Home

Sunday, 25 December 2022

வணக்கம் சொல்லும் குரங்கு - புதிய பாடல்தொகுதியின் முன்னுரை

  

கடந்த இரு ஆண்டுகளாக அவ்வப்போது என் குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்த பாடல்கள் அடங்கிய தொகுப்பே இந்நூல்.

என் பாடல்கள் உருவாகும் கணங்களைப்பற்றி ஏற்கனவே என் தொகுதிகளில் குறிப்பிட்டிருக்கிறேன். தினமும் ஒருசில மணி நேரங்களாவது, சிறுவர்களும் சிறுமிகளும் ஆடிக் குதிக்கும் இடங்களுக்கு அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிற வாய்ப்பு எனக்கு வாய்த்திருக்கிறது. வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த வாய்ப்பை ஒரு நற்பேறாகவே கருதும் மனநிலை வந்துவிட்டது.

வணக்கம் சொல்லும் குரங்கு - சில பாடல்கள்

 நான்கு பாடல்கள்

 

எருமை

 

எங்கள் வீட்டு எருமை

இரும்பு வண்ண எருமை

செடியும் கொடியும் கண்டால்

இழுத்துத் தின்னும் எருமை

வண்ணநிலவன் : காலத்தைத் தெய்வமாக்கும் கலைஞன்

 

வண்ணநிலவனின் கதைகளைப்பற்றிய வாசிப்பனுபவக் கட்டுரைகள், அவருடைய தொகுதிகள் வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்தே தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கிவிட்டன. அவற்றின் வழியாக அவருடைய  முக்கியத்துவம் சார்ந்த அடிப்படைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் திரண்டு வந்தன. எதார்த்த வாழ்க்கையையும் கண்முன்னால் உழலும் மனிதர்களையும் நேருக்குநேர் பார்த்து தன் மதிப்பீடுகளைத் தொகுத்துக்கொள்கிறவர்களால் வண்ணநிலவனுடைய சிறுகதைகளை எளிதாக நெருங்கிச் சென்றுவிட முடிகிறது. ஆனால், ஏற்கனவே எழுதிவைக்கப்பட்ட கோட்பாடுகள் சார்ந்தும் தத்துவங்கள் சார்ந்தும் இலக்கியப்படைப்புகளை அணுகுபவர்கள் வண்ணநிலவனின் படைப்புகள் முன்னால் தடுமாறி அல்லது சலித்து விலகிச் சென்றுவிடுகிறார்கள்.

பயணநூல்களும் பரவசமும்

 

பொதுவாக, ஒரு புதிய நகரத்தைப் பார்ப்பதற்காக பயணம் செய்கிறவர்கள் வழக்கமாக அந்த நகரத்தில் ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த வரலாற்றுச் சின்னங்களையும் கோவில்களையும் ஆறுகளையும் கடலையும் கோவில்களையும் கடைத்தெருக்களையும் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். அவர்கள் எழுதும் பயணக்கட்டுரைகள் தகவல்களால் நிறைந்திருக்கும். அவையனைத்திலும் ஒருவித ஆவணத்தன்மை இருக்கும். ஆனால் பயணம் என்பது தகவல்களைத் தெரிந்துகொள்வதோ, சரிபார்த்துக்கொள்ளும் வழிமுறையோ அல்ல. அது ஓர் அனுபவம். ஒரு புதிய இடத்தைப் பார்க்கும்போது, அந்த இடம் சார்ந்த மனிதர்களையும் நாம் நிச்சயமாகப் பார்ப்போம். அந்த இடத்தையும் அம்மனிதர்களையும் பார்க்கும்போது நமக்குள் ஏராளமான எண்ணங்கள் எழக்கூடும். எண்ணற்ற கேள்விகள் உருவாகக்கூடும். அவற்றின் ஒட்டுமொத்த பதிவே அனுபவம். அனுபவமில்லாத பயணக்கட்டுரைகள் வெறும் தகவல் களஞ்சியமாகவே எஞ்சும்.

Sunday, 18 December 2022

மனம் என்னும் விசித்திர ஊஞ்சல்

 

ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பாக அஞ்சலை என்றொரு நாவல் வெளிவந்து வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதை எழுதியவர் கண்மணி குணசேகரன். அஞ்சலை என்னும் இளம்பெண்ணை அவளுடைய அக்காள் கணவனே இரண்டாம்தாரமாக மணந்துகொள்ள விரும்புகிறான். ஆனால் அஞ்சலையின் தாயாருக்கு அதில் உடன்பாடில்லை. அவளைப் பழிவாங்கும் எண்ணத்தோடு புதிய இடத்திலிருந்து ஒரு மாப்பிள்ளையை பெண் பார்க்க அழைத்து வருகிறான் மருமகன். திருமணத்துக்குத் தேதி குறித்துவிடுகிறார்கள். மணமேடையில் அமரும்போதுதான் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மணமகன், பெண் பார்க்க வரும்போது மாப்பிள்ளை என தனக்குச் சுட்டிக் காட்டப்பட்ட ஆளல்ல என்பதை அவள் உணர்கிறாள். அண்ணன் கட்டழகன். ஏற்கனவே திருமணமானவன். அவனைக் காட்டி நம்பவைத்து நோஞ்சானான தம்பிக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள். அந்த இல்வாழ்க்கையில் அவள் எப்படி சிக்கிச் சீரழிந்தாள் என்பதுதான் நாவலின் களம். இன்றளவும் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் நாவல்வரிசையில் அஞ்சலையும் ஒன்றாக இருக்கிறது.

கண்கள் - சிறுகதை

 சத்திரத்தில் ஏதோ ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பலாப்பழங்களின் மணம் மூக்கைத் துளைத்தது.   தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்த ரகுராயரின் மனத்தில் உடனடியாக பாவங்களையும் பலாவையும் மறைக்கமுடியாது என்ற எண்ணம் எழுந்தது.   அமைதியிழக்கிற ஒவ்வொரு தருணத்திலும் அல்லசாணி பெத்தண்ணாவின் வரிகள் மனக்கண்ணின் முன் அலைபாயும்.   பாவங்கள் பொல்லாதவை.   பாவம் புரிவதும் ஒவ்வொரு துளியாக நஞ்சை அருந்துவதும் ஒன்று.   ஏகப்பட்ட கவிதை வரிகள்  மாறிமாறி மிதக்கும்.   விஜயநகரப் பேரரச வம்சத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இனியில்லை என்ற முடிவோடு ஹம்பியை விட்டு வெளியேறிய  அன்றே  தானொரு கவிஞன் மட்டுமே என்ற எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.   அல்லசாணி பெத்தண்ணாவைப்போல அரசவைக் கவிஞன் அல்ல.   நாடோடிக்கவிஞன்.   மக்கள் நடுவே வாழ்ந்து அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள விழையும் மனிதன்.

Sunday, 11 December 2022

அஞ்சலி : விழி.பா.இதயவேந்தன் : வதைபடும் வாழ்வை முன்வைத்த கலைஞன்

 

எண்பதுகளில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக வெளிவந்துகொண்டிருந்த மன ஓசை இதழில் நான் சிறுகதைகளை எழுதி வந்தேன். அப்போது கர்நாடகத்தில் பெல்லாரி, ஹொஸ்பெட், கொப்பல் ஆகிய ஊர்களுக்கிடையில் தொலைபேசி கேபிள் புதைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். நானும் மற்ற பொறியாளர்களும் இந்த ஊர்களுக்கு இடைப்பட்ட கிராமங்களில் கூடாரமிட்டு தங்கியிருந்தோம். வார இறுதியில் விடுப்பு நாளில் மட்டும் நகரத்தில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு வந்து செல்வோம். எங்களுக்கு வந்திருக்கும் கடிதங்களையெல்லாம் ஒரு பெரிய பையில் போட்டு வைத்திருப்பார்கள். அவரவருக்குரிய கடிதங்களை எடுத்துக்கொண்டு திரும்பிவிடுவோம். கடிதத்தை எடுக்கும்போதே, முகவரிப்பகுதியில் காணப்படும் கையெழுத்தை வைத்தே அதை எழுதியவர் யார் என்று கண்டுபிடித்துவிடுவேன். ஒருகணம் அந்தக் கையெழுத்துக்குரியவரின் முகம் நினைவில் ஒளிர்ந்து நகரும்.

அஞ்சலி: பா.செயப்பிரகாசம் – நிபந்தனையில்லாத அபூர்வ மனிதர்

  

1982இல் என்னுடைய முதல் சிறுகதை தீபம் இதழில் வெளியானது. சிறுகதையே என் வெளிப்பாட்டுக்கான வடிவம் என்பதைக் கண்டுணர்ந்த பிறகு தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதினேன். ஒருபோதும் பிரசுர சாத்தியத்தைப்பற்றிய யோசனையே எனக்குள் எழுந்ததில்லை.  அப்போதெல்லாம் கதையின் முதல் வடிவத்தை வேகமாக ஒரு நோட்டில் எழுதிவிடுவேன். தொடங்கிய வேகத்தில் சீராக எழுதிச்சென்று ஒரே அமர்வில் முடிப்பதுதான் என் பழக்கம். அடுத்தடுத்து வரும் நாட்களில் அந்தப் பிரதியை மீண்டும் மீண்டும் படித்து தேவையான திருத்தங்களைச் செய்வேன். அதற்குப் பிறகே அந்தச் சிறுகதையை வெள்ளைத்தாட்களில் திருத்தமான கையெழுத்தில் படியெடுப்பேன்.

Saturday, 26 November 2022

வரலாற்றின் தடம்

 

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசமெங்கும் சுதந்திரப்போராட்ட எழுச்சி சுடர்விட்டது. அதற்கு வித்திட்டவர்கள் விபின் சந்திரபால், திலகர், லாலா லஜபதி ராய் ஆகிய முப்பெருந்தலைவர்கள். 1905 ஆம் ஆண்டில் நிகழ்ந்த வங்கப்பிரிவினையை எதிர்த்து உருவான எழுச்சியில் லஜபதி ராய் பங்கேற்றார். அந்த தன்னிச்சையான எழுச்சியை சுதந்திர வேட்கையாக மடை மாற்றியவர்களில் முக்கியமானவர் அவர். தமக்கு எதிராக உருவான எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய  ஆங்கிலேய அரசு லஜபதி ராயை இந்தியாவிலிருந்து மண்டேலாவுக்கு நாடுகடத்தியது. அதை அறிந்த இந்திய சமூகம் திகைப்பில் ஆழ்ந்தது. அதுவே மெல்ல மெல்ல தீப்பொறியாக மாறி சுதந்திர வேட்கை நாடெங்கும் பரவ வழிவகுத்தது.

வண்ணவண்ண முகங்கள் - விட்டல்ராவின் ‘காலவெளி’


நிறங்களுக்கும் மனித குணங்களுக்கும் இருக்கும் உறவை உணர்த்துவதுதான் ஓவியத்தின் பாலபாடம். முகங்களே இன்றி, வண்ணத்தீற்றல்களைமட்டுமே கொண்ட ஓவியங்கள்கூட மறைமுகமாக மனித குணங்களை, மானுட உணர்வுகளை, வாழ்வின் கோலங்களை உணர்த்துபவையாகவே உள்ளன. ஓவியங்களுக்குள் பல்வேறு முகங்கள் புதைந்திருப்பதுபோலவே ஓவியர்களுக்குள்ளும் பல்வேறு முகங்கள் புதைந்திருக்கின்றன. நட்பை விரும்பும் முகம். நட்பை நிராகரிக்கும் முகம். தன்னை முன்னிறுத்தி முன்னேற விழையும் வேட்கைமுகம். தன் முயற்சியின் முழுமைக்காக அல்லும்பகலும் பாடுபடும் முகம். விட்டல்ராவின் காலவெளி நாவல் ஓவியர்கள் தீட்டும் வண்ணமுகங்களையும் ஓவியர்களுக்குள் புதைந்திருக்கும் வண்ணமுகங்களையும் ஒரே நேரத்தில் ஒளியையும் நிழலையும் இணைத்த சித்திரம்போலக் காட்சியளிக்கும் மரத்தடி நிழலென ஓவியமாகத் தீட்டிவைத்திருக்கிறது. 1988 ஆம் ஆண்டில் எழுதி 1990 ஆம் ஆண்டில் முதல்பதிப்பாக வெளிவந்த இந்த நாவல் இப்போது இரண்டாவது பதிப்பாக வெளிவந்திருக்கிறது. ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலம் கடந்த நிலையிலும் இன்றைய சூழலுக்கும் ஏற்றதாகவே உள்ளது நாவல்.

Sunday, 20 November 2022

மரணம் - சிறுகதை

 

காசோலைகளின் எண்களைப் பதிந்துகொண்டிருக்கும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக என் கணிப்பொறி உறைந்துபோனது. எனக்குத் தெரிந்த சில்லறை வைத்தியங்களையெல்லாம் செய்து பார்த்துவிட்டேன். ஒரு பயனும் இல்லை. எந்தப் பக்கமும் நகர மறுத்த அம்புக்குறி உயிர்பிரிந்த உடல்போல திரையில்  கிடந்தது.

தியாக தீபங்கள்

 

காந்தியடிகளின் தலைமையில் இருவிதமான அறவழிப்போராட்டங்கள் நடைபெற்றன. ஒன்று இந்திய விடுதலைப்போராட்டம். மற்றொன்று தேச நிர்மாணப்பணிகளை நிறைவேற்றுதல். இவ்விரு பாதைகளிலும் ஈடுபட்டு தியாக உணர்வுடன்  தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஆளுமைகள் பலர். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் என்கிற மத வேறுபாடுகளைக் கருதாது நல்லிணக்கப்பார்வையுடன் நாட்டின் மேன்மை ஒன்றையே நோக்கமாகக் கொண்டு உழைத்தவர்கள் அவர்கள்.

Sunday, 13 November 2022

ஊருக்கு வந்தவன் - சிறுகதை

 ஜன்னலுக்கு அருகில் இயங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தின் முட்களை தற்செயலாக உற்றுப் பார்த்தான். முட்கள் துடித்து நகரும் ஓசை உடனடியாக ஓர் இதயத்தை உருவகப்படுத்தியது. தொடர்ந்து அந்த இதயத்துக்கு உரியவனாக அழகேசனை நினைத்துக்கொண்டான். இரவின் அமைதியைக் குலைத்தபடி சிறிய அளவில் விடாமல் ஒலித்த அந்த ஓசையின் வேகம் நொடிக்குநொடி பெருகுவதைப் போலிருந்தது. ஒரு பெரிய மத்தளத்தை இடைவிடாமல் ஓங்கி அடிப்பதைப்போல அந்த ஓசை அறையில் நிரம்பியது. ஒருவித பயம் மனத்தைக் கவ்வி ஆட்டிப் படைத்தது.

ஒரு நாவல் ஒரு கேள்வி

 

மூத்த தலைமுறையைச் சேர்ந்த கன்னட நாவலாசிரியர்களுள் ஒருவர் கே.வி.ஐயர்.   மல்யுத்தம் பயிற்றுவிக்கும் கலைஞராக  பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்த நிலையில் தற்செயலாக எழுத்துத்துறையின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியவர்.   அவருடைய முக்கியமான நாவல் "சாந்தலை". பதினேழு பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்தநாவலைப் படித்த அனுபவம் இன்னும் பசுமையாக நினைவில் பதிந்துள்ளது.  

Sunday, 6 November 2022

காலத்தின் விளிம்பில் - சிறுகதை

 பூந்தோட்டம்என்னும் இணைய வார இதழில் நான் எழுதத்தொடங்கிய கட்டுரைகளுக்கு முதலில் எந்த வரவேற்பும் இல்லை. அத்தொடரை நிறுத்தியிருந்தாலும் எந்தவிதமான பாதகமும் இல்லை என்கிற மாதிரியான மௌனத்தை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சிறிய அளவில் உருவான சலிப்பு மெல்லமெல்ல வளர்ந்து பெரிதாகி செயல்பட முடியாத அளவுக்கு நெஞ்சை அடைத்தது-. எழுதுவதற்கு எனக்கும் ஓர் இடம் தேவையாக இருந்தது என்பதையும் அந்த இணைய தளத்தை நடத்திவந்தவர் என் நண்பர் என்பதையும் தவிர அக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து எழுத வேறு எவ்விதமான காரணமும் இல்லை. ஏறத்தாழ பத்து வாரங்களாக அத்தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. வாராவாரம் பூந்தோட்டத்தில் வெளியிடப்படுகிற வாசகர் கடிதக் குவியலில் இக்கட்டுரைத் தொடரைப்பற்றி ஒரு வரிகூட ஒருவரும் எழுதியதாகத் தெரியவில்லை. இக்கட்டுரைகள் ஏன் வாசகர்களை ஈர்க்கவில்லை என ஒவ்வொரு முறையும் யோசிப்பேன். விடையெதுவும் தெரியாத புள்ளி வரைக்கும் அந்த யோசனை நீண்டு மறைந்துபோகும்.

ஜெயமோகனின் சிறுகதைகள் : அகச்சித்திரமும் புறச்சித்திரமும்

  

மூடியிருக்கும் பெட்டியென மனத்தை உருவகித்துக்கொண்டால், அப்பெட்டிக்குள் என்ன இருக்குமென ஒருவரும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஆபரணங்கள் நிறைந்திருக்கலாம். அல்லது ஆடைகளாகவும் இருக்கலாம். கூழாங்கற்கள்  மணல்கட்டிகள், கரித்துண்டுகள், கொலைக்கருவிகள் என ஏதேனும் ஒன்றாகவும் இருக்கலாம். பாம்புக்கூடைகள், பூந்தொட்டிகள், அமுதம், நஞ்சு என எதுவும் இருக்கலாம். எல்லாச் சாத்தியங்களும் உண்டு. எதையும் முழுக்க ஏற்கவும் இயலாது. நிராகரிக்கவும் இயலாது. மனித இயல்பே ஏற்கவும் இயலாத, நிராகரிக்கவும் இயலாத கலவையாக இருக்கும் சூழலில் மனமும் அப்படித்தானே இருக்கமுடியும். மனம் என்பது எது என்னும் புதிரான ஒற்றைக் கேள்விக்கு எதார்த்த வாழ்வில் ஏதேனும் ஒரு பதிலைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாம். ஆனால் கலைஞனால் அப்படி எளிதாக நகர்ந்துவிட முடிவதில்லை. அவன் தன் கலையின் வழியாக வெவ்வேறு வாழ்க்கைத்தருணங்களை அலசி ஆராய்ந்து ஆயிரம் பதில்களைக் கண்டறிகிறான்.

Sunday, 30 October 2022

பாரதிவாணர் சிவாவின் கதையுலகம்

  

முன்னொரு காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சமாக ஏழு அல்லது எட்டு குழந்தைகள் இருந்தார்கள். வீடு நிறைய குழந்தைகள் இருந்த காலத்தில் அந்த வீட்டில் இருந்த தாத்தாக்களும் பாட்டிகளும் அவர்களுடைய வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தார்கள். குறிப்பாக முன்னிரவுப்பொழுதுகளில் குழந்தைகள் மடிமீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க, அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் நல்ல நல்ல கதைகளை சொன்னார்கள். குழந்தைகளுக்கும் தாத்தா பாட்டிகளுக்கும் இடையில் மகத்தானதொரு உறவு நிலவியது. எல்லாத் தலைவர்களும் தம் வாழ்க்கை வரலாறுகளில் இதைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

பொம்மைகள் - புதிய சிறார் சிறுகதைத்தொகுதி - முன்னுரை

 

அன்புள்ள சிறுவர் சிறுமிகளுக்கு, 

வணக்கம்.

 

ஒரு நாள் எங்கள் வீட்டுக்கருகில் உள்ள ஏரிக்கரையில் நடந்துகொண்டிருந்தேன். அது பெரிய ஏரி. அதன் சுற்றளவு இரண்டு கிலோமீட்டர் இருக்கும். ஏரியில் தண்ணீர் இல்லை. இருக்கும் தண்ணீரும் தூய்மையானதல்ல. அதில் களைகளும் புதர்களும் நாணல்களும் வளர்ந்து மண்டிக் கிடக்கின்றன.

அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் : புதுமையும் புன்னகையும்

 

எங்கள் பள்ளிக்கூட நாட்களை நினைக்கும்போதெல்லாம் என் நினைவுக்கு வரும் ஒரு பெயர் ராஜசேகர். என்னைவிட சற்றே உயரமானவன். நன்றாக மரம் ஏறுவான். அதைவிட நன்றாக கதைசொல்வான். நாங்கள் ஐந்தாறு பேர் எப்போதும் அவனையே சூழ்ந்திருப்போம். அவன் சொல்லும் கதைகளைக் கேட்கத் தொடங்கிவிட்டால் வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்பட்டதும் தெரியாது, வந்து சேர்ந்ததும் தெரியாது. நேரம் பறந்துவிடும். அவன் சொல்லும் கதைகள் அந்த அளவுக்கு சக்தி கொண்டவை.

Sunday, 23 October 2022

ஒரு கூரையின் கீழே - சிறுகதை

 ஊரில் இருக்கிற எல்லா இடங்களிலும் புடவைக்கு இத்தனை ரூபாய், லுங்கிக்கு இத்தனை ரூபாய் என்று கூலிக்கணக்கு இருக்கும் போது, ராமலிங்க நாடார் மாத்திரம் இன்னும் வாரக்கூலிக் கணக்கைத்தான் அமுலில் வைத்திருந்தார். வாரத்துக்கு எழுபத்தைந்து ரூபாய். ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் விடுப்பு. மற்ற நாள்களில் காலை ஏழு மணிக்கு வந்து உட்கார்ந்தால், சாயங்காலம் பொழுது சாய்கிறவரை நெய்யவேண்டுமென்பதில் தயவு தாட்சண்யமற்ற கட்டளை. ஊர் விஷயத்தைச் சொல்லியெல்லாம் அவரோடு வாதாடமுடியாது. வாதாடுகிற மனுஷன் வேலை செய்யமாட்டான் என்பது அவர் அபிப்பிராயம். அடுத்த நிமிஷமேவெளியே போடா!’ என்பார். ‘ஊர்ல அவன் இவ்ளோ தரான், இவன் அவ்ளோ தரான்னு சொல்றதெல்லாம் வீண் பேச்சு. நான் இவ்ளோதா தருவன். இஷ்டமிருந்தா தறிய தொடு. இல்லேன்னா நடய கட்டு!’ என்று கறாராய்ப் பதில் விழும். இன்னொரு தறி எங்கயாச்சும் கிடைக்கிறது என்றால், நடையைக் கட்டிவிடலாம்தான். ஆனால் ஊரில் தறி கிடைப்பதுதான் அபூர்வம். அவனவனும் வேலைக்கு நாயாய் அலைந்தான். மற்றவர்களின் நிராதரவான சந்தர்ப்பமே நாடாருக்கு ஆதாயமாகியது.