கடந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தோன்றிய முக்கியமான
தமிழ்க்கவிஞர் பாரதியார். சொல்ஜாலங்களையும் சிலேடை விளையாட்டுகளையும்
உவமைச்சேர்க்கைகளையும் முன்வைப்பர்களை கவிஞர் என்று கொண்டாடிக்கொண்டிருந்த
கவிராயர்களுக்கு நடுவில் ஒரு காட்டுயானையைப்போல வந்து நின்றவர் பாரதியார்.
வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, கண்ணி, சிந்து என அவர் கையாளாத
பாவகைகளே இல்லை.
ஒவ்வொரு வடிவத்துக்கும் தன் சொற்களால் புது ரத்தத்தைச் செலுத்தினார்
அவர். அவர் எழுதிய கவிதைகளில் ஒவ்வொரு சொல்லும் ஓர் அம்புபோலப் பாய்ந்தது.
வேகம், வெப்பம், நேசம், நெருக்கம், கொஞ்சல், வெட்கம் எல்லாவற்றையும் தன்
எழுத்துகளில் கொண்டு வந்து நிறுத்தும் ஆற்றல் அவரிடம் இருந்தது. பரலி
சு.நெல்லையப்பரால் வெளியிடப்பட்ட கண்ணன் பாட்டும், நாட்டுப்பாட்டும்
புதியதாக அரும்பிக்கொண்டிருந்த தமிழ்க்கவிதை மாளிகைக்கு அடிக்கற்களாக
விளங்கின.