 ஒரு காலத்தில் பத்து பதினைந்து கிராமங்களைக் கொண்ட ஒரு பிரதேசத்தை ஒரு ராஜா ஆண்டுவந்தார். எல்லாக் கிராமங்களிலும் பெருமளவில் விவசாயிகள் வாழ்ந்துவந்தனர். உரிய காலத்தில் மழை பொழிந்து, உரிய காலத்தில் வெயிலும் இருந்ததால், அந்தப் பிரதேசத்தில் விவசாயம் செழிப்பாக வளர்ந்திருந்தது. செல்வ வளர்ச்சி இருந்ததால், அரண்மனையில் வசித்துவந்த ராஜாவும் மகிழ்ச்சியாக இருந்தார்.

பசி என்னும் தெய்வம்

  

புத்தாண்டு தொடங்கிய சமயத்திலேயே “இன்னும் ஒரு ஏழெட்டு வாரத்துக்கு உங்கள அடிக்கடி பார்க்கமுடியாது. மொபைல்ல பேசிக்கலாம்” என்று சொன்னார் செல்வம். “ஏதாவது வெளியூர்ப்பயணமா?” என்று கேட்டேன். “எந்த வெளியூரும் கிடையாது. எல்லாமே சொந்த ஊரு பயணம்தான். ஆனால் விட்டுவிட்டு ஆறேழு முறை போய் போய் வரணும்” என்று பதில் சொன்னார்.

Sunday, 20 April 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக் கதைகள் - 2

 

முக்கியமான முடிவு

 

ஒரு கிராமத்தில் மூன்று சகோதரர்கள் வசித்துவந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். குடும்பமே அவள் மீது பாசத்தைப் பொழிந்து வளர்த்து ஆளாக்கியது. அவளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டிய நேரம் வந்ததும், அனைவரும் இணைந்து பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடி அவளுக்குத் திருமணம் செய்துவைத்தனர். மாப்பிள்ளையின் ஊர் தம் கிராமத்திலிருந்து வெகுதொலைவில் இருந்தபோதும், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நல்ல குணமுள்ளவனாகவும் வசதி உள்ளவனாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பமாக இருந்தது.  

வாண்டுமாமாவின் கதையுலகம்

 

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் ராணி திலக்கிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் தம் பள்ளியில் கதைப்புத்தகங்களை வாசிப்பதிலும் சொந்தமாக கதைகளை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருக்கும் மாணவமாணவிகளைப்பற்றி குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து நான் என் பள்ளிக்கூட நாட்களில் நான் விரும்பிப் படித்த வள்ளியப்பா கதைகளைப்பற்றியும் வாண்டுமாமா கதைகளைப்பற்றியும் அவற்றைப் படிக்கத் தூண்டிய என் ஆசிரியர்களைப்பற்றியும் என் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டேன்.

Sunday, 13 April 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக் கதைகள் - 1

 

ஹுச்சையா

 

ஒரு நகரத்தில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்துவந்தார்கள். அவர்களின் இளையவனை ஊரில் இருப்பவர்கள் அனைவருமே முட்டாள் என்னும் பொருளில் ”ஹுச்சையா ஹுச்சையா” என்றே அழைத்துவந்தனர்.

கடல் - சிறுகதை

 

 பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடலைப் பார்த்தபடி நின்றான் முட்டக்கோஸ். அருகில் யாரும் இல்லை. கைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டமாக ஓடிவரும் அலைகள் நெஞ்சில் முட்டிமோதுவதைப்போல இருந்தது. “எனக்கு எதுவும் தெரியாது சாரு. நான் சொல்றத நம்பு சாருஎன்று அழுது கெஞ்சக் கெஞ்ச இந்தக் கரையோரமாகத்தான் அடித்து இழுத்துச் சென்றார்கள் போலீஸ்காரர்கள். இடுப்பெலும்பை முறிப்பது போல இடைவிடாது விழுந்த லத்தியடிகள் இன்னும் நினைவில் இருந்தன.   அனிச்சையாக பின்புறத்தைத் தடவிக்கொண்டன அவன் கைகள்.

Monday, 7 April 2025

ஏவாளின் இரண்டாவது முடிவு - சிறுகதை

 

பிரதமர் அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் வந்திருப்பதைப் பார்த்ததும் ‘‘பெண்கள் நம் கண்கள்’’ ‘‘தாய்  நம் நடமாடும் தெய்வம்’’ ‘‘தாய்மார்களின் சேவை இந்த நாட்டுக்குத் தேவை’’ என்று வழக்கமாக வரும் உபதேச வார்த்தைகளாக இருக்கக்கூடும் என்று அலட்சியமாகக் கணிப்பொறித் திரையில் மௌஸைக் கிளிக்கினேன். நான் நினைத்ததற்கு மாறாக அது வேறொரு செய்தி. அஞ்சலின் மூலையில் பிரதமரின் படம். அவர் என்னைப் பார்த்து வணங்கியபடி அந்த வாசகங்களைச் சொல்வதுபோல அந்த அஞ்சல் வடிவமைக்கப்பட்டிருந்தது.

தற்செயல்களும் திருப்புமுனைகளும்

 

’இலங்கை ஒலிபரப்புக் கூட்டுறவு ஸ்தாபனம்’ என்ற சொல்லைக் கேட்டதுமே என் நினைவுக்கு வரக்கூடிய முதல் பெயர் பி.எச்.அப்துல் ஹமீத். அக்காலத்தில் அவர் வானொலியில் பேசும்போதெல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கமாட்டாரா என்று தோன்றாத நாளே இல்லை. அந்த அளவுக்கு அவருடைய தெளிவான உச்சரிப்பும் வெண்கலக்குரலும் என்னைக் கவர்ந்த அம்சங்கள். சமீபத்தில் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ என்னும் தலைப்பில் அவருடைய தன்வரலாற்று நூல் அ.முத்துலிங்கத்தின் முன்னுரையோடு வெளிவந்தது. புத்தகம் கைக்குக் கிடைத்ததும் ஒரே நாளில் படித்துவிட்டேன்.

Tuesday, 1 April 2025

புதிய எல்லையை நோக்கி

  

தமிழ்ச்சிறுகதையின் வடிவமும் கதைக்களமும் காலந்தோறும் மாறிக்கொண்டே வருகின்றன. வ.வெ.சு.ஐயர், பாரதியார், அ.மாதவையா போன்ற மூத்த தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய அல்லது கண்டடைந்த சிறுகதையின் வடிவத்தை ஒரு தொடக்கநிலை என வைத்துக்கொள்ளலாம். புதுமைப்பித்தன், மெளனி, ந.பிச்சமூர்த்தி போன்ற இரண்டாம் தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய சிறுகதையின் வடிவம் முற்றிலும் வேறுவகையாக இருந்தது. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் போன்ற படைப்பாளிகள் உருவாக்கிய கதைவடிவம் இன்னொரு வகையில் புதுமையாக அமைந்திருந்தது.  ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், ஆ.மாதவன், ஆதவன் போன்றோர் முன்வைத்த வடிவங்கள் மற்றொரு புதிய பரிமாணத்தை உணர்த்துவதாக இருந்தன.

வண்ணக்கிளிஞ்சல்கள் - புதிய தொகுதியின் முன்னுரை

 

புதிதாக வெளிவந்திருக்கும் ‘வண்ணக்கிளிஞ்சல்கள்’ தொகுதியில் முப்பது கட்டுரைகள் உள்ளன. எல்லாமே என் அனுபவம் சார்ந்தவை. சில தருணங்களில் நான் பார்வையாளனாக மட்டும் இருந்திருக்கிறேன். சில தருணங்களில் பிறருடன் நானும் இணைந்திருக்கிறேன்.

Sunday, 23 March 2025

கல்யாண்ராமனுக்கு வாழ்த்துகள்

 

நம் தமிழ்சூழலில்  இதுவரை தோன்றிய மொழிபெயர்ப்பாளர்கள் இருவகைகளில் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றியிருக்கிறார்கள். ஒருபுறம், பாரதியாரின் கனவையொட்டி பிறமொழிகளில் முதன்மையாகக் கருதப்படுகிற படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இன்னொருபுறம், தமிழ்ச்சூழலில் சிறந்தவையாக விளங்கும் படைப்புகளை பிற மொழிகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒரு பணி, நம் மொழிச்சூழலுக்கு உரமாக விளங்குகிறது. இன்னொரு பணி நம் மொழியின் பெருமையை வெளியுலகத்துக்கு உணர்த்துகிறது. இத்தகு இருவித பணிகளிலும் ஈடுபட்டுவரும் ஆளுமைகள் பாராட்டுக்குரியவர்கள். என்றென்றும் நினைக்கப்பட வேண்டியவர்கள்.

கன்னத்தில் அடித்த வாழ்க்கை

  

ஒருநாள் ஒரு நண்பரைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரும் அவருடைய எட்டு வயது மகனும் மட்டும் வீட்டில் இருந்தார்கள். நாங்கள் உரையாடிக்கொண்டிருந்த சமயத்தில் அவருடைய மகன் தரைவிரிப்பில் உட்கார்ந்துகொண்டு கோலிக்குண்டுகளை  வளைத்துவளைத்து அடுக்குவதில் ஈடுபட்டிருந்தான். அடுக்கும் வேலை முடிந்ததும் “அப்பா, இங்க பாருங்க, பாம்பு” அச்சுறுத்தும் குரலில் சொன்னான். 

Sunday, 16 March 2025

வளவனூர் : நினைவுப்புத்தகத்தில் நிறைந்திருக்கும் சித்திரங்கள்

  

நான் பிறந்த ஊர் வளவனூர். என்னுடைய அப்பாவின் பெயர் பலராமன். கடைத்தெருவில் வாடகைக்கட்டடத்தில் தையல்கடை வைத்திருந்தார். என் அம்மாவின் பெயர் சகுந்தலா. புதுச்சேரியில் பிறந்தவர். அப்பாவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு வளவனூருக்கு வந்தவர்.

புதிர்த்தருணங்களின் காட்சி

 

சங்க காலக் கவிஞர்கள் தம் பாடல்களை எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே வாழ்க்கையின் புரியாத புதிர்களை எழுதத் தொடங்கிவிட்டனர் என்றே சொல்லவேண்டும். நற்றிணையில் பாலைத்திணைப் பாடலொன்று ‘முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார் வாழ்நாள் வகை அளவு அறிஞரும் இல்லை’ என்னும் புதிரோடுதான் தொடங்குகிறது. தலைவியின் குரலில் அமைந்த அப்பாடல் இளமை அழிந்த முதுவயதில் இளமையை மீண்டும் திரும்பப்பெற முடியாது என்பதும் குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்திருப்போம் என ஒருவராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது என்பதும் ஏன் இந்தத் தலைவனுக்குத் தெரியவில்லை, இன்பம் துய்க்கவேண்டிய தருணத்தில் இவன் ஏன் பிரிந்துசெல்கிறான். இது புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறதே என புலம்பும் தலைவியின் மனக்குறையைத்தான் அப்பாடல் எதிரொலிக்கிறது. புரிந்துகொள்ள முடியாத புதிர்த்தருணங்கள் ஆதிகாலத்திலிருந்தே படைப்புக்களமாக விளங்கி வந்திருக்கின்றன.

Sunday, 9 March 2025

திசை தேடும் பறவை

 

தாத்தாவின் முடிவு குறித்து யாருக்கும் திருப்தி இல்லை. அபரிமிதமான சோர்வும் துக்கமும் கொண்டிருந்தார் அப்பா. தத்தளிக்கும் உணர்ச்சிகளை அவர் முகம் அப்பட்டமாய் வெளிக்காட்டியது. கண்டமங்கலம் சித்தப்பாவும், பாக்கியம் அத்தையும் எதுவும் பேசமுடியவில்லை. புடவை முந்தானையால் வாயை மூடிக்கொண்டு, கதவுக்குப் பின்பக்கம் நின்றுகொண்டு அம்மா அழுதாள். தாத்தாவோ மகிழ்ச்சி, துக்கம் எதையும் காட்டிக்கொள்ளாத முகத்துடன் இருந்தார். புரிதல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மர்மச் சித்திரமாய் இருந்தது அவர் முக உணர்ச்சி. பொங்கல், தீபாவளி சமயங்களில் காலில் விழுந்து வணங்கி எழுகிற மாதிரி அன்றைய தினம் எல்லாரும் விழுந்து கும்பிட்டோம். எல்லோரின் தலையையும் ஆதரவுடன் தொட்டு ஆசிர்வாதம் செய்துவிட்டு தாத்தா விடை பெற்றுக்கொண்டார்.

சரண்

 

அந்த இடத்தைக் கோயில் என்று சொல்லமுடியாது. அது இருந்த கோலம் அப்படி. மணிகண்டசாமி இருந்தவரைக்கும் சுத்தபத்தமாகத்தான் இருந்தது. ஐயப்பனுக்கு பக்தர்களும் பெருகிக்கொண்டு வந்தார்கள்.   இருதய நோயிலிருந்து பிழைத்து எழுந்ததற்காக ஐயப்பனுக்கு நன்றி செலுத்துகிறவண்ணம் நாற்பதுக்கு நாற்பது அடி தேறுகிற இடம் ஒன்றை வாங்கித் தானமாகக் கொடுத்திருந்தார் நமசிவாயம் செட்டியார். அதற்கு நடுவில்தான் பதினெட்டு படிகளும் ஐயப்பன் சிலையும்

Sunday, 2 March 2025

கையெழுத்து

 

அத்தையை அவசரமாக அழைத்துவரச் சொன்னாள் அம்மா. “நாளைக்கு பரீட்ச இருக்குது. கணக்கு போட்டு பாக்கற நேரத்துல வேல வச்சா எப்படிம்மா? மார்க் கொறஞ்சா திட்டறதுக்கு மட்டும் தெரியுதே, இது தெரிய வேணாமா?” என்ற என் சிணுங்கல்கள் எதுவும் அவளிடம் எடுபடவில்லை. “அவசரத்துக்கு ஒரு வேல சொன்னா ஆயிரம் தரம் மொணங்கு. பெரிசா மார்க் வாங்கி கிழிச்சிட்ட போ. சீக்கிரமா கூட்டிட்டு வாடா போஎன்று அதட்டி விரட்டினாள் புத்தகங்களை மூடி வைத்துவிட்டு எழுந்தேன். “போனமா, வந்தமான்று சீக்கிரமா வந்து சேரு. அந்த ஊரு காலேஜ் வண்டி வந்துது. இந்த ஊரு காலேஜ் வண்டி வந்ததுன்னு பெராக்கு பாத்துக்கினு நின்னுடாதஎன்று பேசிக்கொண்டே இருந்தாள் அம்மா.